Popular Posts

Wednesday, 5 February 2025

திருப்பாவை 26a

திருப்பாவை பாசுரம் 26a

(இணைப்பதிவு)

{26ம் பாசுர விளக்கத்தை பதிவு செய்யும்போது, 26 என்ற எண்ணின் மஹத்வத்தைப் பற்றி இணைப்பதிவாக பதிவிட நினைத்தேன். ஆனால், ஓரிரு சந்தேகங்கள் எழுந்தன. பின்னர் இரண்டு உபன்யாஸகர்களின் உபந்யாஸத்தில் அவர்கள் அளித்த விளக்கங்களை கேட்டபின் தெளிந்தேன். ஆகவே இன்று இதை தனியாகப் பதிவு செய்கிறேன்.}


திருப்பாவை 26ம் பாசுரம் பற்றி, அடியேன் கேட்டறிந்த ஒரு சிறிய விசேஷத்தை இங்கு பதிப்பிடுகின்றேன்.

26 ஒரு விசேஷமான எண்:

26ல் , “2” என்பது “த்வயம்" என்று சொல்லலாம்.

26ல் , “6” என்பது, “விஷ்ணு மந்த்ரம்” என்று சொல்லலாம்

2 + 6 ஐக் கூட்டினால், வருவது, “8” இது அஷ்டாக்ஷரத்தைக் குறிக்கிறது.

2 × 6 ஐப் பெருக்கினால், வருவது , “12” .

இது, த்வாதசாக்ஷரத்தை, (அல்லது த்வாதச நாமங்களைக்) குறிக்கிறது.

நாராயண மந்த்ரம் — 8 அக்ஷரங்கள்

வாஸுதேவ மந்த்ரம் — 12 அக்ஷரங்கள்

விஷ்ணு மந்த்ரம் — 6 அக்ஷரங்கள்

இந்த மூன்றும் விஷ்ணு காயத்ரியில் அடக்கம்.

மொத்தம்–26 அக்ஷரங்கள்;

*26* என்றாலே, பகவான் — எப்படி என்றால்:

1. ப்ரக்ருதி — அதாவது, உலகம். இது மாறிக்கொண்டே இருக்கும் இயல்பை உடையது. இதற்கு, மூன்று குணங்கள் – ஸத்வம், ரஜஸ், தமஸ். இவற்றில், கூடுதல் குறைதல் ஏற்படும்போது, மஹத் என்கிற தத்வம் உண்டாகிறது.

2. மஹத்.

இந்தத் தத்வத்திலிருந்து,

அஹங்காரம் — என்கிற தத்வம் பிறக்கிறது.

3. அகங்காரம்.

இது ராஜஸ அஹங்காரம், தாமஸ அஹங்காரம், ஸாத்விக அஹங்காரம், என்று மூன்று வகை.

பிறகு, பஞ்ச தன்மாத்ரங்கள்;

4. ஆகாச தன்மாத்ரம் (ஒலி)

5. வாயு தன்மாத்ரம் (காற்று)

6.தேஜஸ் தன்மாத்ரம்.(நெருப்பு)

7. ஆப: (ஜல) தன் மாத்ரம்

8. ப்ருத்வி தன் மாத்ரம் (பூமி)

ஆகாசம் – (space) இதற்கு ஓசை என்ற தன்மை இருக்கிறது. 

வாயு – இதற்கு ஆகாயத்தின் தன்மையான ஓசையோடு ஸ்பரிசம் என்ற தன்மையும் (தொடு உணர்ச்சி) உண்டு. காற்று மேலே பட்டால் தொடு உணர்ச்சியால் உணர முடியும். 

தேஜஸ் – அதாவது நெருப்பு. நெருப்புக்கு ஒளி என்னும் தன்மையோடு ஆகாயத்துக்கும் வாயுவுக்கும் இருக்கும் தன்மைகளும் சேர்ந்து ஒளி, ஓசை, ஸ்பரிசம் என்னும் மூன்று தன்மைகள் இருக்கின்றன. 

ஆப: (ஜலம்) – அதாவது தண்ணீர். தண்ணீருக்கு சுவை என்னும் தன்மையோடு ஒளி, ஓசை, ஸ்பரிசம் என்னும் தன்மைகளுமாக மொத்தம் நான்கு தன்மைகள் உள்ளன. இவ்வாறே,

பிருத்விக்கு அதாவது மண்ணுக்கு வாசனை என்ற தன்மையோடு ஒளி, ஓசை, ஸ்பரிசம், சுவை என்ற நான்கு தன்மைகளும் சேர்ந்து மொத்தம் ஐந்து தன்மைகள் உள்ளன. இந்த தன்மைகளையே தன்மாத்திரைகள் என்பார்கள்.

இதன் பிறகு

பஞ்ச ஞானேந்த்ரியங்கள்;

9. சரீரம்

10. கண்

11. காது

12. மூக்கு

13. நாக்கு (ஆக 5 )

பிறகு, பஞ்ச கர்மேந்த்ரியங்கள்

14. வாக்கு

15. கை

16. கால்

17. குறி

18. ஆஸனம்

(ஆக 5 )

பிறகு, (உடலின்) பஞ்சபூதங்கள்,

19. ஆகாசம்

20. காற்று

21. நெருப்பு

22. ஜலம்

23. மண்

(ஆக 5), இதனுடன்,

24. மனம்

இவை அனைத்துஹ்ம் அடங்கிய நமது உடல். 25ம் தத்துவம், அதாவது,

25. ஜீவாத்மா.

பின்னர் 26ம் தத்துவம் அந்தப் பரமனேயாவான்.

26. பகவான் அதாவது, பரமாத்மா.

விஷ்ணு காயத்ரியை ஜபித்தாலும், அஷ்டாக்ஷரம், த்வாதசாக்ஷரம், என்கிற மந்த்ரங்களை ஜபித்தாலும், 26 வது அக்ஷரமாகிய, பகவானை, உபாஸிப்பதாக ஆகிறது.

ஆகவே, மாலே மணிவண்ணா என்னும் 26ம் பாசுரம் மிகவும் விசேஷமானதாகப் பெரியோர்களால், அனுசந்திக்கப் படுகிறது.

ஆண்டாள் திருவடிகளே சரணம்,

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்

அடியேன்,

Thursday, 30 January 2025

திருப்பாவை 30

 திருப்பாவை பாசுரம் 30

(வங்கக்கடல் கடைந்த மாதவனை, கேசவனை)


திருப்பாவையின்  முப்பதாவது பாசுரம். திருப்பாவை சொல்லும் அடியார்கள் ஶ்ரீ கண்ணபிரானின் ப்ரேமைக்கும், க்ருபைக்கும் பாத்திரமாகி, பரமாத்ம ஆனந்தம் அடைவர் என்ற 'பலஸ்ருதி ' பாசுரம்  இதுவாகும்.

இப்பாடலில் தான், தன்னை யாரென்று "பட்டர்பிரான் கோதை" ஆண்டாள் அறிவிக்கிறாள். முதல் பாசுரத்திலும் "நாராயணனே நமக்கே பறை தருவான்" என்று நூற்பயனைச் சொல்லுகிறாள். இந்தக் கடைசி பாசுரத்தில், “செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலை" எண்ணி தியானித்து வணங்கி சரணம் செய்பவர்கள், "எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர்" என்று நூற்பயன் சொல்லி முடிக்கிறாள்.


வங்கக் கடல் கடைந்த மாதவனை கேசவனை,

திங்கள் திருமுகத்து சேய் இழையார் சென்று இறைஞ்சி,

அங்கப் பறை கொண்ட ஆற்றை  அணி புதுவைப்

பைங்கமலத் தண் தெரியல் பட்டர் பிரான் கோதை சொன்ன,

சங்கத் தமிழ் மாலை முப்பதும் தப்பாமே,

இங்கு இப்பரிசுரைப்பார் ஈரிரண்டு மால் வரைத்தோள்,

செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்

எங்கும் திருவருள் பெற்று இன்புறுவர் எம்பாவாய்.


பாசுர விளக்கம்:

"அழகிய கப்பல்கள் உலாவும்  பாற்கடலை கடைந்த அந்த மாதவனை, கேசவனை, சந்திரனை ஒத்த அழகுடைய பெண்கள் பாடி தங்களுக்கு வேண்டிய வரங்களை (பறை) யாசித்துப் பெற்றதை பற்றி சொல்லும் பாசுரம்."

"ஸ்ரீவில்லிபுத்தூரில் பிறந்த தாமரை மலர் மாலை சூடிய, பட்டர்பிரான் பெரியாழ்வாரின் மகளாகிய, கோதையின் (ஆண்டாள்) சங்க தமிழ் மாலையாம் இந்த முப்பது பாடல்களையும் தவறாமல் சொல்பவர்கள், நான்கு வலிமையான தோள்களையும் அழகிய சிவந்த கண்களையும் கொண்ட திருமாலின் அருள் பெற்று என்றும் இன்புறுவர்."


வங்கக் கடல்கடைந்த: 

பாற்கடலைக் கடைந்தவர்கள் தேவர்களும் அசுரர்களுமென்று அவர்கள் எண்ணலாம். ஆயினும் அவர்களுக்கு ஆதாரமாக கூர்மமாக (ஆமை) நடுவில் நின்று, மந்தர மலையைத் தாங்கியவன், பரந்தாமன் அல்லவா? கூர்மமாக முதுகில் மலையைத் தாங்கித் திருப்பாற்கடலைக் கடைந்தது மட்டுமல்ல, மோஹினி அவதாரமெடுத்து அரக்கர்களை மயக்கி, அமிர்தமெல்லாம் தேவர்களுக்கேக் கிடைக்கும் படிச் செய்தவனும் இந்த மாதவன் தான். நாமும் எல்லாக் காரியங்களையும் நான் செய்தேன், நானே செய்தேன் என்று அகங்காரம் கொள்கின்றோமே! நமக்குள்ளே சக்தியாக இருந்து நம்மை ஆட்டுவிக்கும் சூத்திரதாரி இறைவனே அல்லவா?


மாதவனை:

தேவர்களும் அசுரர்களும் அமரத்துவம் தருகின்ற அமுதத்தை வேண்டிப் பாற்கடலைக் கடைவதான செயலுக்குக் கண்ணனிடம் (திருமால்) உதவி வேண்ட, அதைக் காரணமாக வைத்து, அந்த நாராயணன் தன்னுடைய மனதிற்கு உகந்தவளாகிய பிராட்டியெனும் பெண்ணமுதைப் பெற்றான். அதைக் குறிக்கும்படி 'மாதவன்' என்ற பெயரைச் சொல்கிறாள் ஆண்டாள்.


முக்கண்ணன் நஞ்சுண்ண, விண்ணவர் அமுதுண்ண, கண்ணன் பெண்ணமுது கொண்டான் என்பதாக 'ஶ்ரீபராசர பட்டர்' விளக்கம் தருகிறார். உண்மையிலேயே அமுதத்தை அடைந்தவன் திருமால் மட்டுமே.


கேசவனை:

சுருள்முடி கொண்டவனை. கேசவன் மற்றும் மார்கழி மாதத்தின் தொடர்பு பற்றி அறிமுகப் பகுதியிலேயே அறிந்தோமல்லவா?

அடியவருக்குத் துன்பமுண்டாக்கும் கேஸி (குதிரை வடிவம்) முதலான பல அசுரர்களை அழித்தவன்.


திங்கள் திருமுகத்து சேயிழையார்:

பால்நிலா முகமும், நகைகளும் அணிந்த ஆயர்பாடிப் பெண்டிர். ஶ்ரீகண்ணனைக் கண்டதாலே குளிர்ச்சியும், மலர்ச்சியும், மகிழ்ச்சியுமான பற்பல செல்வ நலங்களை அடைந்த அழகிய திங்கள் முகம் அந்த ஆயர்குலப் பெண்களுக்கு!

27ம் பாசுரத்திலே மார்கழி நோன்பிருந்து பெற்ற சூடகம், பாடகம் முதலான பற்பல அணிகலன்களை அணிந்த பெண்கள் அல்லவா? ஆகவே "சேயிழையார்" என்கிறாள் ஶ்ரீஆண்டாள்.


சென்று இறைஞ்சி:             

கடந்த 29 பாசுரங்களில் சொன்னதெல்லாம் செய்து, வணங்கி கண்ணனளித்த பறையினைப் பெற்ற வழிமுறைகளை குறிப்பிடுகிறாள்.


அப்பறை:

ஆயர்பாடியில், ஆயர்குலப் பெண்டிர், நந்தகோபனது மாளிகையில் இருந்த ஶ்ரீகண்ணனைக் கண்டு, அவன் மனைவியாகிய ஶ்ரீநப்பின்னை தேவியை முன்னிட்டுப் பெற்றப் பறை, அந்தப்பறை, அதுபோல வேறொன்று இல்லாத சிறப்பான பறை, அப்பேர்பட்ட பறை.


பட்டர்பிரான் கோதை:

இந்த பூவுலகிற்கே அணியான புதுவை என்கிற ஶ்ரீவில்லிபுத்தூரில் வாழ்ந்த விஷ்ணுசித்தர் பெரியாழ்வாரின் திருமகள் கோதை பிற்காலத்தில் பக்தியால் உணர்ந்து பாடினாள். ஊரும் பேரும் சொல்லிப் பெருமை செய்கிறாள் ஶ்ரீஆண்டாள்.


பைங்கமலத் தண்தெரியல்:

குளிர்ச்சி பொருந்திய தாமரை மாலை அணிந்தவள். அலங்கல், ஆரம், இண்டை, கண்ணி, கோதை, தாமம், தார், தொங்கல், தொடையல், பிணையல், வடம், தெரியல் இவை பலவகை மாலைகள். அதில் தெரியல் என்பது தொங்குமாலை. இப்போது அது "ஆண்டாள் மாலை"யென்றே வெகுஜனங்களால் குறிக்கப்படுகின்றது.


சங்கத் தமிழ்மாலை:

வடமொழி கோலோச்சிய காலத்தில் வாழ்ந்தாலும், வடமொழி நன்கு தெரிந்தவளாயிருந்தாலும், அதிலே யாப்பிசைத்தால் பெருமையுண்டு என்று தெரிந்திருந்தாலும், எல்லோருக்கும் புரியும் வகையிலே,தெய்வத் திருமொழியாம், இனிமைத் தமிழிலே 'ஶ்ரீஆண்டாள்' தனது மேலான திருப்பாவையைப் பாடினாள்.

சங்கம் என்றால் கூட்டம் என்று பொருள். தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள் பலர் கூடியிருந்த அவைக்கு சங்கம் என்று பெயர்.தமிழகத்தின் சங்க காலத்தில், புலவர்கள் இயற்றிய இலக்கியங்களைத் தரம் ஆராய்ந்து, இயற்றியவரைக் கேள்விகள் கேட்டு விளக்கம் பெற்று, ஏற்றுக்கொள்வதா, புறந்தள்ளுவதா என்று சங்கப்புலவர்கள் கூடி முடிவு செய்வார்கள். கோதை வாழ்ந்த காலத்தில் சங்கம் இருந்ததா? இல்லையா? என்பது போன்ற சரித்திர ஆராய்ச்சியில் நாம் ஈடுபட வேண்டியதில்லை.

வேறொருவிதத்தில் ஶ்ரீவைஷ்ணவ நெறியினர் சொல்லும் விளக்கம், கூட்டமாய்க் கூடி அடியவர்களெல்லாம் ஒன்றாக  பாராயணம் செய்யப்பட்ட திருப்பாவை என்னும் தோத்திர மாலை என்று கொள்ளலாம் என்பர்.


முப்பதும் தப்பாமே:

ஒரு இரத்தினமாலையில், ஒரு மணி குறைந்தாலும் அதன் அழகுக்குக் குறைவு ஏற்படுமல்லவா? ஆகவே உயர்ந்த பாமாலையான இந்த 30 பாசுரங்களில் ஒன்றும் குறையாமல், அத்தனையும் பாட வேண்டும். முப்பதையும் இல்லாவிட்டாலும் 29வது பாசுரம் சிற்றஞ் சிறுகாலையை யாவது சொல்ல வேண்டுமென்பது பெரியோர் கூற்று.


இங்கு இப் பரிசுரைப்பார்:

இம்மண்ணுலகிலேயே ஓதிவர,  இறைவன் எங்கே எங்கே என்று அலைய வேண்டிய அவசியமில்லை. அவனுடைய அருளைப் பெறுவதற்கு, இம்மண்ணுலகிலேயே கோதையளித்த திருப்பாவையினை ஓதினால் போதுமே! நாம் ஆயர்பாடியிலிருந்த இடைச்சிகளாகவோ, பரந்தாமனைப் பாடிய ஆழ்வார்களாகவோ, அவன் பணியிலே இருக்கும் ஆச்சார்யர்களாகவோ, ஆண்டாளைப் போல அவனையே மணாளனாக வரிக்கின்றவர்களாகவோ இல்லாமல் போனாலும், இந்த திருப்பாவை முப்பதும் தப்பாமல் சொன்னோமானால், இறையருள் பெறலாம்.


ஈரிரண்டு மால்வரைதோள்:         

வரை = மலை; மலை போன்ற பெரிதான நான்கு தோள்கள்.

சங்கும் சக்கரமும் தாங்கும் இரண்டு, அபயமும் வரமும் அருளும் இரண்டு என்று நான்கு கரங்களைத் தாங்கும் அகண்ட பெருந்தோள்கள்.


செங்கண் திருமுகத்துச் செல்வத் திருமாலால்: 

செவ்வரியோடிய விழிகளும், அழகுமுகமும் கொண்ட, திருமகள் நாயகன் பரமன் அருளால்,


எங்கும் திருவருள்பெற்று இன்புறுவர்:

எல்லா உலகிலும் இன்பமுற்று வாழ்வர். செங்கண், அங்கண், என்றெல்லாம் சொல்லுவது இறைவனது அருட்பார்வை மீதில் அடியவருக்கு இருக்கும் ஆசையினால்! இறைவனது கண்களைத் தாமரைக்கு ஒப்பாகவே பலரும் பாடியிருக்கிறவாறு ஆண்டாளும் பாடியுள்ளாள்.


பாசுர விசேஷம்:

சேயிழையார்:

ஆச்சார்யர் உபதேசம் பெற்று, அடியவர் குழுவோடு கூடி சரணாகதி செய்து, இறைத்தொண்டு செய்கின்றவர்களே சேயிழையார், நேரிழையீர்!

கோவிந்த நாமத்தைப் போலவே கோதா நாமத்திற்கு பொருளுண்டு. கோ என்றால் நல்ல உயர்ந்த கருத்துகள் என்று பொருள் கொண்டால், ததாயதே - தா- என்றால் தருவது என்று கொண்டால், கோதா - அத்தகைய "உயர்ந்த கருத்துக்களைத் தந்தவள்" என்று பொருள். திருப்பாவை முழுதுமே மிகவுயர்ந்த வேத ஸாரத்தை உள்ளடக்கியது தான்.


பைங்கமலத் தண்தெரியல் பட்டர்பிரான்கோதைசொன்ன:               

பசுமை பொருந்திய திருத்துழாய் மாலையும், செந்தாமரை மாலையும் அணிந்த கோதைக்கு, ஶ்ரீவில்லிப்புத்தூர் பட்டர்பிரானாகிய பெரியாழ்வார் தந்தை மட்டுமல்ல, ஆச்சார்யரும் அவரே! இங்கே தன்னை ஆண்டாள் குருவின் சிஷ்யையாகத் தான் அடையாளங் கூறிக்கொள்கிறாள். ஶ்ரீமதுரகவியாழ்வார் தன்னுடைய ஆசிரியரான ஶ்ரீநம்மாழ்வாரை முன்னிட்டே பாசுரங்கள் இயற்றியதைப் போலவே, ஶ்ரீஆண்டாளும் தன்னுடைய ஆசிரியரை முன்னிட்டே, சரணாகத சாரமாக விளங்கும் இந்தத் திருப்பாவையைப் பாடியிருக்கிறாள். இதுவே திவ்ய பிரபந்தங்களுள், திருப்பாவைக்கு இருக்கும் தனிச்சிறப்பு என்று ஶ்ரீவைஷ்ணவ குருபரம்பரையினர் கருத்து.


செல்வத் திருமாலால்:       

இப்பாசுரம் தொடங்கும் போதும் திருமகள் தொடர்பு, முடியும் போதும் திருமகளுடன் கூடிய திருமால், என்று உறுதியிடப் படுகிறது.


ஸ்ரீஆண்டாள் கருணையுடன்,  அடியேனுடைய திருப்பாவை பதிவுகளை, ஸ்ரீ ஆண்டாளின் மங்களாசாசனுத்துடன் நிறைவு செய்கிறேன்.


நல்ல திருமல்லி நாடியார்க்கு மங்களம்!

நால்திசையும் போற்றும் எங்கள் நாச்சியார்க்கு மங்களம்!

மல்லிகை தோள் மன்னனாரை மணம் புரிந்தார்க்கு மங்களம்!

மாலை சூடிக்கொடுத்தாள்  மலர்தாள்களுக்கு மங்களமே!!


ஸ்ரீஆண்டாள் திருவடிகளே சரணம்!

ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்!!

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்!!!

அடியேன்,

திருப்பாவை 29

 திருப்பாவை பாசுரம் 29

(சிற்றஞ் சிறுகாலே வந்துன்னை)


தன்னை ஒரு ஆயர்பாடிப் பெண்ணாக, கோபிகையாக உருவகப்படுத்திக் கொண்டு ஆண்டாள் சொன்ன கடைசி திருப்பாவைப் பாசுரம் இதுவாகும். அடுத்த பாசுரம், திருப்பாவைக்கான 'பலஸ்ருதி' ஆண்டாள் தன் வாய்மொழியாகவே உரைப்பது.


"நாராயணனே நமக்கே பறை தருவான்" என்று முதல் பாசுரத்தில் உரிமையோடு சொன்ன ஆண்டாள், இந்த 29-வது பாசுரத்தை, "எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும், உனக்கே நாமாட் செய்வோம்" என்று தெளிவான நோக்கத்தோடு அறுதியிட்டு நிறைவு செய்கிறாள்!

எளிமையாகச் சொன்னால் பரமனிடம் அடியவர் கூட்டத்துடன் சரணாகதி, அவனுக்கு பல்லாண்டு பாடுதல், அவன் அருளும் மோட்சம், பின் சதாசர்வ காலமும் பகவத் சேவை,  இது தான் கோதையின் பிரபந்த சாரம்.


இந்த பாசுரம் பகவத் தாஸ்யத்தை (இறையடிமை செய்தல்) போற்றுகிற பாசுரம். பதினைந்தாம் பாசுரமான "எல்லே இளங்கிளியே" பாசுரத்தில் பாகவத தாஸ்யம் (அடியார்க்கு அடிமை செய்தல்) சொல்லப்பட்டது. இரண்டுமே, திருப்பாவைக்கு பெருமை சேர்க்கும் பாசுரங்களாக வைணவப் பெருந்தகைகளால் போற்றப்படுபவை. மிகவும் உயர்வான 'கோவிந்த' நாமத்தை மூன்றாவது முறையாக குறிப்பிடும் பாசுரம் இது . மற்ற பாசுரங்களில், இடைச்சிகள் இறைவனிடம் பறை தருமாறு வேண்டுகின்றனர், சரணாகதி செய்வதைப் பற்றிப் பேசுகின்றனர். இப்பாசுரத்தில் சரணாகதி செய்து நாம் பெறக்கூடிய பறை என்ன என்பதன் பொருளை, அதன் பலனை இறைவனுக்கே அர்ப்பணிக்க வேண்டியதைப் பற்றி விரிவாகப் விளக்குகின்றனர்.


சிற்றம் சிறு காலே வந்து உன்னை சேவித்து உன்

பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்,

பெற்றம் மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து  நீ

குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது,

இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா*_

எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்  உன் தன்னோடு

உற்றோமே ஆவோம் உனக்கே நாம் ஆட்செய்வோம்,

மற்றை நம் காமங்கள் மாற்றேலோர் எம்பாவாய்!


பாசுர விளக்கம்:  

"மிக்க விடியற்காலைப் பொழுதில் உன்னிடத்திற்கு வந்து உன்னை வணங்கி உனது தங்கத் தாமரை ஒத்த திருவடிகளை மங்களாசாசனம் செய்ய நாங்கள் வந்திருப்பதன் நோக்கத்தை நீ கேட்பாயாக ! மாடுகளை மேய்த்து அவை உண்ட பின் உண்ணுகின்ற குலத்தில் பிறப்பெடுத்த நீ எங்களின் பணிவிடைகளை ஏற்காமல் செல்லுதல் ஆகாது!"

"ஓ கோவிந்தனே ! இன்று உன் அருளை (பறை) பெறுவது மட்டும் எங்கள் விருப்பமன்று. என்றென்றும், ஏழேழு பிறப்புகளிலும் உன்னோடு பொருந்தியவராக, உனது நெருங்கிய உறவினராக நாங்கள் இருக்க அருள்வாயாக!  உனக்கு மட்டுமே அடிமை செய்பவராக நாங்கள் தொடர்ந்து இருக்க வேண்டும்! இவற்றுக்கு மாறுபட்ட எங்கள் ஆசைகளை நீக்கி அருள வேண்டும்!"

முதல் பாசுரத்தில் நாராயணனே நமக்கே பறை தருவான் என்று சொல்கிறாள். இந்தப் பாசுரத்தில் அந்த நாராயணனே பறை என்கிறாள். எப்போதும் இறைப்பணியே செய்வது என்ற தங்கள் உள்ளக்கிடக்கையை சொல்லும் இடைச்சியர்கள் பாசுரம் . ஸ்ரீமதே நாராயணாய நம: எனும் த்வய மந்திரத்தின் இரண்டாம் வரியைக் குறிக்கின்றது இப்பாசுரம். வைணவக் கோயில்களில் 'சாற்றுமுறையாக' ஓதப்படும் பாசுரங்கள் 29 மற்றும் 30 ஆவது பாசுரங்கள்.

15 ஆம் பாசுரத்தில் இறைவனின் அடியார்க்கு அடியாராக இருப்பதன், பாகவத தாஸ்யத்தின் பெருமை பேசப்படுகின்றது. இந்த 29 ஆவது பாசுரத்தில் ஆண்டவனுக்கு அடியாராக, பகவத் தாஸ்யத்தில் ஈடுபடுவதைப் பற்றிக் கூறி சரணாகதி தத்துவத்தின் பலனே இறைவனுக்கு என்றும் பணிசெய்வது தான் என்று முடிக்கப்படுகிறது. 28 ஆம் பாசுரத்தில் த்வய மந்திரத்தின் முற்பகுதியான உபாயம் (இறைவனை அடையும் வழி) குறித்து, அதாவது சரணாகதியை உபாயம்  என விளங்குகிறாள் ஆண்டாள்.

இப்பாசுரத்தில் த்வய மந்திரத்தின் பிற்பகுதியான உபேயம்  (அடையும் பேறாகிய இறைப்பணி) குறித்து விளக்குகிறாள். இறைவனைச் சரணம் செய்து அடையும் வீடுபேற்றின் நோக்கமே, என்றும் இறைவனோடு இருந்து நம்மாலான தொண்டினை செய்வதே உண்மையான பேரின்பம் என்ற தன் எண்ணத்தை உறக்கக் கூறி முடிக்கிறாள்.

பாசுர விசேஷம்:

சிற்றம் சிறுகாலை:  குளிரின்னும் நீங்காத விடியல் காலத்திலே, மிகவும் சிறிதாகவே கண்ணுக்குப் புலப்படக்கூடிய, அழகியதும் சிறியதுமான குட்டிக்கண்ணன் காலைக் காண, அவன் காலடியில் பணிந்து தொழ, இந்த ஆயர்பாடிப் சிறுமிகள் சிறுகாலைப் பொழுதில், அதாவது விடியல் வேளையிலேயே வந்தனராம்! முனிவர்களும் யோகிகளும் உள்ளத்தில் குடி கொண்டுள்ள இறைவனது யோக நித்திரை கலையாமல் மெல்லக் கண்விழித்து அரியென்னும் பேரரவம் செய்யும் காலை நேரம் என்பர்.


வந்துன்னை சேவித்து:

அடியவருக்கு அருளும் உன் கருணையை எண்ணித் தொழுது. ஏற்கனவே சொன்னது போல, இவர்கள் மார்கழிக் குளிரில் தன்னைத் காண வந்ததே கண்ணனுக்குப் பெரிதும் மகிழ்ச்சியளிக்கிறது. வந்தவர்கள் மேலும் கண்ணனைக் கரங்கூப்பித் தொழுது (சேவித்து) நிற்பதைக் கண்டு அவன் மனம் பாகாய் உருகிவிடுமாம். அவன் அவ்வளவு கருணையாளன்.


பொற்றாமரையடியே போற்றும் பொருள் கேளாய்!:        

கண்ணனைப் பார்த்து "மிகவும் கஷ்டப்பட்டு உன்னைச் சரணடைந்தேன். ஆகவே, உன் தாமரைத் திருவடிகளை போற்றுவதற்கான காரணத்தை நீ கேட்டே ஆக வேண்டும். நீ எங்கள் குலத்தில் வந்து உதித்தவன். அதற்காகவேனும், நான் சொல்ல வருவதை நீ கேட்டுக் கொண்டாக வேண்டும். என்9 குற்றேவலை நீ கொள்ளத் தான் வேண்டும்" என்று தன்னை ஒரு இடைச்சிறுமியாக எண்ணிக் கொண்டு சூடிக் கொடுத்த ஶ்ரீகோதை ஆண்டாள் நாச்சியார் குறிப்பால் சொல்வது சிறப்பாகும்.


பெற்றம்மேய்த்து உண்ணும் குலத்தில் பிறந்து:

பசுக்களை மேய்க்கும் ஆயர்குலத்தில் கண்ணனாகப் பிறந்த இறைவா. பசுக்கள் உணவு உட்கொள்ளாமல் இடையர்கள் உண்ணுவதில்லை. இடையர்களைக் காக்கும் பெரும் இடையனாம் கண்ணனும், அவனது பசுக்களான ஜீவர்களின் விருப்பத்தைப் பூர்த்தி செய்யாமல் இருக்கக் கூடாது என்று குறிப்பாகத் தூண்டுகிறாள், ஆண்டாள்.


உன் பொற்றாமரை அடியே போற்றும் பொருள் கேளாய்:  

இங்கே 'போற்றும்' என்றால், இறைவனிடம் எதையோ எதிர்பார்த்துப் போற்றுவதல்ல. இறைவனைப் போற்றுவதே நாம் பெரும் பலன், இப்பிறவி பெற்றதன் பொருள் என்று உணர்ந்து, வேறு பலனெதுவும் எதிர்பாராமல் இறைப்புகழைப் போற்றுவது.


பொற்றாமரை அடியே: இறைவனை அடைவதற்கு ஒரே வழி - உபாயம் அவன் திருவடிகளில் சரணம் செய்வது தான். வேறெந்த வழியிலும்  ஈடுபடுவது  (உபாய விரோதி) பயனற்றது.


உன்தன்னோடு உற்றோம் ---- ஆட்செய்வோம்:               இறைவனை சரணடைந்த பின் நாம் அடையக் கூடிய ஒரே இன்பம் (ப்ராப்யம்), அவனுக்குப் பணி செய்வதே (கைங்கர்யம்). வேறெந்தப் பலனும் எதிர்பார்ப்பது தவறு (ப்ராப்ய விரோதி).


சென்ற 28ம் பாசுரத்தில் "உன்னுடனான உறவைப் பிரிக்கவே முடியாது" என்று பாடியவள் இப்பாசுரத்தில் ஒரு படி மேலே போய், "கண்ணா! “(எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும்) எக்காலத்திலும்  நீயே எங்கள் உறவு, இதற்கு நீ அருள வேணும்! இந்த நோக்கத்திலிருந்து எங்கள் மனம் திரும்பாமல் இருக்கும்படியான வைராக்கியத்தை எங்களுக்கு அளிப்பதும் உன் சித்தமே" என்று இடைச்சியர் சொல்வதாக ஶ்ரீகோதை ஆண்டாள் நாச்சியார் சாதுர்யமாக எல்லா பொறுப்புகளையும் அப்பரந்தாமன் மேலேயே  விட்டு விடுகிறாள்.


இப்பாசுரத்தில் மூன்றாவது முறையாக கோவிந்த நாமம் (இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா) எழுப்பப்படுகிறது. இதற்கு முன், 27வது பாசுரத்தில், "கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா" என்றும், 28வது பாசுரத்தில் "குறைவொன்றும் இல்லாத கோவிந்தா" என்றும் ஶ்ரீஆண்டாள் பாடியுள்ளாள். பொதுவாக, சங்கல்பத்தின் போது, "கோவிந்த கோவிந்த கோவிந்த:" என்று மூன்று முறை சொல்வது ஶ்ரீவைஷ்ணவ மரபு.


நோன்புக்காக பறை வேண்டுவதின் சரியான அர்த்தம் இப்பாசுரத்தில் வெளிப்பட்டுள்ளது. அதாவது, உன் திருவடிகளில் கைங்கர்யம் செய்திருத்தல், உன்னை விட்டுப் பிரியாதிருத்தல், மேற்கூறிய இரண்டுக்கும் ஒவ்வாத எண்ணங்களை நீக்க வேண்டுதல் ஆகியவையே ஆகும்.


இப்பாசுரத்தில், சொரூப விரோதியும், பிராப்ய விரோதியும் விலகுவது சொல்லப்பட்டுள்ளது.

த்வயத்தின் முற்பகுதியான உபாய சொரூபம் சென்ற பாசுரத்தில் (கறவைகள் பின் சென்று) வெளிப்பட்டது. இதில், பிற்பகுதியான உபேய சொரூபம் (பரம்பொருள் வடிவம்) வெளிப்படுகிறது.


குற்றேவல் எங்களைக் கொள்ளாமல் போகாது:  

குற்றேவல் என்றால் - குறு ஏவல். இறைவனால் ஏற்றுக்கொள்ளப்படுகின்ற "சிறு தொண்டுகள்" செய்தல். காலால் இட்டதைத் தலையால் செய்வதே குற்றேவல்.

"எங்களுக்குப் பெருமை தந்த உனக்கு எம்மால் ஆனதான நாங்கள் புரியும் தொண்டினை ஏற்க வேண்டும். அப்படிப் பட்டத் தொண்டை உனக்கு நாங்கள் செய்ய வேண்டும் கண்ணா! அதை நீ மறுக்கக் கூடாது! இந்தப் பசுக்களைக் காப்பதற்கு நாங்கள் பலர் இருக்கிறோம். ஆனால் எங்கள் எல்லோரையும் சேர்த்துக் காப்பவன் நீ ஒருவன் தானே! உனக்கு அடி பணிந்து தொண்டு செய்வது எங்களுக்குப் பெருமை. அதை எங்களுக்குக் கட்டாயம் அளிக்காமல், தவிர்க்காதே! " என்கிறாள்.


உனக்கேநாம் ஆட்செய்வோம்:       

"எங்களைக் காப்பது உன் தொழிலே அன்றோ? அது போன்றே எங்களால் சேவகம் செய்யப்பெற வேண்டியவனும் நீயன்றோ? அதை ஏற்காமலிருப்பது உன் இயல்புக்கு அழகில்லையே,"என்று சொல்கிறாள்.


மற்றை நம் காமங்கள் மாற்று:

உனக்குப் பணி செய்யும் ஆசையைத் தவிர நாங்கள் கொள்ளுகின்ற வேறெந்த விருப்பங்களையும் போக்கிவிடு. "எப்போதும் எங்களைப் பற்றியே எண்ணிக்கொண்டு, ஆசை விருப்பம், கோபம் தாபமென்று சிற்றின்பங்களில் உழன்று கொன்டு, ஸம்ஸாரத்திலேயே நினைவை வைத்துக் கொண்டிருப்பது எங்கள் பிழை. உனக்குத் தொண்டாற்றுவதைத் தவிர்த்ததான எங்களது வேறு விருப்பங்களை, லௌகீக ஈடுபாடுகளை, மாற்றித் திருத்தி விடு!" என்கிறாள் நம் அன்னை ஶ்ரீகோதை ஆண்டாள்.


எற்றைக்கும் ஏழேழ் பிறவிக்கும் உன்தன்னோடு:

பரமபதத்திலோ, தேவருலகிலோ, மண்ணுலகிலோ, நீயெங்கு தோன்றினாலும் தானும் கூடவே தோன்றும் உன்னை என்றும் நீங்காமல் இருக்கும் திருமகள் போல், நாங்களும் உன்னோடே எப்போதும் இருந்து பணி செய்யும் பேறு வேண்டும். இது  ஸ்ரீமதே நாராயணாய நம: எனும் த்வய மந்திரத்தின் இரண்டாம் வரியைக் குறிக்கின்றது.


உன்தன்னோடு உற்றோமே:  

திருமந்திரத்தின் பிரணவத்தை குறிக்கும் சொற்றொடர்.

உனக்கே நாம் ஆட்செய்வோம். உன்னையே சரணம் அடைந்தோம். மாம் ஏகம் சரணம்  எனக் கண்ணன் சொன்னதற்கிணங்க, பரமன் ஒருவனையே பணிதல்,

திருமந்திரத்தின் நாராயண ஒலியைக் குறிக்கும் சொற்றொடர்.


மற்றை நம் காமங்கள் மாற்று:

தன்னைச் சரணடைந்த பின்னர், அந்த ஜீவனை வேறெதிலும் சிக்கவிடாமல், அப்படி வழிமாறிப் போனாலும் தடுத்தாட்கொண்டு அருள் செய்யும் கருணை உடையவன் இறைவன் என்று பொருள். திருமந்திரத்தில், எதுவும் எனதல்ல எல்லாம் பரமனுடையதே என்பதைக் குறிக்கும் 'நமஹ'என்ற ஒலியினைக் குறிக்கும் சொற்றொடர்.


மற்றைக் காமங்கள் மாற்று:                                நமக்கு நம் மனத்தைக் கட்டுப்படுத்தி, ஒருமுகப்படுத்தி தியானத்திலாழ்ந்து, இறைவனைக் காண வேண்டுமானாலும், அதுவும் இறைவன் அருளால் தான் முடியும். ஆகவே தான் ஆசைகளால் அலைப்புறுத்தப் பட்டு அங்குமிங்கும் பாய்கின்ற மனத்தைக் கட்டுப்படுத்த, ஆண்டவனிடமே முறையிடுகிறாள் ஶ்ரீஆண்டாள்.

அர்ஜுனன் கீதையில் கண்ணனிடம் சொன்னதையொட்டியே இவ்வரி உள்ளதென்பர்.

1ஞ்ச1லம் ஹி மன: க்1ருஷ்ண ப்1ரமாதி2 3லவத்3த்3ருடம் |
1ஸ்யாஹம் நிக்3ரஹம் மன்யே வாயோரிவ ஸுது3ஷ்க1ரம் ||

"(பகவத் கீதை 6-34)

"கண்ணா, மனம் சஞ்சலமுடையது; தவறும் இயல்பினது, வலியது; உன்னுடையது. அதைக் கட்டுப்படுத்துதல் காற்றைக் கட்டுவது போல் மிகவும் கஷ்டமான செய்கையென்று நான் மதிக்கிறேன்." என்கிறான் அர்ச்சுனன்.


தன்னை அடைந்த அடியவரின் குறைபாடுகளைக் கண்டு வெறுத்து ஒதுக்காதவன் பரந்தாமன். ஆகவே, அவன் மீதான பற்றுதலைத் தவிர அடியார்களுக்கு இருக்கக் கூடிய வேறு ஆசைகளை, குறைகளை நீக்கி, எப்போதும் தன்னையே நாடும் குணத்தை அருள்வான். ஆகவே இப்படியொரு கோரிக்கையை வைக்கிறாள் ஶ்ரீகோதை ஆண்டாள்.


அடுத்த பதிவில், திருப்பாவை பிரபந்தத்தின் பலஸ்துதியான 30ம் பாசுரத்தை சேவிப்போம்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்,

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

அடியேன்,

திருப்பாவை 28

 திருப்பாவை பாசுரம் 28

(கறவைகள் பின் சென்று)    


சென்ற பாசுரத்தில் (கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!) கோபியர், ஆபரணங்கள் ஆடைகள், பால் சோறு போன்றவற்றைக் கண்ணனிடம் கேட்டதால், அம்மாயவன், "நீங்கள் அழியக்கூடிய சிற்றின்பங்களை என்னிடம் வேண்டுவது போல் தோன்றுகிறதே" என்று புன்னகைக்க, கோபியர் அதற்கு பதிலாக, தங்களது உள்ளார்ந்த விருப்பம், கண்ணனுக்கு கைங்கர்யம் செய்து எப்போதும் அவன் உடன் இருப்பதே என்று கூறுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது சிறப்பு ஆகும். சரணாகதித்துவத்தின் பெருமையை இப்பாசுரம் சொல்வதை விட அருமையாக விளக்க முடியாது.


கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்,

அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்

பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்,

குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன் தன்னோடு

உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது,

அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்

சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே,

இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.


பாசுர விளக்கம்:

"பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்டு உடல் வளர்ப்பவர்களும், ஞானமிலாத சொற்ப அறிவு படைத்தவர்களும் ஆன நாங்கள், எங்கள் பழந்தமிழ் தொல்குடியான ஆயர் குலத்தவனாக உன்னைப் பெற்றடைய பெரும் புண்ணியத்தைச் செய்துள்ளோம். யாதொரு குறையும் இல்லாத 'கோவிந்தன்' என்னும் பெயரினைக் கொண்ட கண்ணபிரானே!"

"உன்னுடன் நாங்கள் கொண்டுள்ள உறவை யாராலும் எக்காலத்திலும் பிரிக்க முடியாது. அற்ப அறிவுடைய, சூதுவாது தெரியாத சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மாதவன் போன்ற பெயர்களிட்டு) ஒருமையில் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களை நீ தந்தருள்வாயாக!" என்கிறாள்.

கண்ணனுக்குத் தர தங்களிடம் ஏதும் இல்லை என்ற தங்கள் "கை முதல் இல்லா" தன்மையை இடைச்சியர் "கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்" என்று முதலடியிலேயே சொல்லி விடுகின்றனர்! ஒரு விதத்தில் ஶ்ரீஆண்டாள் நாச்சியாரின் ஆற்றாமை இப்பாசுரத்தில் இழையோடுகிறது.

அவர்கள் கேட்பது, “உந்தன் கருணைக்கு குறைவுண்டோ? எங்கள் குற்றம் குறைகளை மன்னித்து, நாங்கள் விரும்புவதை அருளி, எங்களை உன்னுடன் சேர்த்துக் கொள்" என்று சரணாகதியின் உன்னதத்தை கோபியர் வெளிப்படுத்துவதாக கோதை நாச்சியார் இயற்றியுள்ள இப்பாசுரம், வைணவப் பெருந்தகைகளால், மிகவும் சிலாகிக்கப்பட்ட ஒன்றாகும்!


இப்பாசுரத்தில் கோபியர் மூன்று முறை, பேரன்பில் கண்ணனை ஒருமையில் விளிக்கின்றனர். அதாவது, 

1) உன்றன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்.

2) உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது.

3) அன்பினால் உன் தன்னைச் சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே.


துயிலெழுந்து கோபிகைகளை அரவணைத்துக் கொண்ட கண்ணன், "நான் உங்களுக்கு நீங்கள் கேட்டதையெல்லாம் அளிக்கிறேன், பதிலுக்கு நீங்கள் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்று கேட்க அதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஆண்டாள் இயற்றிய இந்தப் பாசுரம் மிக உயர்ந்த பொருட்செறிவு கொண்டது.


இந்தப் பாசுரமும், அடுத்து வரவிருக்கும  இருபத்தொன்பதாம் பாசுரமும் ஶ்ரீவைஷ்ணவ நெறியின் மந்திர இரத்தினம் என்று கொண்டாடப்படும் "த்வய மந்திரத்தின்" விளக்கப் பாசுரங்கள். முதல் பாசுரத்தில் "நாராயணனே நமக்கே பறை தருவான்" என்று சொன்னதற்கான ஆழமான விளக்கமாக இந்த இரண்டு பாசுரங்களும் அமைகின்றன.

அதாவது, இறைவனே அடையத் தக்கவன், - ப்ராப்யம், உபேயம். அவனை அடைகின்ற வழியும் அவனே, ப்ராபகம் உபாயம். ஸம்ஸாரமென்னும் கடலைக் கடப்பதற்கு ஜீவாத்மாக்களுக்குப் படகாக இருப்பவனும் ஆண்டவனே, அந்தக் கடலைக் கடந்து, ஜீவர்கள் அடையக்கூடிய பரமாத்ம நிலையும் ஆண்டவனே! வழியாகவும், வழி சென்று சேர்க்கும் இடமாகவும் ஒரு பயணம் உண்டென்றால் அது ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் பயணமே!


இப்பாசுரத்தில் தான் ஆண்டாள் முதன்முதலாக 'இறைவன்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறாள் . "நாங்கள் பறையும், பரிசுகளும் வேண்டி உன்னைத் தொழுது வந்ததெல்லாம் உனக்குக் குற்றேவல் செய்யவே அன்றி வேறொன்றும் இல்லை" என்று கண்ணனிடம் உளப்பூர்வமாகத் தெரிவிக்கிறாள். "அறிவற்ற எங்களின் பிழைகளைப் பொறுத்து எங்களுக்கு அருள் செய்" என்று மன்றாடுகிறாள். "எங்களிடம் பல குறைகளிருப்பினும், உன் கருணைக்கு ஒரு குறைவுமில்லை ஆதலால் எங்களைக் காத்தருள் கோவிந்தா" என்று கோவிந்த நாமத்தைக் கொண்டாடும் பாசுரம்.


ஆகிஞ்சன்யம் (கையறு நிலை), நைச்சியம் (தங்கள் சிறுமையை உணரும் அறிவு), பரமனின் ஸௌலப்யம் (அனைத்து அடியவராலும் சுலபமாக அடையத் தக்கவன் இறைவன் எனும் தெளிவு), பரத்துவம் (நாராயணனே இறையென அறிதல்), ஜீவாத்மா-பரமாத்மாவுக்கு உள்ள சம்பந்தம், அபராத க்ஷமணம்: (நம் தவறுகளை இறைவன் மன்னிப்பான் என்ற தெளிவு), சித்தோபாயம் -பரமனை அடைவதற்கு ஆகிய பரமனே வழி என்று தெளிதல் என்றிவையான இறைவனை சரணாகதி செய்வதற்கான அறிவுத்தெளிவுகள், போன்ற ஏழு நிலைகளை இப்பாசுரம் விளக்குகிறது. 

த்வயத்தின் முதல் வரியின் விளக்கத்தை, அடியவர் இறைவனை அடையத் தாமாக செய்ய வேண்டியது என்ன என்பதற்கான விடையை இப்பாசுரம் கொண்டுள்ளது. இறைவனை அடைவதற்குத் தாங்கள் செய்யக்கூடியது சரணாகதி மட்டுமே என்று அறிவிக்கும் பாசுரம். வைணவ நெறியின் இரஹஸ்யத் த்ரயத்தின் மிக முக்கியமான மந்த்ரமான த்வய மந்திரத்தின் முதல் வரியின் விளக்கமே இப்பாசுரத்தின் உட்பொருள். (இரண்டாவது வரி அடுத்த பாசுரம்). த்வயத்தின் முதல் வரி (ஸ்ரீமன் நாராயண ஶரணெள சரணம் ப்ரபத்யே)


கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்:                              "இறைஞானமெல்லாம் அறியக்கூடிய வாய்ப்பினை நல்கும் அறிஞர்களின் நட்பெதுவும் எங்களுக்கு இல்லை. வாய்பேசாத ஆநிரைகள் மேய்த்துண்ணும், மாலையானதும் மேய்ச்சல் முடித்து வீடு திரும்பி அடையும் சாதாரணர்கள்.

ஆகையினாலே அறிவு பெறுவதற்கு நாங்கள் விரும்பினாலும் அதற்கான வழியே இல்லாதவர்கள் நாங்கள்!" என்று தங்களைப் பற்றி அறிவித்துக் கொள்கிறாள் ஆண்டாள்.


அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து:

 "உங்களுக்குத் தான் அறிவில்லை, உங்கள் குலத்திலாவது யாருக்காவது அறிவுண்டா?" எனக் கண்ணன் கேட்க அப்படியும் இல்லையென்று கூறுகிறார்கள். சரி தவறுகள் என்னவென்றெல்லாம் தெரியாதவர்கள், சூது வாதற்றவர்கள், இறைஞானம் பெறாதவர்கள் எங்கள் குலத்தினர் என்கிறீர்கள். "நீங்களே பிறவியில் அறிவு பெறாவிட்டாலும், பெரியோர் கூறியிருக்கும் கருத்துகளைப் படித்தாகிலும் இருக்கிறீர்களா?" என்றால் இல்லையென்றே கூறுகிறார்கள். "எங்களைப் பற்றிய அறிவே எங்களுக்கு இல்லை, இதில் இறையறிவு எங்கிருந்து வருவது?" என்று கூறுகிறார்கள்.


உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்:                          என்னதான் பெருமையென்று பார்த்தால், ஆயர்குலத்தில் கண்ணன் தோன்றியதே பெருமை. "எங்களுக்கு அறிவெதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் எங்கள் மத்தியில் நீ வந்து தோன்றி பெருமை செய்கின்ற அளவுக்குப் புண்ணிய பலன் எங்களுக்கு இருக்கிறது. அது தான் கண்ணா எங்களுக்கு இருக்கும் ஒரே ஏற்றம் !" என்கிறார்கள். இறைவனே நமக்கு இரங்கி (ஸௌஸீல்யம்) நம்மிடையே வருகின்ற எளிமைத்தன்மையும் (ஸௌலப்யம்) சுலபமாய் அவனை அண்டிப் பணிய நமக்கிருக்கும் வாய்ப்பையும் குறிக்கிறது.


குறையொன்றுமில்லாத கோவிந்தா:

எங்களிடம் மேற்கண்ட குறைகளிருந்தாலும், எமக்கருளும் உன்னிடம் ஒரு குறைவும் இல்லை, இறைவா! கண்ணனைக் காண வந்த ஆய்ச்சிகளுக்கு அவன் என்ன இப்படிக் கேள்வி கேட்டு ஆராய்கிறானே என்று தோன்ற, ஆண்டாளும் "கண்ணா, எங்களிடம் நீ நிறை குறை என்று பார்த்தால் பற்பல குறைகள் இருக்கிறது. எங்களை, எங்கள் தகுதியைப் பார்த்து ஏற்றுக் கொள்ளவும், தள்ளி விடவும் எண்ணாதே ! எங்களிடையே வந்து நீ தோன்றியிருந்தாலும், எங்களைப் போன்ற குறைகள் உன்னிடம் இல்லையே இறைவா! குறைவாயிருப்பவர்களுக்கு, குறையொன்றுமில்லாமல் நிறைய இருப்பவர்கள் தருவது தானே முறை?" என்கிறாள்.

எங்கள் எல்லோரையும் காப்பவன் என்பதால் கோவிந்த நாமத்தைப் பெற்றவன் ஆயிற்றே?" அவனே அடையும் இடமாகவும் (ப்ராப்ய), பயணிக்கும் வழியாகவும் (ப்ராபக)  இருக்கும் ஒருமித்தத் தன்மையினை (ஸங்க்ரஹம்) இச்சொல்லாடல் உணர்த்துகிறது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போலே.


உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது:                "நாங்கள் எல்லோரும் உன்னைச் சேர்ந்தவர்கள். அப்படியே நாங்கள் குற்றங்குறை செய்திருந்தாலும், எங்கள் மீது சினங்கொண்டு நீ தண்டிக்க முற்பட்டால், அது உன்னில் ஒரு பகுதியையே கடிந்து கொள்வதாகாதா? இதை உன்னாலும் கூட மறுக்கவோ, மாற்றவோ முடியாதே! "இற்றைக்கும் ஈரேழ் பிறவிக்கும் இறைவன் ஒருவனே நம் உறவு, அது என்றும் மாறாது. கண்ணனே இறைவனென்று உணர்ந்து கொண்டார்களல்லவா?


அறியாத பிள்ளைகளோம்: 

ஆணவத்தினால் அல்லாமல் ஆண்டவன் மீதில் அவர்களுக்கு இருக்கும் அன்பினால் ஏற்பட்ட உரிமையினால் அவ்வாறு செய்வதும், அப்படியானவர்களின் கர்ம ஞான பக்தி யோகங்கள் எதுவும் தெரியாத, உலக வழக்கங்கள் அறியாத நிலையும் குறிக்கப்படுகின்றது.


அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனவும்:  பெரியனவாம் மறைகளுக்கும், பெரியவனான உன்னை எளிமையாக நீயாரென்று தெரியாமல், உன்மேல் கொண்ட அன்பு மிகுதியால் இறைவனான உன்னை நாராயணனென்றும், கண்ணனென்றும்,மாயன், மாதவன், தாமோதரனென்றும், பெயரிட்டு ஒருமையில் அழைத்தோம். இது அறியாமையாலும், சிறுவயதின் காரணமாகவும், அன்பினால் ஏற்பட்ட பிழைகள், இவற்றைக் கண்டு கோபம் கொள்ளாமல் மன்னித்துவிடு என்று கேட்கிறார்கள்.


கோவர்தன மலையைக் குடையாய்த் தாங்கி கோகுலத்தைக் காத்த பின்னே, கண்ணனுக்கு மிகவும் உயர்ந்ததான கோவிந்த நாமத்தைச் சூட்டி, இந்திரனே "ஶ்ரீகோவிந்தராஜ பட்டாபிஷேகம்" செய்த பின்னே வேறு பெயர்களைச் சொல்லி அழைப்பது தவறல்லவா?


அறியாத பிள்ளைகளோம்:

(அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனவும்)   என்ற கோதையின் கீதையின் இந்த வரி, ஶ்ரீகண்ணனின் கீதையில் அர்ச்சுனன் ஶ்ரீகண்ணனிடம் கோரும் மன்னிப்பின் சாயலே என்பர் நம் பூர்வர்கள்.

ஸகே2தி1 மத்1வா ப்1ரஸப4ம் யது3க்11ம் ஹே க்1ருஷ்ண ஹே யாத3வ ஹே ஸகே2தி1 |

அஜானதா1 மஹிமானம் த1வேத3ம் மயா ப்1ரமாதா3த்1ப்1ரணயேன வாபி1 ||

_ (பகவத் கீதை 11:41)

[இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, ‘ஏ கண்ணா, ஏ இடையா, ஏ தோழா’ என்று தவறுதலாலேனும் அன்பாலேனும் நான் சொல்லியிருப்பதையும்,]

யச்சாவஹாஸார்தமஸத்க்ருதோऽஸி

விஹாரஸ²ய்யாஸநபோ⁴ஜநேஷு।

ஏகோऽத²வாப்யச்யுத தத்ஸமக்ஷம்

தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம்।।   (பகவத் கீதை 11:42)

[விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னேயெனினும்) நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் அவற்றையெல்லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன் அளவற்றோய்!]


சீறி அருளாதே: அறிவற்று நாங்கள் செய்த அச்செயலால் எங்களைக் கோபிக்காதே. இறைவா நீ தாராய் பறை, சீறுவது இறைத்தன்மையல்லவே! பொறுத்து அருள்வது தானே இறையியல்பு? நீயே எங்களைக் காக்கும் இறைவனாகையால், எம்மை மன்னித்துக் கருணையுடன் அருள் செய். நைச்சியமாகப் பேசி, "நீ பெரியவன் கண்ணா, நாங்கள் அறிவிலிகள். நீயே எம்மை மன்னித்துப் பறையென்னும் கருவியைத் தருவாய்!" என்று கேட்கிறார்கள்.


பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் அழியாது இருப்பதான நவ (ஒன்பது) வித சம்பந்தம் பற்றிக் கூறப்படுகிறது.

பரமாத்மா-ஜீவாத்மா இடையேயான நவவித சம்பந்தமாவன:

1) பிதா - புத்ர, (தந்தை-மகவு),

2).பர்தா - பார்யா (கணவன்- மனைவி)

3) இரக்ஷக - இரக்ஷ்யக (காப்பவன்- காக்கப்படுபவர்)

4) சேஷி - சேஷ (ஆண்டான்- அடிமை)

5) ஞேயம் - ஞேயர் (அறியப்படுபவர் -.அறிபவர்)

6) ஸ்வாமி - ஸ்வ (உரிமையுள்ளவர் - உரிமைப்பொருள்)

7) ஆதாரம் - ஆதேயம் (தாங்குபவர் - தாங்கப்படுபவர்)

8) சரீரி - சரீரம் (ஆத்மா - உடல்)

9) போக்தா - போக்யா (அனுபவிப்பவர்-அனுபவிக்கப்படுபவர்)


கடந்த  “எல்லே இளங்கிளியே” என்னும் 15ம் பாசுரத்தில், பாகவத தாஸ்யம் (அடியவர்க்கு அடியவர்) பற்றி பார்த்தோம். நாளை 29ம்  (சிற்றஞ் சிறுகாலே) பாசுரத்தில் பகவத் தாஸ்யம் பற்றிப் பார்ப்போம். இந்த இரண்டு (15, 17) பசுரங்களும் திருப்பாவையின் இரண்டு கண்களாகப், பெரியோர்களால் போற்றப்படுகிறன.


ஆண்டாள் திருவடிகளே சரணம்,

ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்,

அடியேன்,

திருப்பாவை 27

 *திருப்பாவை பாசுரம் 27*

(கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா)


இப்பாசுரத்தில் கண்ணன் இடைச்சியரது (நோன்பிருந்து செய்த) வேண்டுதலுக்கு இரங்கி அவர்கள் விருப்பத்தை பூர்த்தி செய்ததால் அவர்களுக்கு வரும் பேரானந்தம் தெரிகிறது. இடைச்சியரின் பாவை நோன்பும் பூர்த்தி அடையும் நிலைக்கு வருகிறது.


முதலில் மார்கழி நோன்பு பற்றி 1- 5 பாசுரங்கள் மூலம் தெரிவித்த பின்னே, 6- 15 பாசுரங்கள் ஒவ்வொரு கோபியரையும் (இறையடியாரை) நோன்பிற்கு அழைத்து எழுப்பிய பின்னே, 16-20 பாசுரங்கள் நந்தகோபனுடைய இல்லத்திற்கு சென்று, நந்தகோபன், யசோதா, பலதேவன் நப்பின்னை பிராட்டி வரை எழுப்பியபின்னே, 21-25 பாசுரங்கள் கண்ணனையும் எழுப்பியதாக அமைந்தன. 26 ஆம் பாசுரத்தில் நோன்பிற்குரிய பொருட்களை அருளுமாறு கண்ணனை வேண்டிப் பெற்று, அந்நோன்பும் பூர்த்தியாகும் கட்டத்தில் இப்போது 27 ஆம் பாசுரத்தை சேவித்துக் கொண்டிருக்கிறோம். இப்பாவை நோன்பை நோற்ற இடைச்சியர்கள் தாங்கள் வேண்டும் பரிசுகளைக் கண்ணனிடம் பெற்றுக்கொள்வதைப் பற்றிய பாசுரமிது.


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா உன் தன்னைப்

பாடிப் பறை கொண்டு யாம் பெறும் சம்மானம்,

நாடு புகழும் பரிசினால் நன்றாகச்

சூடகமே தோள் வளையே தோடே செவிப் பூவே,

பாடகமே என்றனைய பலகலனும் யாம் அணிவோம்,

ஆடை உடுப்போம் அதன் பின்னே பாற் சோறு

மூட நெய் பெய்து முழங்கை வழி வாரக்

கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்!


பாசுர விளக்கம்:

பகைவரை வெல்லும் சிறப்புடைய கோவிந்தனே! நாங்கள் உன்னிடம் பறை பெற்று உன்னை போற்றிப் பாடுவோம். அதனால் நீ அகமகிழ்ந்து,  நாட்டவர் எல்லோரும் புகழும்படியாக, எங்களுக்கு பரிசாக வழங்கும், அழகான சூடகம், தோள்வளை, தோடு, காதில் அணியும் மடல், காற்சதங்கைகள் மற்றும் பல ஆபரணங்களை நாம் அணிந்து மகிழ்வோம்! அழகான புதிய ஆடைகளை உடுத்துவோம்!

பின்பு, பாற்சோறு மறையுமாறு அதன் மேல் நெய் வார்த்து செய்த அக்கார அடிசிலை, எங்கள் முழங்கையெல்லாம் நெய்யொழுக நாம் உண்போம் ! இவ்வாறு உன்னுடன் சேர்ந்திருந்து, உள்ளம் குளிர்ந்து, பாவை நோன்பை முடிக்கவே நாங்கள் வந்துள்ளோம் ! எங்களுக்கு அருள்வாயாக!


கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா:                 "பகைவரை வெல்லும் சிறப்பு மிக்கவனே" எனும்போது, பகைவர்கள் வெல்லப்படவேன்டியவர் தானே, என்ற எண்ணம் எழுகிறதல்லவா? 'கூடார்' என்பவர் பகைவர் தாம் என்பதில்லை. பரமனை அறியாதவர்கள்; அறிந்தும் பயப்படுகிறவர்கள்; அறிந்தும் விபரீத குதர்க்க குயுக்திகளால் குழம்பினவர்கள்; அறிந்தும் பரமனை ஏற்காமல் விரோதம் பாராட்டுபவர்கள்; என்று கூடார் நால்வகைப்படுவர்.


உன் தன்னைப் பாடி யாம் பெறும் சம்மானம்:

நன்றாக கவனித்தால், இந்த கட்டத்தில், ஆண்டாள் "சம்மானமாக இதைக் கொடு அதைக் கொடு" என்று குறிப்பாக எதுவும் கண்ணனிடம் வேண்டவில்லை. ஆண்டாள் கண்ணனிடம், "நான் உனக்குச் சூடிக் கொடுத்த மாலைகளுக்கு இணையாக உன் சம்மானம் இருக்க வேண்டும்" என்று சொல்கிறாள் போலும்.

"உயர்ந்ததாக ஒன்றைக் கொடு" என்று குறிப்பில் சொல்கிறாள் ஆண்டாள்! அதன் பொருள் 'கண்ணனே சம்மானம்' என்பது தவிர வெறென்ன இருக்க முடியும்?


நாடு புகழும் பரிசினால் நன்றாக:

கண்ணன் "நாடு புகழும் பரிசை", அடியவரே பிரமித்துப் போகும் வண்ணம், அவர்களுக்கு அளிக்க வல்லவன். கண்ணன் குசேலனுக்கு (அவன் வாய் விட்டுக் கேட்காதபோதும் கூட) வழங்கியது நாடறியும் பரிசல்லவா? அது போலவே, திரௌபதிக்கும், தக்க தருணத்தில் அவள் மானத்தைக் காக்கும் விதமாக, கண்ணன் வழங்கியதும், ஆன்றோரும் சான்றோரும் போற்றிய பரிசு தானே! பஞ்சபாண்டவர்க்கோ யுத்த வெற்றியைப் பரிசாக வழங்கி தர்மத்தை நிலைநாட்டினான் ஸ்ரீகிருஷ்ணன்!


சூடகமே தோள்வளையே--- என்றனைய பல்கலனும்:

சூடகம், தோள்வளை, தோடு, செவிப்பூ, பாடகம் என்று அத்தனை நகைகளாலும் தங்களை அலங்கரித்துக் கொள்ளப் போவதாக கோபியர் கண்ணனிடம் சொல்கின்றனர். எந்தக் காலத்திலும் பெண்டிருக்கு நகை மேல் ஆசை உண்டு போலும் . நீலமேக வண்ணனின் சுந்தர வடிவத்திற்கு ஏற்றாற்போல் தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஶ்ரீஆண்டாளின் விருப்பம் இதில் பளிச்சிடுகிறது.

காறை பூணும் கண்ணாடிகாணும் தன் கையில் வளைகுலுக்கும்

கூறையுடுக்கும் அயர்க்கும் தன் கொவ்வைச் செவ்வாய் திருத்தும்,

என்று தன்னை அலங்கரித்துக் கொள்ளும் ஆண்டாளின் ஆசையை, பெரியாழ்வார் தன் திருமொழி'யில் சொல்கிறார். (3-7-7)

மேலும் அவர் தன் பங்குக்கு, இப்பாசுரத்திற்கு இணையாக

நெய்யிடை நல்லதோர் சோறும் நியதமும் அத்தாணிச் சேவகமும்,

கையடைக் காயும் கழுத்துக்குப் பூணொடு காதுக்குக் குண்டலமும்,

மெய்யிட நல்லதோர் சாந்தமும் தந்து,

என்று தனது திருப்பல்லாண்டில் பாடியுள்ளார். தந்தைக்கும் மகளுக்கும் என்ன ஒரு ஒற்றுமை பாருங்கள்!


கூடி இருந்து குளிர்ந்தேலோர் எம்பாவாய்:

மேலும், பகவத் கைங்கர்யம் செய்யும் ஒரே விருப்பத்தில் கண்ணனை சரண் புகுந்த இடைச்சியர்க்கு, சிற்றின்பங்களான புத்தாடை உடுப்பதிலும், அக்கார அடிசிலை முழங்கையில் நெய் வழிய உண்ணுவதிலும் அப்படி என்ன ஆசை என்ற கேள்வி எழலாம். அவை எல்லாம் "பாவை நோன்பு" நிறைவடைவதற்கான குறியீடுகள் மட்டுமே. இடைச்சியரின் விருப்பம் கண்ணனோடு கூடியிருந்து குளிர்தல் மட்டுமே ஆகும். இதிலும், அடியவருடன் சேர்ந்து பகவத் அனுபவத்தில் திளைத்தல் என்ற "ஶ்ரீவைஷ்ணவக் கோட்பாடு" ஸ்ரீகோதை நாச்சியாரால் வலியுறுத்தப்படுகிறது.

இடைச்சியரின் நோன்பு பரமன் திருவருளால் சுபமாக நிறைவடையும் நிலைக்கு வந்து விட்டது. நோன்பு நோற்கும் முன், (2-வது பாசுரத்தில்) 'நெய்யுண்ணோம் பாலுண்ணோம் மலரிட்டு நாம் முடியோம்' என்ற இடைச்சியர் இப்போது நோன்பு பூர்த்தியாகி விட்டதால் 'பாற்சோறு மூட நெய் பெய்து' செய்த அக்கார அடிசிலை உண்போம் என்கின்றனர்.


பாசுர விசேஷம்:

கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா:

அடியார்களை மட்டுமன்றி, தன்னுடைய திருக்கல்யாண (ஶௌர்யம், ஶௌஸில்யம், ஸௌந்தர்யம்) குணங்களால் ஆகாதவரைக் கூட பரந்தாமன் தன் வசப்படுத்தி ஆட்கொள்வான் என்பதை குறிப்பில் உணர்த்துகிறது.

இந்திரன் இறுமாப்போடு கொட்டிய பெருமழையிலிருந்து கோவர்த்தன கிரியினைக் குடையாகத் தாங்கிப் பிடித்து ஆயர்பாடியைக் காத்ததின் பின், இந்திரனே வருந்தி, மனந்திருந்தி, கண்ணனுக்கு "ஸ்ரீகோவிந்தராஜன்" என்று பெயர் சூட்டிப் பட்டம் கட்டினான். இதுவே "ஸ்ரீகோவிந்த பட்டாபிஷேகம்" என்று உயர்த்திக் சொல்லப்படுகின்றது.


சூடகமே, தோள்வளையே, தோடே, செவிப்பூவே,

சூடகம் = காப்பு; 

தோள்வளை = திரு இலச்சினை (ஒரு வைணவனின் சங்கு-சக்கர சின்னத்தைக் குறிப்பதாக உள்ளர்த்தம்)

தோடு = திருமந்திரம் (பிரணவாதார வடிவைக் குறிப்பதால், ஞானம் என்ற உள்ளர்த்தமும் உண்டு)

செவிப்பூ = த்வயம் (பக்தியைக் குறிப்பது)

பாடகம் = சரம சுலோகம் (காலில் அணியும் அணிகலனைக் குறிப்பதால், சரணாகதியைக் குறிப்பதாகவும் சொல்லலாம்)

பல்கலன் = (தோடு, செவிப்பூ, பாடகம் என்ற மூன்றும் ) ஒரு வைணவனுக்குரிய ஞானம், பக்தி மற்றும் வைராக்கியம் என்ற குணங்களைக் குறிப்பதாம்.

இவை ஶ்ரீவைஷ்ணவ நெறியில் இணைந்த ஒருவருக்கு ஆச்சாரியார் செய்து வைக்கும் பஞ்ச சம்ஸ்காரத்தின் உருவகமாகக் கொள்ளலாம்.

(தோள் வளையே) வலக்கையில் ஸுதர்ஸன சக்கரக் குறியீட்டையும், இடக்கையில் பாஞ்சஜன்ய சங்கின் குறியீட்டையும், திரு இலச்சினை, பொறித்துக் கொள்ளுதல்

(சூடகமே) - மேனியில் பரமனுடைய 12 உப-வ்யூஹங்களைக் குறிக்கும் வகையில் ஊர்த்துவபுண்டரங்கள் எனப்படும் திருமண் ஸ்ரீ சூர்ணம் இட்டுக் கொள்ளுதல் (திருமண் காப்பு )

(தோடே) பிரணவ வடிவைக் கொண்டிருக்கும் செவியினைக் குறிக்கின்றது. ரஹஸ்ய த்ரயத்தில் வைணவ நெறியின் மூலமந்திரத்தை குருவின் மூலம் உபதேசம் பெறுதல்

(செவிப்பூவே) திருமகளாகிய தாயாருடன் தொடர்புடைய இரண்டாவது இரஹஸ்யமான த்வய மந்த்ர உபதேசம் பெறுதல்

(பாடகமே) காலில் அணியும் அணிகலன், இறைவன் திருவடியில் சரணம் செய்வதைக் குறிக்கும் விதமாய், சரமஸ்லோகம் என்கின்ற இறை உறுதிமொழியைக் குறிக்கின்றது.


ஆடை உடுப்போம் -- பறையேலோ:                          கண்ணன் உடுத்திக் களைந்திட்ட ஆடையைக் காதலோடு ஆயர்குலப் பெண்கள் உடுத்துவார்களாம் ! அவ்வளவு உரிமை அவன் மேலே! இதையே, இவள் தந்தை பெரியாழ்வார், திருப்பல்லாண்டு பிரபந்தத்தில்  உடுத்துக் களைத்த நின் பீதகஆடை உடுத்துக் கலத்ததுண்டு  என்கிறார்.

பாற்சோறு = பகவத் சேவை (கைங்கர்யம்) என்று உள்ளர்த்தம்.

மூடநெய் பெய்து = ஆத்மார்த்தமாக, அகந்தையின்றி செய்யப்படும் (பகவத் சேவை)

(கூடியிருந்து குளிர்தல்) இடைச்சியர் குழுவினர் மோட்ச சித்தியை அடைதல்

'பறை' என்பது பொதுவாக பகவத் கைங்கர்யத்தைக் குறிக்கும் என்பர்.


இப்பாசுரத்தில் ஆரம்பித்து, 28-வது பாசுரத்தில் (குறைவொன்றுமில்லாத கோவிந்தா உன் தன்னோடு) மற்றும், 29-வது பாசுரத்தில் (இற்றைப் பறை கொள்வான் அன்று காண் கோவிந்தா!) என திருப்பாவையில் மூன்று முறை கோவிந்த நாமம் ஓதப்பட்டு நிறைவடைகிறது. (கோவிந்த நாம சங்கீர்த்தனம். கோவிந்தா கோவிந்தா கோவிந்தா!)

கோ வாகிய பசுக்கள் கண்ணனிடம் தம்மைக் காக்கச் சொல்லிக் கேட்கவில்லை, கண்ணன் அவற்றின் பின் சென்று காத்த போது, அவனைப் புகழவுமில்லை, இகழவுமில்லை. ஆயினும் கண்ணன் அவற்றைக் காத்தானல்லவா? அது போன்றேத் தன்னை அண்டியவர் அண்டாதவர், அறிந்தவர், அறியாதவர், இப்படி அனைவரையும் காப்பவன் என்பதைக் குறிக்கவே "கோவிந்த" நாமம்.


1-26 வரையிலான பாசுரங்கள் மூலமாக, கோபியர்கள் கண்ணனைப் பற்றியே சிந்தித்தும் (ஸாலோக்யம்)  கண்ணனை நெருங்கியும் (ஸாமீப்யம்), கண்ணனை தரிஸித்தும் (ஸாருப்யம்)  ப்ரபத்தி என்கிற சரணாகதியைச் செய்தனர். இந்தப் பாசுரத்தில் இவை மூன்றையும் தாண்டி, தாம் கண்ணனோடே ஒன்றாய்க் கூடிக் கலந்து மகிழ வேண்டும் என்ற விண்ணப்பத்தை வைக்கின்றனர். (ஸாயுஜ்யம்) = கூடிக் குளிர்ந்தே.

மேலும், இப்பாசுரத்தில் வீடுபேறு பெற்ற பின் அடியார்கள் வைகுண்டத்தில் பெறுகின்ற இன்பங்களைப் பரிசுகள் என்ற குறிப்பால் ஆண்டாள் உணர்த்துகிறாள். அதில் தலையாயது, இறைவனுக்குப் புரியும் தொண்டு (கைங்கர்யம்) என்று முடிக்கிறாள்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்,

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

அடியேன்,

Wednesday, 29 January 2025

திருப்பாவை 26

 *திருப்பாவை பாசுரம் 26*

(மாலே மணிவண்ணா)


இறை அடியார்கள் நாடி வந்தது என்னவென்று கண்ணனிடம் சொல்லி, நித்ய கைங்கர்யம் என்பதான வீடுபேற்றை அருளும்படி வேண்டிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ள, இறுதி ஐந்தின் தொடக்கப் பாசுரம்.


கோபியர் கிருஷ்ணனிடம் நோன்புக்கு வேண்டி, ஆறு பொருள்களை யாசிக்கின்றனர். அதாவது, சென்ற பாசுரத்தில் (ஒருத்தி மகனாய் பிறந்து) கண்ணனது அவதாரச் சிறப்பை போற்றிப் பாடிய பின், தாங்கள் வேண்டுவதை அருளுமாறு கோபியர் இப்போது பட்டியலிட்டு, நேரடியாகக் கேட்கின்றனர்!


மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்,

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன,

பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே!

போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே,

சாலப் பெரும் பறையே! பல்லாண்டு இசைப்பாரே!

கோல விளக்கே! கொடியே! விதானமே!

ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்!


பாசுர விளக்கம்:

அடியார்களை உன் மீது மயக்கங்கொள்ளச் செய்த மாலனே! நீலமணி வண்ணக் கண்ணனே! எங்கள் குலப்பெரியோர் நீண்ட காலமாக கடைபிடித்து வந்த காரணத்தாலே, நாங்களும் இந்த மார்கழி நீராடலைத் தொடர்கிறோம்! நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் நோன்புக்குத் தேவையான, பால் போன்ற நிறமுடைய, உலகங்கள் எல்லாம் அதிரும் வகையில் ஒலியை ஏற்படுத்த வல்ல (உன் இடக்கையில் உள்ள) பாஞ்ச சன்னியத்தை ஒத்த வெண்சங்குகளையும், அகலமான பறை வாத்தியங்களையும், பல்லாண்டு பாடுபவர்களையும், அழகிய விளக்குகளையும், கொடியையும், விதானத் துணியையும ஆலின் இலையில் துயில்பவனான நீ, கருணை கூர்ந்து எங்களுக்கு அளிப்பாயாக!]


இடைச்சியர் ஆறுவகைப் பொருட்களை கண்ணனிடமிருந்து யாசிக்கின்றனர் .

1. நோன்புக்குப் பகைமையாக இருப்பவரை நடுங்கி விலகி ஓடச் செய்யும் திருச்சங்கம்  வேண்டும்,

2. நோன்புக்கான புறப்பாடு அறிவிக்க பறை வேண்டும்,

3. புறப்படும்போது எதிரே நின்று காப்பிடுவதற்காகப் பல்லாண்டு பாடுபவர்கள்* அவசியம்,

4. அதிகாலை வேளையாதலால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரிய மங்கள தீபங்கள் தேவை,

5. தொலைவில் இருப்பவர்களுக்குத் தெரிவதற்காக, உயரத் தூக்கிப் பிடிக்கும். கொடியும்,  

6. தலையில் பனி விழாமல் தடுக்க விதானத் துணியும் வேண்டும். (Shamiyana)

இப்படி, அவர்கள் வேண்டியதெல்லாம் சின்னச்சின்ன பொருட்கள் தான். அதுவும், கண்ணனுடன் சேர அவர்கள் மேற்கொண்ட நோன்பிற்காகவே ஆகும்.


இது 26 ஆவது பாசுரம். தத்துவங்களின் வரிசையில், எண் 26 பரமாத்மாவைக் குறிக்கும் தத்துவம். (26 தத்துவ விளக்கத்தை இணைப்பதிவில் காணலாம்)


பாசுர விசேஷம்:

இறைவனடியின் கீழ் என்றுமிருந்து பணி செய்வதான வீடுபேற்றினை அடைய மேற்கொள்ளும் சரணாகதி வழியாகிய, ப்ரபத்தி மார்க்கத்தின் ஆறு அங்கங்கள்:

1) அநுகூல்ய ஸங்கல்பம்:

(இறைவனுக்கு உகந்த செயல்களை மட்டுமே செய்வது என்கிற உறுதி)

2) ப்ரதிகூல்ய வர்ஜன ஸங்கல்பம்:

(இறைவனுக்கு உகந்ததல்லாதவற்றை ஒரு போதும் செய்யாதிருத்தல் என்கிற உறுதி )

3) பலத் த்யாகம்:  

(தான் எனது என்று சுயநலத்தோடு இல்லாமல், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எவ்வித பலனும் கருதாமல், இறைத்தொண்டில் ஈடுபடுதல்)

4) மஹா விஸ்வாஸம்: 

(இறைவன் காப்பான் என்று உறுதியாக நம்புதல்)

5) கார்பண்யம்:

(அவனன்றி ஓரணுவும் அசையாது என்றுணர்ந்து, எல்லாம் அவன் செயல் என்று அறிதல்.)

6) கோப்த்ருவம்:

(ஆண்டவனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கோரிக்கை செய்தல், தொழுதல்) கூடிய ஆத்ம நிக்ஷேபம்- (நம் மனச்சுமைகளை ஆண்டவன் மீது இறக்கி வைத்தல்)


இது இஜ்யா கால பஞ்சகத்தின் கீழ் வரும் பாசுரம் - புறத்தாலே செய்யும் திருவாராதனை (பாஹ்ய ஆராதனம்) என்கிற இறை பூசனைகள் பற்றி குறிப்பிடப்படுகின்றது.

மந்த்ர, திருமஞ்சன, அலங்கார, நைவேத்ய, த்வஜ, பர்யங்காஸன என்கின்ற ஆறு நிலை ஆராதனம் ஆகும்.


நயமான இந்தப் பாசுரத்தைக் கேட்டு கண்ணன் பாஞ்சசன்னியத்தை அனுப்பி வைத்தான், நோன்புக்கு வேண்டி பறையைக் கொடுத்தனுப்பினான். பல்லாண்டு படிக்க பெரியாழ்வாரையும் நம்மாழ்வாரையும் அனுப்பினான். மங்கள தீபமாக நப்பின்னைப் பிராட்டியை உடன் அனுப்பினான். கொடியாக கருடன் வந்தான். விதானமாக ஆதிசேஷன் வந்தான். எல்லாவற்றோடும் பரமனோடு சேரும் தருணம் நெருங்கியது இடைச்சியருக்கு!


இந்த 26வது பாசுரம். உபநிடதங்கள் கூறுவதுபோல் சர்வேஸ்வரனை 26வது தத்துவமாகக் கூறுகின்றன. முதல் 24 தத்துவங்கள் சரீரம் சம்பந்தப்பட்டவை. 25வது தத்துவம் ஜீவாத்மா. அந்த ஜீவாத்மாவானது, மோக்ஷ சித்திக்கு தடையாக இருக்கின்ற 24 சரீர தத்துவங்களை வென்று, அதாவது அந்த 24 படிகளைக் கடந்து, பரமாத்மாவை அடைய வேண்டியிருப்பதை உட்கருத்தாகக் கொண்டுள்ளதாகப் பெரியோர் கூறுவர். [காஞ்சிபுரம் அத்திகிரி பேரருளாளனைச் சேவிக்க 24 படிகளைக் கடந்து தாண்டும் 25வது தத்வமாக ஜீவாத்மா உள்ளது.]


மார்கழி நீராடுவான், மேலையார் செய்வனகள்: என்று கண்ணனிடம் கோபியர் கூறும்போது, தாங்கள் மார்கழி நோன்பிருப்பதற்குக் காரணம், தாங்கள் கற்றறிந்தது வாயிலாக அல்ல என்றும், தங்கள் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதை கடமையாகவும், பெருமையாகவும் கருதுவதால் மட்டுமே, என்றும் குறிப்பில் உணர்த்துகின்றனர். நம் அன்னை கோதை ஆண்டாள் பாரம்பரியப் பெருமைகளைக் கட்டிக் காப்பதுவும், சான்றோரின் பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதுவும் அவசியம், என்று இப்பாசுரத்தில் வலியுறுத்துகிறாள்.


ஆலின் இலையாய் அருளே:

ஆண்டாள் மற்றும் அவளது தோழியர்கள் உன் "ஸ்ரீபாஞ்சஜன்யம்" போல் பல சங்குகள் வேண்டும் என்று கூறுகிறாளல்லவா? "மற்றதெல்லாம் தரலாம் ஆனால் பாஞ்சஜன்யம் ஒன்று தானே உள்ளது, அதைப் போல் வேறில்லையே அதற்கு நான் என்ன செய்வேன்?" என்று கண்ணன் பதிலளிக்கவும், "நீ பெரிய மாயக்காரன், மாயகண்ணனே! அண்டங்களையெல்லாம் வயிற்றில் அடக்கியதோடல்லாமல், ஒன்றுமறியாத பாலகனாய் ஒரு சிறு ஆலிலையில் (வடபத்ரசாயீ) துஞ்சியவன் தானே நீ ! இவ்வளவு செய்கிறாய் இதைச் செய்ய மாட்டாயா? உலகில் இல்லாத ஒன்றைக் கூட உன்னால் உண்டாக்கிக் தர இயலும், அப்படியிருக்க உன் ஸ்ரீபாஞ்சஜன்யம் போல் சங்குகளும் இன்னும் நாங்கள் விழையும் நோன்புக்கருவிகளையும் உன்னால் தர இயலாதா?" என கண்ணனிடம் சரண்புகுகின்றனர்.


மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்:

ஸ்ருதி (வேதம்) வாக்கியங்களை அறிந்து கொள்வது கடினம். எனவே நிறைய மஹரிஷிகள், ஸ்ம்ருதி இயற்றியுள்ளார். யாக்ஞயவல்க்யர், பராசரர், மனு மற்றும் பலர். ஆனால் அதுவும் நடை முறையில் கடினம். உன் வம்சத்தில் முன்னோர்கள் செய்ததை நீயும் செய் என்கிறாள்.


ஆலினிலையாய்:  தர்க்கப்படி ஆராய்ந்தால் இளம் தளிர் கண்ணனைத் தாங்குகிறதா? கண்ணன் இளந்தளிரைத் தாங்குகிறானா? இளம் தளிருக்கே ஆதாரம் பகவான்தான்.

ஒரு சமயம் மார்க்கண்டேய மகரிஷி கடலில் ஆலிலையில் சயனிக்கும் எம்பெருமானைப் பார்த்தார். அக்குழந்தையைத் தொட அருகில் வந்தார். அப்போது அக்குழந்தை தன் மூச்சை இழுத்து அவரைத் தன வயிற்றுக்குள் செல்ல வைத்தது. அந்த வயிற்றினுள் சகல ப்ரஹ்மாண்டங்களையும் கண்டார். ஆச்சரியம் அடைந்து ஆனந்தப் பட்டபோது எம்பெருமானின் மூச்சுக் காற்றால் வெளியே தள்ளப் பட்டார். பின் ஆஸ்ரமத்தில் பழையபடி அமர்ந்திருந்தார்.

சமுத்திரம், ஆலிலை, குழந்தை எல்லாம் மறைந்து விட்டது.


மேற்கூறியவற்றுள், பாலன்ன வண்ணத்துள் என்பது பிராதிகூல்ய வர்ஜனத்தையும், சாலப்பெரும்பறை என்பது ஆனுகூல்ய ஸங்கல்பத்தையும் குறிப்பதாக, வேறு சிறப்பான விளக்கங்களையும் உரைப்பதுண்டு. பறை என்பது நோன்பைக் குறிக்கும். முன்னோர் காட்டிய வழியைக் கடைபிடித்து, எம்பெருமானுக்கு அனுகூலராக இருத்தல்;

 சாலப்பெரும்பறை - மிகப்பெரிய நோன்பு. மேலும் போய்ப்பாடுடையனவ   என்பது எல்லா விஷயங்களிலும் பிராதிகூல்யத்தை (பகவானுக்கு உகப்பில்லாததை) விட்டு விட பரந்து, விரிவாக அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பது இப்பாசுரத்தின் ஆழ்ந்த உட்கருத்தாகும்.


நாளை, இவர்கள் நோன்பு முடித்து, அதன் பலனாக கண்ணனையே பறையாகக் கேட்கும் 27வது பாசுரத்தை, (முழுவதும் மூட நெய் பெய்த அக்கார அடிசிலுடன்!!) அனுபவிப்போம்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்,

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.


அடியேன்,

திருப்பாவை 25

 *திருப்பாவை பாசுரம் 25*


5 X 5 + 5 ல்: ஐந்தாம் ஐந்தின் நிறைவு. இப்பாசுரத்தில் பிறப்பற்ற இறைவனின் கிருஷ்ணாவதார இரகசியம் போற்றப்படுகின்றது. அடியவர்களைக் காக்கும் பொருட்டு தானும் ஒரு ஜீவாத்மாவைப் போன்றே கருவிலடைந்து பிறந்த பரமாத்மாவின் கருணை பேசப்படுகின்றது. இது இஜ்யா கால பஞ்சகத்தின் கீழ் வரும் பாசுரம். இறைவனுக்கு உளமாரச் செய்யும் ஆராதனை (மானஸீக ஆராதனம்), இறைவனது குணங்களின் பெருமையினைப் போற்றிப் பாடுதல் (அருத்தித்து வந்தோம்) என்பதைக் குறிக்கும் பாசுரம்.


ஒருத்தி மகனாய்ப் பிறந்து  ஓர் இரவில்

ஒருத்தி மகனாய் ஒளித்து வளர,

தரிக்கிலான் ஆகித் தான் தீங்கு நினைந்த

கருத்தைப் பிழைப்பித்துக் கஞ்சன் வயிற்றில்,

நெருப்பென்ன நின்ற நெடுமாலே., உன்னை-

அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்,

திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி,

வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தேலோர் எம்பாவாய்.


பாசுர விளக்கம்:

தேவகி பிராட்டியின் மைந்தனாய் அவதரித்து, பிறந்த அந்த கரிய இரவிலேயே, வசுதேவரால் ஆயர்பாடிக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்கே யசோதையின் மகனாக, (உனக்குத் தீங்கு வந்து விடுமோ என்ற அச்சத்தில்!) நீ ஒளித்து வளர்க்கப்பட்ட காலத்தில், அதைப் பொறுக்காது, உன்னை அழித்து விட வேண்டும் என்ற கம்சனின் தீய நோக்கத்தை பயனற்றதாக்கி, (அவ்வரக்கன் அழியும் காலம் வரை!) அவனது வயிற்றில் (அச்சம் என்கிற) ஓர் அணையா நெருப்பு போல் கனன்று நின்ற சர்வ லோக சரண்யனான கண்ணபிரானே !

நாங்கள் பணிவுடனும், பக்தியுடனும் நோன்புக்கான பறை வேண்டி உனை விரும்பி வந்துள்ளோம் ! எங்கள் விருப்பத்தை நீ நிறைவேற்றுவாய் எனில், இலக்குமிக்கு ஒப்பான உன் செல்வ அழகையும், உன் ஒப்பிலாப் பெருமைகளையும் பாடி, உன் பிரிவினால் வந்த துயர் நீங்கி, பாவை நோன்பிருந்து உன்னை வணங்கி வழிபட்டு, நாங்கள் மகிழ்ச்சியுடன் இருப்போம்.


கண்ணனின் அவதார ரகசியம் இப்பாசுரத்தில் பொதிந்துள்ளதாக பெரியோர் கூறுவர். உபநிடதத்தில் பரமனின் அவதாரங்கள் குறித்துச் சொல்லப்பட்ட   ஜாயமானோ பஹுதா விஜாயதே என்பதன் பொருள் "பிறப்பற்றவன் பல பிறப்புகள் எடுக்கிறான்" என்பதாகும்!


பாசுர விசேஷம்:

தரிக்கிலான் ஆகி ---- கஞ்சன் வயிற்றில்:

கண்ணன் ஆய்ப்பாடியில் வளர்கிறான் என்ற செய்தி அறிந்தவுடன், கம்சன் தன் உடம்பையே தான் "தரிக்க முடியாமல்" உடலும் மனதும் தகிக்க, நெருப்பில் இட்ட புழுவாக துடித்ததைத் தான் ஆண்டாள் நயமாக ஒரே வார்த்தையில் "தரிக்கிலானாகி" என்கிறாள்!  மரணத்தை விட, கம்சனை வாட்டியது இது தான். அவன் செய்த கொடுமைகளுக்கெல்லாம் அவனுக்குக் கிட்டிய கர்மபலன் அது.

கம்சன் கண்ணனுக்கு தீங்கே நினைத்து இருந்திருந்தாலும், சதாசர்வ காலமும் பரமன் எண்ணமாக இருந்தான், தனது பயம் காரணமாக கண்ணனை எங்கும் பார்த்தான், அதனால், கம்சனுக்கும் மோட்ச சித்தியை அருளினான் நீலமேக வண்ணன்!


உன்னை அருத்தித்து வந்தோம்---மகிழ்ந்தேலோர் எம்பாவாய்:

கோபியர் கண்ணனிடம் 'உன்னையே உன்னிடம் வேண்டி நிற்கிறோம்! நிலையான செல்வமாகிய பிராட்டியை மார்பில் தரித்தவன் நீ! சதாசர்வ காலமும் உனக்குச் சேவை செய்யும் பெருஞ்செல்வத்தை நீ எங்களுக்கு அருளும் பட்சத்தில், நாங்களும் திருத்தக்க செல்வம் பெற்றாராகி, உனக்கும் பிராட்டிக்கும் ஊழியஞ்செய்து, இதுகாறும் பிறவிகள் பல எடுத்த வருத்தமும் தீர்ந்து, உன்னை என்றும் பிரியாத பேரானந்த நிலையை அடைந்து மகிழ்வோம்' என்று சொல்கிறார்கள்.


திருத்தக்க செல்வமும் சேவகமும் யாம் பாடி:

கண்ணனுக்கு கைங்கர்யம் செய்வதற்கு முன், அப்பரமனின் மார்பில் குடியிருக்கும் தாயாரை முதலில் போற்றி வணங்க வேண்டியதை வலியுறுத்துவதாகக் கொள்ளலாம். 'திருத்தக்க செல்வம்' என்பதற்கு திருவை (திருமகளை) உடைமையால் வந்த செல்வம் என்றும், திருவும் விரும்பத்தக்க செல்வம் (திருமார்பன்!) என்றும் கூட பொருள்படும் !


சில விசேஷ அர்த்தங்கள்:

ஒருத்தி மகனாய்:

கண்ணனைத் தன் கருவில் சுமந்து ஈன்று தந்த பெருமை தேவகிக்கு கிடைத்தது. பிரஜாபதி சுதபாவும் அவர் மனைவி ப்ரச்னியும், குழந்தை வரம் வேண்டி விஷ்ணுவை நோக்கி தவம் இருந்தனர். தவத்தை மெச்சிய மஹாவிஷ்ணுவும் அவர்கள் முன்  தோன்றி என்ன வரம் வேண்டும் என்று கேட்டார்.  தம்பதியர் “உங்களைப்போல ஓர் பிள்ளை வேண்டும்” என்று கேட்டனர். ஆர்வமிகுதியால் ஒருவர் மாற்றி ஒருவராக மூன்று முறை கேட்டனர். பகவானும் “அப்படியே ஆகட்டும்” என்று வரமளித்தார்.  

அவர்களுக்கு பகவான் ப்ரச்னிகர்பனாகப் பிறந்தார்.

பிறகு அவர்களே அதிதி – கஸ்யபராக  இருந்தபொழுது உபேந்திரனாக, (வாமனனாக) பிறந்தார். 

இப்போது தேவகி வசுதேவருக்கு கண்ணனாகப் பிறந்தார்! ஆக, தன் தாய்க்குக் கொடுத்த வாக்கை, அவளிடம் மூன்று முறை பிறந்து, சத்யமாக்கினான், அப்படிப்பட்ட பெருமையுடைய ஒருத்தி தேவகி!!

இப்படிப்பட்ட பாக்கியத்தை தேவகி செய்ததை ஒட்டித்தான் அவள் 'ஒருத்தி' என்று குறிக்கப்படுகின்றாள். 


அவளைப் போன்றே போற்றுதலுக்கு உரியவள் கண்ணனை நெஞ்சிலே சுமந்து வளர்த்தெடுத்த யசோதை! கண்ணன் அவளை பாடாய் படுத்தியபோதும், யசோதையைப் போல் வளர்ப்புப் பிள்ளையை வாஞ்சையுடன் கவனித்துக் கொண்ட தாய் அவனியில் கிடையாது. பெரியாழ்வார், கண்ணன் அடித்த சேஷ்டைகளால் யசோதா தெம்பிழந்த கதையை ஒரு பாசுரத்தில்,

கிடக்கில் தொட்டில் கிழிய உதைத்திடும்;

எடுத்துக் கொள்ளில் மருங்கையிறுத்திடும்;*_

ஒடுக்கிப்புல்கில் உதரத்தே பாய்ந்திடும்;

மிடுக்கிலாமையால் நான் மெலிந்தேன் நங்காய்;     

என்று அழகாகச் சொல்கிறார்.    (பெரியாழ்வார் திருமொழி 1-2-9) அப்பேர்ப்பட்ட யசோதையையும் ஆண்டாள் "ஒருத்தி" என்று தானே அழைக்க வேண்டும்!

திருவிலேனொன்றும் பெற்றிலேன் எல்லாம் தெய்வ நங்கை யசோதைபெற்றாளே  என்ற குலசேகர ஆழ்வாரின் தேவகி புலம்பலால், அவளைக் காட்டிலும் உயர்ச்சியுடையவள் யசோதை என்பது புலனாகிறது. ஆகவே தான் அவளையும் ஒருத்தி என்று புகழ்கிறாள் ஆண்டாள். ஒருத்தி, என்ற குறிப்பால் இருவரின் பெருமையையும்  உரைக்கிறாள்.


ஓர் இரவில்:

அப்படிப்பட்ட இரவு அதற்கு முன்பும் நிகழவில்லை, பின்னரும் இருக்கவில்லை! ஆதலால் எப்படி 'ஒருத்தி' என்ற பதம் போலவே 'ஓர் இரவு' என்ற பதமும் குறிக்கப்படுகிறது.  கண்ணன் பிறப்பிடம் வடமதுராவில் சிறைச்சாலை என்றாலும், தன்னை வெறுத்த மாமன் கம்சனின் இடத்தில் அவன் ஒரு இரவு கூட தங்கவில்லை. மாடு மேய்க்கும் காடு வாழ் சாதியனர் வாழும் ஆயர்பாடியான கோகுலத்திற்குச் சென்று விட்டான் அல்லவா?

இதன் கருத்து துன்பங்கள் என்னும் இருள் நிறைந்த இம்மண்ணுலகில், இறைவன் அவதாரம் செய்து லீலைகள் புரிகின்ற இம்மண்ணுலகில், ஸம்ஸாரமென்னும் இருள் தான் இரவு. மீண்டும் மீண்டும் பிறந்து இறந்து பாவ புண்ணியங்களுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கும் ஜீவாத்மாக்கள் தான் இந்த இரவில் வாடும் உயிர்கள். அவர்கள் மீதில் கருணை கொண்டே இறைவன் தன்னுடைய நிலையினின்று கீழிறங்கி, நமக்கு இரங்கி , தன்னுடைய தெய்வத்தன்மைகளை ஒளித்துக் கொண்டு அருள் செய்கிறான். இதை கோயில்களிலுள்ள சிலை வடிவங்கள் சொல்லும்.


ஒளித்து வளர:

பிறந்த போதே இவன் இறைவன் என்று அறியும் வகையால் தன் விஸ்வரூபத்தைப் பெற்றோருக்குக் காட்டியருளிய கண்ணன், தன்னுடைய அடியவர்களின் மீது தனக்கிருக்கும் அன்பின் காரணத்தால், தான் யாரென்பதை மறைத்துக் கொண்டு சாதாரணச் சிறுவனாக ஆயர்பாடியில் வளர்ந்தான். அரக்கன் கம்சனுக்கு அஞ்சி ஒளியவில்லை. அவனைக் கொல்வதற்கான சமயம் வரும் வரை காத்திருந்தான். எங்கே கம்ஸனால் கண்ணனுக்குத் தீங்கு வந்து விடுமோ என்று அஞ்சிய தேவகியின் மனம் சமாதானம் ஆவதற்காகவே, கண்ணன் மதுராவை நீங்கி ஆயர்பாடியில் யசோதையிடம் வளரத் தலைப்பட்டான். ஒருபோதும் கம்ஸனுக்கு அஞ்ச வேண்டிய அவசியம் கண்ணனுக்கு இல்லை.


எப்படி ஜீவாத்மாக்களின் உள்ளே அந்தர்யாமியாக இறைவன் மறைந்திருக்கிறானோ, அப்படித்தான் கண்ணன் மண்ணுலகில் மறைந்திருந்தான். அவனைத் தெரிந்தவர்களுக்குத் தெரிவான், மறுப்பவர்களுக்குப் புலப்படான்.

தனது இறைத்துவத்தை நிலைநாட்டுவதற்கு தெய்வம் விரும்புவதில்லை, அப்படிச் செய்ய வேண்டிய அவசியமும் அதற்கு இல்லை. நிர்குணப் பரப்பிரம்மமாகவே இறைவன் இருக்கிறான். பாவச்சுமையை அதிகப்படுத்திக் கொள்ளும் ஜீவாத்மாக்கள் தாமே தான், தம்முடைய அழிவுக்குக் காரணமாகிறார்கள்.

தன்னை அண்டிய இந்திரனுக்காக அல்ல வாமனாவதாரம், தனது பக்தன் மஹாபலிச் சக்ரவர்த்தியின் பெருமையை உலகில் நிலைநாட்டவே! 

ஸ்ரீநரசிம்ம அவதாரமோ தனது பக்தன் பிரஹலாதனின் வாக்கை மெய்ப்பிக்க வந்தது. இராமாவதாரத்தில் நல்லவர்களுக்கும், தவசிகளுக்கும் தனது அரக்கப் பிரதிநிதிகளின் மூலம் இடையூறு விளைவித்து அச்சமூட்டியதோடல்லாமல் தன் மனைவியையும் கவர்ந்து என்று பிழையிழைத்தமைக்காகவே இராவண வதம்.


தீங்கு நினைந்த கருத்தைப் பிழைப்பித்து:

கம்சனின் எண்ணத்தைப் பொய்யாக்கி, குழந்தையாக இருந்த போதிலிருந்தே கண்ணனைக் கொன்று விடவேண்டி பூதனை, கேசியசுரன், தேனுகாசுரன், சகடாசுரன், கபித்தாசுரன், வத்ஸாசுரனென்று பற்பலரை ஏவியபடியே இருந்தவனல்லவா கம்சன்? ஆயினும் கண்ணனைக் கொல்லும் அவனது தீய எண்ணம் நிறைவேறவில்லையே ! அவற்றையெல்லாம் கண்ணன் பொய்த்துப் போகும்படிச் செய்திட்டானே!


வயிற்றில் நெருப்பென்ன நின்ற: 

கம்சனுக்கு உயிரச்சம் ஏற்படுத்தும் நெருப்பாக, அவன் வயிற்றெரிச்சலாக இருந்து கடைசியில் கொன்றும் போட்ட கண்ணன். தன்னுடைய அன்பர்களின் மத்தியில் சாதாரனச் சிறுவனாக வளர்ந்த கண்ணன், அசுரர் குணங்கள் நிறைந்த கம்சனுக்கு வயிற்றிலிட்ட நெருப்பாக தகித்தான். கண்ணன் பிறக்கும் வரை தேவகியின் வயிற்றில் கம்சன் அச்சத்தை நெருப்பாக வைத்தான். கண்ணன் பிறந்த பின்னே அதே நெருப்பை கம்சனின் வயிற்றுக்கு மாற்றி விட்டான்.


அருத்தித்து வந்தோம் பறை தருதியாகில்: 

உன்னைப் போற்றி பணிகின்ற எமக்கு நோன்பிற்குரிய பறைக்கருவியை அளிதப்பாய். "கண்ணா, எங்கள் நோன்பிற்குண்டான பறையை நீ எப்படிக் கொடுப்பதற்குத் தகுதியுடையவனாக இருக்கிறாயோ, அதைப் போலவே நாங்களும் அந்தப் பறையைப் பெறுவதற்குத் தகுதியோடு, உன்னைப் பணிந்து, அருத்தித்துப் போற்றிப் பாடி வந்தோம். நீ அன்று மஹாபலியிடம் மூன்றடி மண்ணுக்கு யாசகம் செய்யவில்லையா ? அதைப் போலவே இன்று நாங்கள் உன்னிடம் பறையை யாசித்து வந்துள்ளோம். அன்று உனக்குக் கிடைத்தது மூன்றடி நிலம். இன்று நாங்கள் வேண்டுவதோ ஒன்றே ஒன்று, பறை. அதை எங்களுக்கு நீ கொடு கண்ணா ! " என்கிறாள் ஆண்டாள்.


திருத்தக்க செல்வமும் சேவகமும்:

அந்தப் பறையை எங்களுக்குக் கொடுத்தால், ஸ்ரீலக்ஷ்மி பிராட்டி விரும்பத்தக்க உனது நற்குணங்களையும் வீரத்தையும் நாங்கள் பாடி “வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்தே”, உன்னை அடைவதற்குத் தடையானவற்றைக் கடந்து வந்த வருத்தங்கள் மறைந்து, இன்பம் பொங்குமாறு இருப்போம்.


வருத்தமும் தீர்ந்து மகிழ்ந்து:

கர்மவினைகளால் மீண்டும் மீண்டும் அடைகின்ற பிறவிப்பிணியின் துன்பங்கள் தீர்ந்து இறைப்பணியில் [பகவத் கைங்கர்யம்] மகிழ்ச்சியோடு ஈடுபடுவர்.  நீ எங்களுக்கு இறைப்பணியென்னும் [பகவத் கைங்கர்யம்] செல்வத்தைக் கொடுத்தால், நாங்கள் உன்னையும் உன் பிராட்டியான மஹாலக்ஷ்மியையும் திருத்தக்க செல்வமாக, என்றும் நிலையான செல்வமாக பெற்று, உங்களுக்கு சேவகம் செய்து, இதுவரை பிறவிகள் பல எடுத்த வருத்தமும் தீர்ந்து, பரமானந்த நிலையை அடைந்து மகிழ்வோம் என்று சொல்கிறாள். 


இனி தங்கள் தேவைகளை பட்டியலிடும் 26ம் பாசுரத்தை நாளை அனுபவிப்போம். 


ஆண்டாள் திருவடிகளே சரணம்,

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.

அடியேன்,