Popular Posts

Friday, 25 July 2025

நான் ரசித்த கம்பன் பாகம் 3

 சீதையின் அழகு


திரைப்படத்திலும், சின்னத் திரையிலும் கதாநாயகியை, மகாலக்ஷ்மியைப் போல இருக்கேன்னு விவரிப்பார்கள். அப்படியானால், உண்மையிலே மஹாலக்ஷ்மியான சீதையை எப்படி விவரிப்பார்கள்? வாருங்கள், கம்பன் எப்படி வர்ணிக்கிறான் என்று பார்ப்போம்.

செப்பும்காலை. செங்கமலத்தோன் முதல் யாரும்.

எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்.

அப் பெண் தானே ஆயின போது. இங்கு. அயல் வேறு ஓர்

ஒப்பு எங்கே கொண்டு. எவ் வகை நாடி. உரை செய்வோம்?

(மிதிலைக் காட்சி படலம் 503)

செந்தாமரை மலரில் வாழும் பிரமன் முதலாக, எளிய மாந்தர் வரை, எவரும் உவமையாகச் சொல்லும் அந்தத் திருமகளே இங்கு சீதையாய் வந்துள்ளதால், அத்திருமகளைவிட வேறு ஓர்  உவமைப்  பொருளை எந்த இடத்திலே கண்டு  எவ்வாறு  எடுத்து உரைப்போம்?

சீதைக்கு உவமை கூற இயலாது,, ஏனென்றால் அவள் உவமை கடந்தவள். எவ்வாறெனில்.  எல்லாப் பெண்களுக்கும்  எல்லாராலும் உவமையாக  எடுத்துச் சொல்லப்படுகிறவள்  திருமகள். அவளே இப்போது மிதிலையில் சீதையாகப் பிறந்திருக்கிறாளே! அப்படியிருக்க அவளுக்கு வேறுயாரை உவமையாகக் கூறமுடியும்?   

அடுத்து, ராமனும் சீதையும் கண்ணொடு கண் நோக்கி காதல் வயப்பட்டபிறகு, சுயம்வரம் முடிந்து, திருமணம் நிச்சயிக்கப் படுகிறது. அவள் திருமண மண்டபத்துக்கு வருகிறாள். எப்படி?

சிலையுடைக் கயல், வாள் திங்கள், ஏந்தி, ஓர் செம் பொன் கொம்பர்,

முலை இடை முகிழ்ப்ப, தேரின் முன் திசை முளைத்தது அன்னாள்,

அலை கடல் பிறந்து, பின்னை அவனியில் தோன்றி, மீள

மலையிடை உதிக்கின்றாள் போல், மண்டபம் அதனில் வந்தாள்.

(கடிமணப் படலம் 1238)

சீதையின் வரவு எப்படி இருந்ததென்றால், ஒரு சிவந்த பொன்னின் நிறமுடைய பூக்கொம்பு, வில் போன்ற புருவமும், கயல் போன்ற விழிகளும், பூரண நிலவைப் போன்ற முகமும், முல்லை அரும்பை போன்ற புன்னகையுடன், தேர் மேல் ஏறிக் கிழக்கில் தோன்றியதைப்போல, பிராட்டி, திருப்பாற்கடலில் திருமகளாய்த் தோன்றி, பின்பு மண்ணுலகில் சீதையாய் அவதரித்து, மலையிடை உதிக்கும் ஆதவன் போல் பிரகாசமாக மண்டபத்துள் வந்தாள்.

இவற்றுக்கெல்லாம் மேலே, ராமன் மீது  காமமுற்று சீதையைத் தன் எதிரியாக நினைக்கும் சூர்ப்பனகை சீதையை வர்ணிப்பது வேறே லெவல். அவள் குறிக்கோள் ராவணனைத் தூண்டி, சீதையைக் கவர்வதே. ஆனால் அவள் வர்ணனைகளில் வஞ்சம் இல்லை. அவற்றில் சில பாடல்களை பார்ப்போம்.

காமரம் முரலும் பாடல், கள் எனக் கனிந்த இன் சொல்,

தேம் மலர் நிரந்த கூந்தல், தேவர்க்கும் அணங்கு ஆம் என்னத்

தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள்;

யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை பாலது அன்றோ.

(சூர்ப்பனகை படலம் 3135)

அவளுடைய, மதுவைப் போல் மயக்கமூட்டும் இனிய மொழிகள் காமரம் என்னும் பண்ணிசை கமழும் பாடலை ஒக்கும்; இனிய மலர்கள் சூடப் பெற்ற கூந்தலை உடைய அவள், தேவமாதரும் போற்றும் அழகுமிக்கவளாம் என்று சொல்லலாம்; தாமரை மலரில் வசிக்கும் திருமகளும் அவளுக்கு தோழியாதற்குக் கூடத் தகுதி அற்றவள்; அவளுடைய அழகைக் குறித்து நான் எடுத்துச் சொல்லக் கருதுவது அறியாமையின் வெளிப்பாடு என்று ஆகும் அன்றோ?

அடுத்து,

மஞ்சு ஒக்கும் அளக ஓதி; மழை ஒக்கும் வடித்த கூந்தல்;

பஞ்சு ஒக்கும் அடிகள், செய்ய பவளத்தை விரல்கள் ஒக்கும்;

அம் சொற்கள் அமுதில் அள்ளிக் கொண்டவள் வதனம், ஐய!

கஞ்சத்தின் அளவிற்றேனும்,கடலினும் பெரிய கண்கள்

(சூர்ப்பனகை படலம் 3136)

அழகிய சொற்களை அமுதத்திலிருந்து முகந்தெடுத்துக் கொண்ட, அம்மங்கையின் கூந்தல் மேகத்தை நிகர்க்கும்; முடிக்காத தாழ்ந்த கூந்தலோ பூமியில் இறங்கும் மழைக்கால கார்மேகம் போன்றிருக்கும்; பாதங்கள் செம்பஞ்சினைப் போன்றிருக்கும்; விரல்கள் சிவந்த பவளத் துண்டுகள் போல அழகானவை; முகமானது (சேற்றில் உதிப்பதுபோன்ற களங்கங்கள் இல்லாத) தாமரைப்பூ போன்றதாயினும்; அம்முகத்துக் கண்களோ கடலைக் காட்டிலும் பெரியவை.

மேலும் சொல்கிறாள்,

வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும்,

பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும்,

சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்;

சொல்லல் ஆம் உவமை உண்டோ?

”நெல் ஒக்கும் புல்" என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ!

(சூர்ப்பனகை படலம்3140)

வில்லைப் போல் நெற்றி அமைந்திருக்கிறது என்று சொன்னாலும்; கண்கள் வேல் போல் விளங்குகின்றன என்று சொன்னாலும்; பற்கள் முத்துக்கள் போன்றிருக்கும் என்று சொன்னாலும்; பவளமே இவள் இதழ்கள் என்று சொன்னாலும்; உவமிக்கப்படும் சொல் பொருத்தம் ஆகலாம்; அவ்வாறு பொருள் ஒவ்வாதால் சீதையின் உறுப்பழகை உணர்த்தும் முழுமையான பொருளால் பொருந்தாது; எனவே, சொல்லத்தக்க உவமை வேறு ஏதேனும் உளதாகுமோ?; புல்லைப் போன்றிருக்கும் நெல் என்று கூறினாலும் புல் நெல்லாகுமா?

வருணனைக்கு அப்பாற்பட்ட பொலிவும் அழகும் சீதையிடம் பொருந்தியுள்ளன எனவும், அதனால் நீயே நேரிற் காண்பதே பொருத்தம் எனவும் சூர்ப்பணகை உணர்த்துகின்றாள்.

இவை அனைத்தையும் தூக்கி அடிக்கும் வர்ணனை, சூர்ப்பனகை  ராமனின் பர்ணசாலையில் முதல் முறை சீதையைக் கண்டபோது வர்ணித்தது.

சீதையின் அழகு, அவளை சில கணம் மெய்மறந்து நிலை தடுமாறச் செய்கிறது. அவளையும் அறியாமல், சீதையை வர்ணிக்கிறாள்.

பண்புற நெடிது நோக்கி, ‘படைக்குனர் சிறுமையல்லால்,

எண்பிறங்கு அழகிற்கு எல்லையில்லை ஆம்’ என்று நின்றாள்;

கண் பிற பொருளில் செல்லா; கருத்து எனின் அஃதே;

கண்ட பெண் பிறந்தேனுக்கு என்றால், என்படும் பிறர்க்கு?’ என்றாள்.

(கரண் வதைப் படலம் 2791)

அவள் சொன்னது, “படைப்போர்க்கு குறைவே அல்லாமல் கருத்தில் விளங்கும் அழகிற்கு ஒரு வரையறையே கிடையாது. இவளைப் பார்த்த கண்கள் மற்றொன்றைப் பார்க்காது; இவளை நினைத்த நெஞ்சம் மற்றொன்றை நினைக்காது. பெண்ணாகப் பிறந்த எனக்கே இந்நிலை உண்டானால், இவளைக் கண்ட ஆடவர்க்கு என்னாகுமோ?” என்று வியந்து கூறினாள்.

[கண்ணதாசன் வரிகளில், உன்னழகைக் கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்;

பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன்]

அடுத்த பதிவில் மீண்டும் கம்பனை ரசிப்போம்.

No comments:

Post a Comment