சூர்ப்பனகையின் அழகு!!!
முந்தைய பதிவில் சீதையின் அழகைக் கண்டு ரசித்தோம். இந்தப் பதிவில் அவளை எதிரியாகக் கருதும் சூர்ப்பனகையின் அழகைக் (?) கண்டு ரசிப்போம். என்ன!! வியப்பாக உள்ளதா? அரக்கிக்கு ஏது அழகு? அங்கும் அவளுக்குத் திருமகள்தான் அருள் புரிகிறாள்.
கானகத்தில் ராமன் தங்கியிருந்த பர்ணசாலையின் பக்கம் வருகிறாள் சூர்ப்பனகை. தொலைவில் இருந்து ராமனைக் காண்கிறாள். ராமனின் தோளழகும், தாளழகும், வடிவழகும் அவளை மையலுறச் செய்கின்றன. அவன் மீது ஒரு தலையாய், நெறியற்ற, முறையற்ற காதல் கொள்கிறாள்..
அவனை நேரில் பார்த்து தன் காதலை வெளிப்படுத்த எண்ணுகிறாள். தன் குரூரமான அரக்கி உருவத்தைக் கண்டால், விளைவு எதிர்மறையாகிவிடும் என்று அஞ்சி, திருமகளை வேண்டி ஒரு அழகிய ரூபத்தைப் பெற்று ராமன் முன் வருகிறாள். அவளைத்தான் இங்கு கம்பன் வர்ணிக்கிறான்.
பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,
செஞ் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி,
அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்
வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.
(சூர்ப்பனகை படலம் 2762)
(கம்பன் இந்தப் பாடலை அற்புதமான சந்தக்கட்டில் அமைத்திருக்கிறார்)
செம்பஞ்சு போன்ற மிகச் செழித்த தளிர்களினும் மென்மையான அழகுள்ள தாமரைக்கு ஒப்பான சிறிய பாதங்கள் உடையவள்; அழகிய சொல்லுடைய இளமையான மயில் போலவும், அன்னம் போலவும், வஞ்சிக் கொடி போலவும், உருவம் கொண்டாலும், கொடிய விஷம் போலவும், வஞ்சனை புரியும் சூர்ப்பணகை அங்கு இராமன் முன் வந்தாள்.
அடுத்து,
பொன் ஒழுகு பூவில் உறை பூவை, எழில் பூவை,
பின் எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள்,
கன்னி எழில் கொண்டது, கலைத் தட மணித் தேர்,
மின் இழிவ தன்மை, இது விண் இழிவது என்ன,
(சூர்ப்பனகை படலம் 2763)
பொன்னிறமாய் விளங்கும் செந்தாமரை மலரில் வாழும் திருமகளின் அழகும்; அழகு மிக்க நாகணவாய்ப் பறவையின் அழகும், இரண்டு வாள்கள் போலக் கண்கள் மாறி மாறி ஒளி வீசும் முகத்தை உடையவளாம் சூர்ப்பணகை, அழகிய சீலைகளால் ஒப்பனை செய்யப் பெற்ற பெரிய அழகிய தேர் ஒன்று மின்னல் இறங்குவது போல் வானிலிருந்து கீழே இறங்கி வருவது போல் இருந்தது.,
அழகும், இளமையும், புதுமையான உருவும் கொண்ட சூர்ப்பணகை இளம் பெண் வடிவையும் மேகலை சூழ்ந்த அல்குலையும் கொண்ட மின்னல் ஒன்று வானிலிருந்து இறங்கி வந்தது போல் வந்தாள் எனவும் கூறுவர்.
அப்படி வந்த சூர்ப்பனகையைக் கண்ட ராமன் ஒரு கணம் நிலை குலைந்தான். அவன் மனதில் தோன்றிய எண்ணத்தை கம்பன் வார்த்தைகளில் வடிக்கிறான்.
பேர் உழைய நாகர்-உலகில், பிறிது வானில்,
பாருழையின், இல்லது ஒரு மெல் உருவு பாரா,
ஆருழை அடங்கும்? அழகிற்கு அவதி உண்டோ?
"நேரிழையர் யாவர், இவர் நேர்"என நினைத்தான்.
(சூர்ப்பனகை படலம் 2767)
பெரிய விஷமுடைய நாகங்கள் வாழும் பாதளத்திலும்; அதனில் வேறான சுவர்க்க லோகத்திலும்; நில உலகத்திலும் இல்லாததான ஒப்பற்ற மென்மை பொருந்திய பெண் வடிவைப் (இராமன்) பார்த்து, இவள் அழகு யாரிடத்து அமையும்? இவள் அழகிற்கு எல்லை உள்ளதோ? மகளிருள் இவளுக்கு ஒப்பானவர் யார் உள்ளார்? என்று எண்ணினான்.
மீண்டும் சந்திப்போம்,
No comments:
Post a Comment