Popular Posts

Wednesday, 30 July 2025

நான் ரசித்த கம்பன். பாகம் 7

அனுமனின் பெருமை.


சென்ற பதிவில் வாலியின் வீரத்தைப் பற்றிப் பார்த்தோம். வீரம் இருந்தும் விவேகம் இல்லாததால் வாலி வதம் செய்யப்பட்டான். ஆனால் அனுமனோ வீரத்துடன், விவேகமும் பெற்றிருந்ததால் சிரஞ்சீவியானார். இருந்தும் ஒரு கட்டத்தில் அவர் தனது வீரம், பராக்கிரமம் அனைத்தையும் ஒரு ரிஷியின் சாபத்தால் மறந்திருத்தார்.


அனுமனின் குழந்தைப் பருவத்தில், ஒரு முனிவரை கேலி செய்ததற்காக சுதீட்சண முனிவர் அவருக்கு சாபம் கொடுத்தார். அந்த சாபத்தின் காரணமாக, அனுமன் தனது வலிமையையும், ஆற்றலையும் மறந்திருந்தார்.


பின்னர், சீதையைத் தேடி, கடல் தாண்டி இலங்கைக்கு தூது செல்வதற்கு அனுமானே சரியானவர் என்று ஜாம்பவான் தேர்வு செய்த போது, தயங்கிய அனுமனுக்கு அவர் திறமைகளை எடுத்துச் சொல்கிறார். இதைக் கம்பன், ஜாம்பவான் மூலமாக 11 பாடல்களில் விவரிக்கின்றார். ஜாம்பவான் நேரில் விளித்துச் சொல்வதுபோல் அமைந்த பாடல்கள். 

(கிஷ்கிந்தா காண்டம், மயேந்திர படலம், 9 – 19)


மேலை விரிஞ்சன் வீயினும் வீயாமிகை நாளீர்

நூலை நயந்து நுண்ணிது உணர்ந்தீர் நுவல்தக்கீர்

காலனும் அஞ்சும் காய் சின மொய்ம்பீர் கடன் நின்றீர்

ஆலம் நுகர்ந்தானாம் என வெம்போர் அடர்கிற்பீர்.

(பாடல் 9)

முனிவர் சாபத்தால் தனது வல்லமையையுணராது தயங்கி நிற்கும் அனுமனை ஜாம்பவான் கடல் கடக்குமாறு கூறுதற்பொருட்டுத் துதிக்கின்றார். முதலடி அனுமனின் சிரஞ்சீவித் தன்மையையும் இரண்டாமடி பெருங்கல்வியால் அவன் சொல்வன்மை பெற்றிருப்பதையும், பின்னிரண்டடிகள் மேற்கொண்ட செயலைப் பின்வாங்காது நின்று போர் செய்தாவது முடிக்கும் ஆற்றல் பெற்றிருப்பதையும் விளக்கும்; இதனால், எவ்வகையாலும் இறப்பில்லாமல், அரக்கனாகிய இராவணன் ஊருக்குச் சென்று, அவனோடு நயமாகப் பேசி இடையூறு செய்யும் அரக்கர்களையழித்துச் சீதையைக் கண்டு மீளுகின்ற செயலை முடிப்பதற்கு உரியவன் நீயே, என்று குறிப்பாக உணர்த்தினான்.


வெப்புறு செந் தீ நீர் வளியாலும் விளியாதீர்,

செப்புறு தெய்வப் பல் படையாலும் சிதையாதீர்,

ஒப்புறின் ஒப்பார் நும் அலது இல்லீர் ஒருகாலே,

குப்புறின் அண்டத்தப் புறமேயும் குதிகொள்வீர்.

(பாடல் 10)

நீங்கள் இளமையில் சூரியனைக் கனிந்த பழமென்று கருதித் தாவியபோது, இந்திரன் வச்சிராயுதத்தால் அடித்தான்; அதனால் உங்கள் கவுள் (கன்னம்) முறிந்து நீங்கள் மூர்ச்சையுற்தால் வாயுதேவன் சினங்கொண்டு, உலகில் காற்றின் இயக்கத்தையே நிறுத்திவிட்டான். அதனால் பிரமன், சிவன் முதலிய தேவர்களெல்லோரும் தோன்றி அந்த வாயுதேவனை மனங்குளிர்விப்பதற்காகத் தம் தம் படைக் கருவிகளால், நீங்கள் அழியாதிருக்க வரமளித்தனர். மேலும், நெருப்பாலும், நீராலும்,  அழிவில்லை என்றும் வரமளித்தனர். நீங்கள் ஒரே தாவலில் அண்டம் விட்டு அண்டம் தாவக்கூடியவர்.


நல்லவும் ஒன்றோ தீயவும் நாடி நவை தீரச்

சொல்லவும் வல்லீர் காரியம் நீரே துணிவுற்றீர்,

வெல்லவும் வல்லீர் மீளவும் வல்லீர் மிடல் உண்டே,

கொல்லவும் வல்லீர் தோள் வலிஎன்றும் குறையாதீர்.

(பாடல் 11)

நல்லனமட்டுமன்றித் தீயவற்றையும் நாடி, குற்றம் தீரும்வரையில் தீர்வு கூறும் திறம் உங்களிடம் உண்டு. செய்யத்தக்கது எது, என்று ஆராந்து அதை துணிவுடன் செய்யும் ஆற்றல் உடையவர். அக்கரை சென்று, எதிரிகளை அழித்து, மீண்டு வரும் வல்லமை பொருந்தியவர் நீரே என்கிறார்.

(அனுமனிடம் ஒரு சிறந்த அமைச்சனுக்கு உரியனவும், சிறந்த போர் வீரனுக்கு உரியனவுமான அரிய திறன்கள் அமைந்துள்ளமை காட்டப்பெற்றுள்ளது.)


மேரு கிரிக்கும் மீதுற நிற்கும் பெரு மெய்யீர்,

மாரி துளிக்கும் தாரை இடுக்கும் வர வல்லீர்,

பாரை எடுக்கும் நோன்மை வலத்தீர் பழி அற்றீர்,

சூரியனைச் சென்று ஒண்கையகத்தும் தொட வல்லீர்.

(பாடல் 12)

உங்கள் உடம்பு வளரவேண்டுமென்று நினைத்தால், மேருமலையைக் காட்டிலும் உங்கள் உடம்பு பெரியதாகும்; அந்த உடம்பை மழைத் துளிகளிடையே செல்லும் அளவுக்கு சிறிதாக, ஒடுக்க விரும்பினால் உங்கள் உடலை அணுவைக் காட்டிலும்  சிரியதாக்கவும் வல்லீர்.

நீங்கள், பூமியையே பெயர்த்தெடுக்கும் வல்லமை உடையவர். மேலே சென்று சூரியனைத்  தொட வல்லவர். தான் பெற்ற வரங்களை தீய வழியில் செலுத்தாதவர். அதனால், பழியில்லாதவர்.


அறிந்து திறத்து ஆறு எண்ணி அறத்து ஆறழியாமை,

மறிந்து உருளப் போர் வாலியை வெல்லும் மதி வல்லீர்,

பொறிந்து இமையோர் கோன் வச்சிர பாணம் புக மூழ்க

எறிந்துழி இற்றோர் புன் மயிரேனும் இழவாதீர்.

(பாடல் 13)

வாலி வதத்தில் தர்மம் பிறழவில்லை என்பதற்கு அனுமன் தக்க அறிவுரை கூறியிருக்க வேண்டும், என்பதற்கும் இத்தொடர் சான்றாகிறது. அனுமன் இராமனுடன் சுக்கிரீவனை நட்புச் செய்வித்தவுடனே, முதலில் வாலியை வதைசெய்து, பின்பு சீதையைத் தேடுவது மிகவும், நன்மை தருவது என்று கூறினானாதலால் அவனை “வாலியை வெல்லும் மதிவல்லீர்” என்றும் விளக்கலாம். 

நீங்கள் ஓர் பாலகனாய் இருந்தபோது, சூரியனை ஒரு கனியெனக் கருதி அதனைப் பறித்துண்ண வானில் எழுந்தபோது இந்திரன் உங்கள் மேல் தன் வச்சிரப் படையை ஏவியதை  இமையோர் கோன் வச்சிரபாணம் புக மூழ்க எறிந்துழி  என்றார். ஆனால், அதனால் உங்களுக்கு, ஒரு முடி கூட உதிரவில்லை.


போர்முன் எதிர்ந்தால் மூ உலகேனும் பொருள் ஆகா,

ஒர்வில் வலம் கொண்டு ஒல்கல் இல் வீரத்து உயர் தோளீர்,

பாருலகு எங்கும் பேர் இருள் சீக்கும் பகலோன்முன்,

தேர் முன் நடந்தே ஆரிய நூலும் தெரிவுற்றீர்.

(பாடல் 14)

நீங்கள் சூரியதேவனிடம் வியாகரணம் முதலிய கலைகளைக் கற்க விரும்ப, அவன், தான் எப்பொழுதும் வானவீதி வழியே உலகங்களைச் சுற்றிச் செல்பவனாதலால்,  ஓரிடத்திலிருந்து உங்களுக்கு பாடம் சொல்ல இயலாது என்று கூற, நீங்கள் அவன் எதிர் முகமாய், பின்னோக்கி நடந்து சென்றே பாடங்கேட்டு நவவியாகரண பண்டிதன் ஆனீர்.                                         

நீதியில் நின்றீர் வாய்மை அமைந்தீர் நினைவாலும்

மாதர் தவம் பேணாது வளர்ந்தீர் மறை எல்லாம்

ஓதி யுணர்ந்தீர் ஊழி கடந்தீர் உல கீனும்

ஆதி அயன்தானே என யாரும் அறைகின்றீர்.

(பாடல் 15)

நீங்கள் நித்தியப் பிரமச்சாரியாதலால், மகளிர் இன்பத்தை மனத்தாலும்  எண்ணாது வளர்ந்துள்ளீர்; நினைவாலு் மாதர்நலம் பேணாது வளர்ந்தீர் என்றும், சிரஞ்சீவி யாதலால் ஊழி கடந்தீர் என்றும், அடுத்த பிரம பட்டத்தைப் பெறக் கூறியவராதலால் ஆதி அயன்தானே யென யாரும் அறைகின்றீர் என்றும் கூறப் பெற்றீர். 


அண்ணல் அம் மைந்தர்க்கு அன்பு சிறந்தீர் அதனாலே,

கண்ணி உணர்ந்தீர் கருமுமம் நுமக்கே கடன் என்னத்

திண்ணிது அமைந்தீர் செய்து முடிப்பீர் சிதைவு இன்றால்,

புண்ணியம் ஒன்றே என்றும் நிலைக்கும் பொருள் கொண்டீர்.

(பாடல் 16)

நீங்கள் பெருமையில் சிறந்த அந்த இராம, இலக்குவரிடத்தில் பேரன்புடையவர். அதனால்   சீதையைத் தேடிச்செய்தியறிந்து வருவது உமது கடமையென்று ஏற்றுக் கொண்டீர்.  எனவே அதைச் செய்து முடிப்பீர். புண்ணியம் ஒன்றையே எப்பொழுதும் அழியாமல் நிலைக்கக் கூடிய பொருளென்று  மனத்தில் உறுதியாகக் கருதியிருக்கின்றீர்.

(வானரர் யாவரும் இறப்பதாக இருந்த நிலையில் அதனைத் தடுத்து அனுமன் பின்னுந் தேடுமாறு ஆலோசனை கூறும் பொழுது சீதையுள்ள இடம் தெரிந்தனராதலால் கண்ணியுணர்ந்தீர் கருமம் என்றார் ஜாம்பவான்.


அடங்கபும் வல்லீர்காலமது அன்றேல் அமர்வந்தால்,

மடங்கல் முனிந்தாலன்ன வலத்தீர் மதி நாடித்

தொடங்கியது ஒன்றோ முற்றும் முடிக்கும் தொழில் அல்லால்,

இடங்கெட வெவ் வாய் ஊறு கிடைத்தால் இடை யாதீர்.

(பாடல் 17)

அது ஏற்ற காலமாய் இல்லாவிட்டால் அடங்கியிருக்கும் பொறுமையுடையீர். போர் மூளுமானால், ஓர் ஆண் சிங்கம் பொல் சினந்து எழும் வலிமையுடையவராவீர். செய்யத் தொடங்கிய ஒரு செயல் மட்டுமல்லாமல், அதற்குத் தொடர்பான எல்லாச் செயல்களையும் செய்து முடிக்கும்  திறமுடையவர். எந்த ஒரு இடையூறு நேர்ந்தாலும்  பின்வாங்காது நிற்பீர்.

ஊக்கமுடையான் ஒடுக்கம் பொருதகர், தாக்கற்குப் பேருந் தகைத்து. (486)

கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன், குத்தொக்க சீர்த்த விடத்து. (490)

அடுக்கி வரினும் அழிவிலான் உற்ற, இடுக்கண் இடுக்கட் படும்*. (625) 

என்னும் குறட்பாக்கள் இங்கு ஒப்பிடத் தக்கது.】                                                   

ஈண்டிய கொற்றத் திந்திரன் என்பான் முதல் யாரும்,

பூண்டு நடக்கும் நல் நெறியானும் பொறையானும்,

பண்டிதர் நீரே பார்த்தினிது உய்க்கும்படி வல்லீர்,

வேண்டிய போதே வேண்டுவ எய்தும் வினை வல்லீர்.

(பாடல் 18)

உமது ஒழுக்கம் இந்திரன் முதலோர்க்கும் வழி காட்டியாக உள்ளது என்பது முதலிரண்டடிகளின் கருத்து.  வீரம், வெற்றி முதலிய நற்பண்புகள் நிரம்பியிருப்பினும் அனுமன் அவற்றைச் சிறிதும் பாராட்டாமல் எளிய வானரன்போல இருப்பதால் அக் குணத்தைப் ’பொறையாலும்' என்று ஜாம்பவான் பாராட்டினார்.  கடல் கடந்து சீதையைக் கண்டு வரவேண்டுமென்று நினைத்தால் உடனே செய்து முடிக்கும் வல்லமை அனுமனுக்கு உண்டென்பதைப் பின்னிரண்டடிகள் குறிப்பிக்கும்.  வேண்டிய வேண்டியாங்கு எய்தலால், செய்தவம் ஈண்டு முயலப்படும். (265) என்ற குறளின்படி வேண்டிய போதே வேண்டுவன எய்தும் வினை எனத் தவ ஒழுக்கத்தைக் குறித்தார்.


"ஏகுமின் ஏகி எம்முயிர் நல்கி, இசைகொள்ளீர்,

ஓகை கொணர்ந்தும் மன்னையும் இன்னம் குறைவு இல்லாச்

சாகரம் முற்றும் தாவிமும் நீர் இக்கடல் தாவும்,

வேகம் அமைந்தீர்" என்று விரிஞ்சன் மகன் விட்டான்.

(பாடல் 19)

நீங்கள் இந்தக் கடலைக் கடந்து சென்று மீளுவதற்குரிய வலிமை பொருந்தியுள்ளீர். ஆதலால் விரைந்து சென்று சீதை இலங்கையில் உள்ள மகிழ்ச்சியான நல்ல செய்தியைக் கொண்டுவந்து எங்களையும், சீதையின் பிரிவால் வாடும் உம் தலைவன் ராமனையும் துன்பக் கடலைக் கடந்து கரையேறச் செய்வீர். மேலும் பலரது உயிரைக் காப்பாற்றுவதால் பெரும் புகழும் உமைக்குக் கிடைக்கும் என்று கூறி பிரமகுமாரனான ஜாம்பவான், கடலைக் கடந்து செல்லுமாறு) அனுமனைத் தூண்டிவிட்டார்.


ஜாம்பவானின் இந்த சொற்களைக் கேட்ட அனுமன், 

”இலங்கையை இடந்து வேரோடு இவ்வயின் தருக'' என்றாலும்,

''விலங்கினர் தம்மை எல்லாம் வேரொடும் விளிய நூறி,

பொலங் குழை மயிலைக் கொண்டு போது'' எனப் புகன்றிட்டாலும்,

கலங்கலீர்! உரைத்த மாற்றம் முடிக்குவல் கடிது; காண்டிர்"!

(பாடல் 21)

அவற்றைக் கேட்ட பிறகு அனுமன் ஜாம்பவானைப் பார்த்து "இலங்கை நகரை வேரோடு பெயர்த்தெடுத்து, இந்த இடத்திற்குக் கொண்டு வரவேண்டுமென்று நீங்கள் கூறினாலும்; எதிர்த்துத் தடுப்போரையெல்லாம் அடியோடு அழியுமாறு பொடிப் பொடியாக்கி, பொன்னாற் செய்த குழையையணிந்த மயில்போன்ற சாயலையுடைய சீதையை எடுத்துக் கொண்டுவா என்று சொன்னாலும், நீங்கள் கூறிய சொற்படியே செய்து முடிப்பேன்; அதை விரைவிலே கண்கூடாகக் காண்பீர்கள்; ஆகவே கலங்காதீர்கள்." இவ்வாறு கூறி அனுமன் கடல் தாண்டத் தயாரானார்.


அனுமனின் பெருமையைப் பேச இந்த ஏழெட்டு பக்கங்கள் போதாது. மற்றொரு சந்தர்ப்பத்தில் மேலும் பார்ப்போம்.


மீண்டும் சந்திப்போம்.

நான் ரசித்த கம்பன் - பாகம் 6

 வாலியின் வலிமை.


ராமாயணத்தில், கைகேயி, வாலி, ராவணன் ஆகிய மூவரைப் பற்றியுள்ள பொதுவான கருத்து, அவர்கள் தீயவர்கள் என்பதுதான். விதிவசத்தால் அவர்கள் தவறிழைத்தாலும், அவர்களுக்கும் சில சிறப்புகள் உள்ளன. சென்ற பதிவில் கைகேகியை பற்றிப் பார்த்தோம். இந்தப் பதிவில் வாலியைப் பற்றி கம்பன் சொற்களில் பார்ப்போம். வாலியின் பெருமையை, கிட்கிந்தா காண்டம், நட்புக்கோட் படலத்தில் பதின்மூன்று பாடல்களில் (38 – 48 & 51,52) விவரிக்கின்றார். 

கிட்கிந்தையின் மன்னன் வாலி. வானரக் குலத் தலைவன். சூரிய பகவானின் புத்திரன். சிறந்த சிவபக்தன். பாற்கடலைத் தனியாகக் கடையும் வல்லமை உடையவன். போரில் தனது எதிரில் நிற்பவர்களின் வீரத்தில் பாதியைத் தனக்கு வர, வரம் பெற்றவன். இலங்கை வேந்தன் இராவணனையே, தன் வாலில் கட்டித் தூக்கிய வலிமை பொருந்தியவன். 

நூல் பல கற்ற சிறப்புடையவன். சிறப்புகள் பல பெற்றவனானாலும் தன் வீரத்தில் தற்பெருமைக் கொண்டவன். மனைவியின் மேல் பேரன்பு கொண்டவன். வரம் பல பெற்றாலும் மதங்க முனிவரிடம் சாபமும் பெற்றவன். கோபம், நம்பிக்கையின்மை, தம்பி மனைவியைக் கைப்பற்றுதல், பிடிவாதம், பிறரை மதிக்காதத் தன்மை, தன் வீரத்தின் மீது கொண்ட கர்வம், வரபலத்தால் தன்னை யாராலும் வெல்லவே முடியாது என்ற இறுமாப்பு, யார் பேச்சையும் கேட்காதத் தன்மை போன்ற சில தீய குணங்களால் வீழ்ச்சியைக் கண்டவன் வாலி.

இராமபிரானின் அம்பு பட்டதால், செய்த பாவத்தினின்று விடுபட்டு அமரரானான். இராமனின் அம்பு பட்டதால் மனமாற்றம் ஏற்பட்டு, இறக்கும் நிலையில் தம்பி சுக்ரீவனையும், மகன் அங்கதனையும் இராமனிடம் அடைக்கலப் படுத்தி விட்ட பின்பே, உயிர்த் துறந்தான். தம்பி சிலநேரம் மது அருந்திவிட்டு தீமை செய்தாலும் அவன் மேல் அம்பினை எய்து விடாதே என்றும், இராமபிரானிடம் கேட்டுக்கொள்கிறான்.அத்தகைய வாலியின் மாட்சியையும், வீழ்ச்சியையும் கம்பராமாயணத்தின் வழி ஆராய்வோம்.

கழலும் தேவரோடு அவுணர் கண்ணின் நின்று
உழலும் மந்தரத்து உருவு தேய முன்,
அழலும் கோள் அரா அகடு தீவிடச்
சுழலும் வேலையைக் கடையும் தோளினான்.
(நட்புக்கோட் படலம் - 38)

தேவர்களுடன் சேர்ந்து, அசுரர்களின் எதிரில் நின்று மத்தாய் இருந்து சுழல்கின்ற மந்திர மலையின் வடிவம் தேயவும், சீறும் தன்மை கொண்ட வாசுகி எனும் பாம்பின் நடுவுடலானது தேய்ந்து போகவும், திருப்பாற்கடலை முற்காலத்தில் தான் ஒருவனாய் நின்று கடைந்த தோள் வலிமை உடையவன்.


நிலனும் நீரும் மா நெருப்பும் காற்றும் என்று
உலைவில் பூதம் நான்கு உடைய ஆற்றலான்;
அலையின் வேலை சூழ் கிடந்த ஆழி மா
மலையின் நின்றும் இம் மலையின் வாவுவான்.
(நட்புக்கோட் படலம் 39)

பூமியும், நீரும், தீயும் காற்றும் ஆகிய அழிவற்ற பூதங்கள் நான்கும் ஒன்று கூடியது போன்ற வலிமையுடையவன். அலைகளையுடைய எல்லைப்புறக் கடல்கள் சூழ்ந்துள்ள சக்கரவாளகிரி என்னும் மலையிலிருந்தும் இங்கு இருக்கும் மலையில் தாவும் வன்மையுடையவன்.


கிட்டுவார் பொராக் கிடைக்கின் அன்னவர்
பட்ட நல்வலம் பாகம் எய்துவான்;
எட்டு மாதிரத்து இறுதி நாளும் உற்று
அட்டம் மூர்த்தி தாள் பணியும் ஆற்றலான்.
(நட்புக்கோட் படலம் - 40)

அவன் போரில், தன்னை எதிர்ப்பவர் வந்தால் அவர்களிடம் உள்ள வலிமையில் பாதி அளவைத் தான் அடையும்படியான வரத்தைப் பெற்றவன். எட்டுத்திக்குகளின் எல்லை வரையும், நாள்தோறும் சென்று அங்குள்ள ’அட்ட மூர்த்தி’ எனப்படும் சிவபெருமானின் திருவடிகளை வணங்கும் அன்பை உடையவன்.

கால் செலாது அவன் முன்னர்; கந்தன் வேள்
வேல் செலாது அவன் மார்பில்; வென்றியான்
வால் செலாத வாய் அலது இராவணன்
கோல் செலாது; அவன் குடை செலாது அரோ.
(நட்புக்கோட் படலம் 41)

அந்த வாலியின் வேகத்திற்கு முன்னால் காற்றும் செல்லாது. அந்த வாலியின் மார்பிலே முருகப்பெருமானின் வேலும் நுழையாது. வெற்றியை உடைய அந்த வாலியின் வால் செல்லாத இடத்திலே அன்றி, வால் சென்ற இடத்திலேயும் அந்த இராவணனின் ஆட்சியும், வெற்றியும் செல்லாது.

மேருவே முதல் கிரிகள் வேரொடும்
பேருமே அவன் பேருமேல்; நெடும்
காரும் வானமும் கதிரும் நாகமும்
தூருமே அவன் பெரிய தோள்களால்
(நட்புக்கோட் படலம் 42)

அந்த வாலி இடம் விட்டு எழுவானால் அந்த அதிர்ச்சியால் மேரு முதலிய பெரிய மலைகள் எல்லாம் வேரோடு இடம் விட்டுப் பெயர்ந்து போகும். அவனுடைய பெரிய தோள்களினாலே பெரிய மேகமும், வானமும், சூரிய சந்திரர்களும், மலைகளும் மறைந்து போய்விடும். 

பார் இடந்த வெம் பன்றி பண்டை நாள்
நீர் கடைந்த பேர் ஆமை நேர் உளான்;
மார்பு இடந்த மா எனினும் மற்றவன்
தார் கிடந்த தோள் தகைய வல்லதோ
(நட்புக்கோட் படலம் 43)

அவன் பூமியைத் தன் கொம்பால் பெயர்த்து மேல் எடுத்த வலிய திருமாலாகிய பன்றியையும், பழங்காலத்தில் கடலில் கிடந்த திருமாலாகிய பெரிய ஆமையையும், சமமாகக் கொள்ளத் தக்கவன். இரணியனின் மார்பைப் பிளந்து அழித்த நரசிம்மமே என்றாலும், அந்த வாலியின் தோள்களைக் கட்டுப்படுத்தி அடக்கக்கூடிய வலிமை உடையதோ?


படர்ந்த நீள் நெடும் தலை பரப்பி மீது
அடர்ந்து பாரம் வந்து உற அனந்தனும்
கிடந்து தாங்கும்; இக் கிரியை மேயினான்
நடந்து தாங்கும்; இப் புவனம் நாள் எலாம்.
(நட்புக்கோட் படலம் 44)

பூமியைத் தாங்கும் இந்தக் கிட்கிந்த மலையில் வாழும் வாலியானவன் நடக்கும் பூமியில் பாரம் மிகுதல் காரணமாக, ஆயிரம் எண்ணுள்ள தன் தலைகளைப் பரப்பிக் கொண்டு ஆதிசேஷன் கீழே இருந்தபடியே வாலி நடக்கும் இடமெல்லாம் நடந்து நாள்தோறும் இவ்வுலகத்தைத் தாங்குகிறான்.


கடல் ஒலிப்பதும் கால் சலிப்பதும்
மிடல் அருக்கர் தேர் மீது செல்வதும்
தொடர மற்றவன் சுளியும் என்று அலால்
அடலின் வெற்றியாய்! அயலின் ஆபவோ?
(நடபுக்கோட் படலம் 45)

வலிமையையும் வெற்றியையும் உடையவனே! கடல் ஒலிப்பதும், காற்று உலவுவதும் வலிமையுடைய சூரியர்கள் தேரில் உலவுவதும் அந்த வாலி சினம் கொள்வானே என்ற அச்சத்தால் தான். அதுவன்றி வேறு காரணங்கள் உண்டோ? 

வெள்ளம் ஏழுபத்து உள்ள மேருவைத்
தள்ளல் ஆன தோள் அரியின் தானையான்;
உள்ளம் ஒன்றி எவ் உயிரும் வாழுமால்
வள்ளலே! அவன் வலியின் வண்மையால்.


வெள்ளம்** என்னும் கணக்கை உடைய குரங்குப் படையை உடையவன். இத்தகைய அவனது வலிமையின் மிகுதியால் எல்லா உயிர்களுக்கும் அவன் கருத்துக்கு வேறுபடாது மனம் ஒன்றி வாழ்கின்றன. அந்த வாலியின் கர்ஜனையாகிய குரலுக்கு என்றும் அஞ்சுவதால், அவன் வாழும் இடத்துக்கு எதிராக மேகங்கள் இடித்து ஒலியை எழுப்பா. வெற்றி மிக்க கொடிய சிங்கங்கள் தாம் வாழும் மலைக் குகைகளில் கர்ஜிக்க மாட்டா. வலிமை யுடைய கொடிய காற்றும் மென்மையான தழைகள் நடுக்கம் கொள்ள அவற்றின் பக்கத்தில் நெருங்காது.
**வெள்ளம்: வாலியின் பல கோடி அக்குரோணி அளவிலான சேனைப் படை. 


"மொய்க்கொள் வாலினால் மிடல் இராவணன்
தொக்க தோள்உறத் தொடர்ப்படுத்த நாள்
புக்கிலாதவும் பொழி அரத்த நீர்
உக்கிலாத வேறு உலகம் யாவதோ"
(நட்புக் கோட் படலம் - 48)

சிவபூசை செய்து கொண்டிருந்த வாலியை இராவணன் பின்புறமாக வந்து பற்ற எண்ணியபோது, வாலி அவனை வாலினால் கட்டிக் கொண்டு எல்லா உலகங்களிலும் அவன் இரத்தம் சிந்துமாறு சுற்றிவந்து, பின்னர் அவன் வருந்தி வேண்டியதால் விடுத்தான் என்பது வரலாறு. இராவணன் வாலியின் வாலில் கட்டுண்ட நிலையை 'ஓர் இராவணன் என்பான் தன்னை, சுந்தரத்தோள்களோடும் வாலிடைத் தூங்கச் சுற்றி, சிந்துரக் கிரிகள் தாவித் திரிந்தனன்' (6997) என்ற அடிகளும் இதனை உணர்த்தும்.
அடுத்து,

மாயாவியைக் கொன்ற வாலி

மாயாவி என்ற அரக்கன் வாலியைப் போருக்கு அறைகூவி அழைத்தான். வாலியும் அவனோடு போரிடச் சென்றான். வாலியின் வலிமைக்கு முன் நிற்க முடியாத மாயாவி, ஒரு பிலத்துக்குள் சென்று, புகுந்து கொண்டான்.

முட்டி நின்று, அவன் முரண் உரத்தின் நேர்
ஒட்ட, அஞ்சி, நெஞ்சு உலைய ஓடினான்;
''வட்ட மண்டலத்து அரிது வாழ்வு'' எனா,
எட்ட அரும் பெரும் பிலனுள் எய்தினான்.
(நட்புக்கோட் படலம் - 51)

வாலியுடன் போரிடுகையில் மாயாவி தன் வலிமை குறைந்து, வாலியின் வன்மை மிகுவதைக் கண்டதும் புறமுதுகு காட்டி ஓடிப் பின் பிலத்தினுள் நுழைந்து ஒளித்தான். (பிலம் = சுரங்கம்.)
பின்பு,

எய்து காலை, அப்பிலனுள் எய்தி, ''யான்
நொய்தின் அங்கு அவற் கொணர்வென்; நோன்மையாய்!
செய்தி, காவல், நீ,சிறிது போழ்து'' எனா,
வெய்தின் எய்தினான், வெகுளி மேயினான்.
(நட்புக்கோட் படலம் – 52)

மாயாவி பிலத்தினுள் புகுந்ததைக் கண்ட வாலி, மிக்க சினங்கொண்டு, தம்பியிடம், வேறு வகையில் அவன் தப்பித்துச் செல்லாதவாறு காவல் செய்வாய்; என்று அந்த சுரங்க வாயிலில் காவல் வைத்து மாயாவியைத் தொடர விரைந்து சென்றான். வாலி, சுரங்கத்துக்குள் பதுங்கி இருந்த மாயாவியை கண்டு பிடித்துக் கொன்றான்.

துந்துபியைக் கொன்றவன்:

துந்துபி இரு கொம்புகளைத் தலையில் கொண்டவன். மந்திர மலையைப் போன்றத் தோற்றமுடையவன். அவன் திருமாலிடம் சென்று போர் செய்ய அழைக்க, அவர் தன்னால் இயலாது என்றும், உன் திறமைக்கு நீ சிவ பெருமானுடன் போரிட வேண்டும் என்று கூறினார். அவன் நேராகச் சென்று சிவனைப் போருக்கு அழைக்க, அவர் நீ தேவர்களுடன் போரிடு என்றார். அவன் தேவர்களைப் போருக்கு அழைக்க, அவர்கள் போருக்குரிய வாலியிடம் செல்வாயாக என்றனர். உடனே நேரடியாகச் சென்று வாலியைப் போருக்கு அழைத்தான். இருவருக்கும் போர் நடைபெற்றது.

புயல் கடந்து, இரவிதன் புகல் கடந்து, அயல் உளோர்
இயலும் மண்டிலம் இகந்து, எனையவும் தவிர, மேல்
வயிர வன் கரதலத்து அவன் வலித்து எறிய, அன்று
உயிரும் விண் படர, இவ் உடலும் இப் பரிசுஅரோ!
(துந்துபி படலம் - 13)

வாலி மேக மண்டலத்தைத் தாண்டிக், கதிரவன் இருக்கும் இடத்தையும் தாண்டி, மற்றும் உள்ள வானவர்கள் வாழ்கின்ற மண்டலங்கள் எல்லாம் கடந்து, மற்ற மேலிடங்கள் எல்லாவற்றையும் கடக்குமாறு, தன் உறுதியான வலிமையான கையால் அந்தத் துந்துபியை இழுத்து வீசி எறிந்தான். அப்போது அவ்வரக்கனின் உயிர் மேல் உலகத்திற்குச் செல்ல, உடல் இம்மண்ணுலகத்தில் விழுந்தது. இறுதியில் வாலியே வென்றான்.

இவ்வளவு வலிமை மிக்க வீரனான வாலி, ஏன் சுக்ரீவனுடன் பகைமை கொண்டான்?
மாயாவியைக் கொல்ல சுரங்கத்துக்குள் சென்ற வாலி இருபத்தெட்டு மாதங்களாகியும் வெளியில் வராததால், சுக்ரீவன் வருந்தினான். வாலி இறந்திருக்க வேண்டும் என்று கருதி, அமைச்சர்கள் சுக்ரீவனை அரசாட்சியை ஏற்றுக்கொள்ள வற்புறுத்தினர். ஆனால் சுக்ரீவன் இது குற்றமாகும் என்று கூறி, மறுத்தான். "நானும் பிலத்துக்குள் சென்று, தமையனை மீட்டுவருவேன். மாயாவி அண்ணனைக் கொன்றிருந்தால், நான் அவனைக் கொல்வேன், இல்லையென்றால் மாயாவி கையால் மடிவேன்" என்றான். அமைச்சர்கள் சுக்ரீவனுக்குக் கடமையை உணர்த்தி, அரசாட்சியை வற்புறுத்தி ஏற்கச் செய்தனர். மாயாவி வெளியே வராமல் இருக்க, பிலத்தின் வாயை, வானரர்கள் பாறைகளை வைத்து மூடினர். மாயாவியைக் கொன்றுவிட்டு வெளியே வந்த வாலி, பிலத்தின் வாய்ப்பகுதி பாறைகளால் மூடப்பட்டிருப்பதைக் கண்டு, கடும் சினம் கொண்டு, பாறைகளை உதைத்துத் தள்ளிவிட்டு வெளியே வந்தான். சுக்ரீவன் அவன் காலடியில் விழுந்து வணங்கினான். விருப்பமில்லாமல் அரசாட்சியைத் தான் ஏற்றுக்கொள்ள நேர்ந்த நிலையை விளக்கினான். இருப்பினும் அரசாட்சியை ஏற்றுக் கொண்டது தவறுதான் என்று கூறி, தன்னைப் பொறுத்தருள வேண்டினான். இது எதையும் நம்பாத வாலி, கோபத்தில் அவனைத் திட்டினான். அவனை அடிக்கத் தொடங்கினான். சுக்ரீவன் அதைத் தாங்க முடியாமல் தப்பி ஓடினான். வாலியும் விடாது பின் தொடர்ந்து சென்று, அவனைப் பிடித்துக் கொல்ல முயன்ற போது, சுக்ரீவன் அவனிடமிருந்து தப்பி, வாலி வர முடியாத ரிசியமுக பருவதத்தில் ஒளிந்து கொண்டான். அது மட்டுமல்லாமல் வாலி, தன் தம்பியின் மனைவியை கவர்ந்தான். பின்னர் இதுவே சகோதரர்களிடையே விரோதம் ஏற்பட்டு, வாலியின் வதத்தில் முடிந்தது.

மீண்டும் சந்திப்போம்,

Friday, 25 July 2025

நான் ரசித்த கம்பன் பாகம் 5

 தசரதனின் புத்திர பாசம்


பொதுவாகவே, அப்பாக்களுக்கு மகன்கள் மேல் உள்ள பாசம் சொல்லி மாளாது. மகள் மேல் உள்ள பாசத்தை அப்பாக்கள் கொட்டி தீர்த்து விடுகிறார்கள். ஆனால், மகன்கள் மேல் உள்ள பாசத்தை வெளியில் சொல்லுவது இல்லை. அது ஏனோ அப்படி ஆகி விடுகிறது. தசரதன் நிலையும் அப்படித்தான். இதைக் கம்பன் எப்படி சொல்கிறான் என்று பார்ப்போம்.

இராமன் சிறு குழந்தையாக தொட்டிலில் கிடக்கிறான். தசரதன் தன் மகனைப் பார்த்து உருகுகிறான். தசரதன் நினைக்கிறான், 'இவன் தான் உயிர்" என்று. மேலும் ஒரு படி மேலே சென்று "இவன் தான் என் உடலும்" என்கிறான். 

அதாவது அவனை தவிர்த்து தனக்கு எதுவும் இல்லை என்கிறான். உயிர் மட்டும் என்றால், உடல் தனது என்று ஆகி விடும். உயிரும், உடலும் என்றால் எல்லாம் அவனே. தசதரன் இராமனில் கரைந்து போகிறான். எப்படி, பாடலைப் பார்ப்போம்.

காவியும் ஒளிர்தரு கமலமும் எனவே,

ஓவிய எழில் உடை ஒருவனை அலது ஓர்

ஆவியும் உடலமும் இலது என அருளின்

மேவினன் உலகு உடை வேந்தர் தம் வேந்தன்.

(திரு அவதாரப் படலம் 304)

நீலோற்ப மலரும், ஒளி வீசும் தாமரை மலரும் போல, ஓவியத்தில் எழுதி வைத்த அழகைக் கொண்ட சிறந்த ஒருவனை, அவனைத் தவிர்த்து உயிரும் உடம்பும் இல்லை என்று கருணை மேலிட உலகத்தை ஆளுகின்ற வேந்தர்களுகெல்லாம் வேந்தனான தசரதன், ராமன் மீது பேரன்பு உடையவனாய் இருந்தான்.

சாதாரண அழகு என்றால் வயதாக வயதாக அது குன்றும். ஓவியத்தில் எழுதிய அழகு என்றால் எத்தனை யுகம் ஆனாலும் அப்படியே இருக்கும். இராமனின் அழகு அழியாத அழகு என்பதற்கு அதை உதாரணமாகச் சொல்கிறான்.

அடுத்து, விஸ்வாமித்திரர், வேள்வியைக் காக்க ராமனை தன்னுடன் அனுப்புமாறு கேட்டபோது, மின்னல் தாக்கியதுபோல் உணர்ந்தான். எப்படியென்றால்,

எண் இலா அருந் தவத்தோன் இயம்பிய சொல் மருமத்தின் எறி வேல் பாய்ந்த

புண்ணில் ஆம் பெரும் புழையில் கனல் நுழைந்தாலெனச் செவியில் புகுதலோடும்.

உள் நிலாவிய துயரம் பிடித்து உந்த, ஆர் உயிர் நின்று ஊசலாட.

"கண் இலான் பெற்று இழந்தான்” என உழந்தான் கடுந் துயரம் – கால வேலான்.

 (பா.கா. கையடைப் படலம் 328)

தவஸ்ரேஷ்டரான விஸ்வாமித்திரர் சொன்ன இந்தச் சொற்களானது தசரதன் காதுகளில் புகுந்தபோது,  மார்பின் மேல் எறிந்த வேல் பாய்ந்த ஆழ்ந்த புண்ணில், கனன்று கொண்டிருக்கும் தீ நுழைந்தது போல உணர்ந்தான். (**அவன்உள்ளத்திலே நிலைத்துள்ள துயரம்**) உயிரை ஊசல்போல் ஆட வைத்ததாகவும். கண்கள் இல்லாதவன் அதனைப் பெற்றுப் பின்னர் இழந்தது போலவும், பகைவரை வேல் கொண்டு அழிக்கும் வேந்தர்க்கெல்லாம் வேந்தனான தசரதன், கடுமையான துன்பத்தினாலே மிகவும் வருந்தினான்.

(**உள்  நிலாவிய துயரமாவது, முன்பொருநாள் தசரதன் சிரவணனை அம்பால் கொல்ல அவனது  பெற்றோர்  தந்த  சாபத்தால்  நிலவிய  துன்பமாம்.**)          

வேல் பண்ண புண்ணில் தீப்பட்டது போல், பால ராமனைப்  பிரிய வேண்டுமே என்ற ஆதங்கத்தில் துயர் படுகிறான்.

விஸ்வாமித்திரரின் வேள்வியைக் காக்க வேண்டிய அவசியத்தையும், அங்கு நிகழப்போகும் தாடகை வதம், அகலிகை சாப விமோசனம், சீதாப்பிராட்டியின் சுயம்வரம், ராமன் – சீதை திருமணம் போன்ற நிகழ்வுகளை ஞான த்ரிஷ்டியில் கண்ட வசிட்டன், தசரதனுக்கு ராமன் செல்ல வேண்டிய அவசியத்தை விளக்கி, ராமனை விஸ்வாமித்திரருடன் அனுப்பி வைக்கிறார்.

மேற்சொன்ன நிகழ்ச்சிகள் நடந்து முடிந்தன. அடுத்து ராமனுக்கு மணிமுடி சூட்ட நகரமே விழாக்கோலம் பூண்டிருந்தது. ஆனால் விதியின் செயல் வேறாக இருந்தது.

கைகேயி, தசரதன் வாக்களித்த இரண்டு வரங்களை கேட்டுப் பெற்றாள். அதில் முதல் வரம் பரதன் நாட்டை ஆள வேண்டும், இரண்டாவது வரம் ராமன் கானகம் போகவேண்டும்  என்பதே.

இந்த இரண்டாவது வரத்தைக் கேட்டவுடன் தசரதன் அடைந்த வேதனை உச்சத்தை அடைந்தது. கம்பன் இதை, முன்பு விஸ்வாமித்திரர் ராமனை கேட்டபோது, வேல் பாய்ந்த புண்ணில் தீப்பட்டது போல் இருந்தது என்றார். இப்போது மீண்டும் ராமனைப் பிரிய வேண்டும் என்று கேட்டவுடன், அந்த  தீப்பட்ட புண்ணில் வேல் பாய்ந்ததுபோல்  துடி துடித்தான் என்கிறார். இதை,

இந்த நெடுஞ் சொல் அவ் ஏழை கூறும் முன்னே,

வெந்த கொடும் புணில் வேல் நுழைந்தது ஒப்ப,

சிந்தை திரிந்து, திகைத்து, அயர்ந்து, வீழ்ந்தான்;

மைந்தன் அலாது உயிர் வேறு இலாத மன்னன்.

(கைகேயி சூழ்வினை படலம் 1603)

மகனாகிய இராமனைத் தவிர,  தன்னுயிர் என்று வேறு ஒன்று இல்லாத தசரதன், அந்த அறிவற்றவளான கைகேயி, இந்தக் கொடும் சொற்களை சொல்லி முடிக்கும் முன்னே, ஏற்கெனவே  தீயினால் சுட்ட கொடிய புண்ணில் (பாடல் 328) கூரிய வேல் பாய்ந்தாற்போல, மனம் தடுமாறி; அறிவு மயங்கி, அயர்ந்து சோர்ந்து தரையில் சாய்ந்தான்.

புத்திர பாசம் சில சமயம் சுகத்தையும், சில சமயம் சோகத்தையும் தரும் என்பதற்கு தசரதனே உதாரணம்.


மீண்டும் சந்திப்போம்.

நான் ரசித்த கம்பன் பாகம் 4

 சூர்ப்பனகையின் அழகு!!!


முந்தைய பதிவில் சீதையின் அழகைக் கண்டு ரசித்தோம். இந்தப் பதிவில் அவளை எதிரியாகக் கருதும் சூர்ப்பனகையின் அழகைக் (?) கண்டு ரசிப்போம். என்ன!! வியப்பாக உள்ளதா? அரக்கிக்கு ஏது அழகு? அங்கும் அவளுக்குத் திருமகள்தான் அருள் புரிகிறாள்.

கானகத்தில் ராமன் தங்கியிருந்த பர்ணசாலையின் பக்கம் வருகிறாள் சூர்ப்பனகை. தொலைவில் இருந்து ராமனைக் காண்கிறாள். ராமனின் தோளழகும், தாளழகும், வடிவழகும் அவளை மையலுறச் செய்கின்றன. அவன் மீது ஒரு தலையாய், நெறியற்ற, முறையற்ற காதல் கொள்கிறாள்..

அவனை நேரில் பார்த்து தன் காதலை வெளிப்படுத்த எண்ணுகிறாள். தன் குரூரமான அரக்கி உருவத்தைக் கண்டால், விளைவு எதிர்மறையாகிவிடும் என்று அஞ்சி, திருமகளை வேண்டி ஒரு அழகிய ரூபத்தைப் பெற்று ராமன் முன் வருகிறாள்.  அவளைத்தான் இங்கு கம்பன் வர்ணிக்கிறான்.

பஞ்சி ஒளிர், விஞ்சு குளிர் பல்லவம் அனுங்க,

செஞ் செவிய கஞ்சம் நிகர் சீறடியள் ஆகி,

அம் சொல் இள மஞ்ஞை என, அன்னம் என, மின்னும்

வஞ்சி என, நஞ்சம் என, வஞ்ச மகள் வந்தாள்.

(சூர்ப்பனகை படலம் 2762)

(கம்பன் இந்தப் பாடலை அற்புதமான சந்தக்கட்டில் அமைத்திருக்கிறார்)

செம்பஞ்சு போன்ற மிகச் செழித்த தளிர்களினும் மென்மையான அழகுள்ள தாமரைக்கு ஒப்பான சிறிய பாதங்கள் உடையவள்; அழகிய சொல்லுடைய இளமையான மயில் போலவும், அன்னம் போலவும், வஞ்சிக் கொடி போலவும், உருவம் கொண்டாலும், கொடிய விஷம் போலவும், வஞ்சனை புரியும் சூர்ப்பணகை அங்கு இராமன் முன் வந்தாள்.

அடுத்து,

பொன் ஒழுகு பூவில் உறை பூவை, எழில் பூவை,

பின் எழில் கொள் வாள் இணை பிறழ்ந்து ஒளிர் முகத்தாள்,

கன்னி எழில் கொண்டது, கலைத் தட மணித் தேர்,

மின் இழிவ தன்மை, இது விண் இழிவது என்ன,

(சூர்ப்பனகை படலம் 2763)

பொன்னிறமாய் விளங்கும் செந்தாமரை மலரில் வாழும் திருமகளின் அழகும்; அழகு மிக்க நாகணவாய்ப் பறவையின் அழகும், இரண்டு வாள்கள் போலக் கண்கள் மாறி மாறி ஒளி வீசும் முகத்தை உடையவளாம் சூர்ப்பணகை, அழகிய சீலைகளால் ஒப்பனை செய்யப் பெற்ற பெரிய அழகிய தேர் ஒன்று மின்னல் இறங்குவது போல் வானிலிருந்து கீழே இறங்கி வருவது போல் இருந்தது.,

அழகும், இளமையும், புதுமையான உருவும் கொண்ட சூர்ப்பணகை இளம் பெண் வடிவையும் மேகலை சூழ்ந்த அல்குலையும் கொண்ட மின்னல் ஒன்று வானிலிருந்து இறங்கி வந்தது போல் வந்தாள் எனவும் கூறுவர்.

அப்படி வந்த சூர்ப்பனகையைக் கண்ட ராமன் ஒரு கணம் நிலை குலைந்தான். அவன் மனதில் தோன்றிய எண்ணத்தை கம்பன் வார்த்தைகளில் வடிக்கிறான்.

பேர் உழைய நாகர்-உலகில், பிறிது வானில்,

பாருழையின், இல்லது ஒரு மெல் உருவு பாரா,

ஆருழை அடங்கும்? அழகிற்கு அவதி உண்டோ?

"நேரிழையர் யாவர், இவர் நேர்"என நினைத்தான்.

(சூர்ப்பனகை படலம் 2767)

பெரிய விஷமுடைய நாகங்கள் வாழும் பாதளத்திலும்; அதனில் வேறான சுவர்க்க லோகத்திலும்; நில உலகத்திலும் இல்லாததான ஒப்பற்ற மென்மை பொருந்திய பெண் வடிவைப் (இராமன்) பார்த்து, இவள் அழகு யாரிடத்து அமையும்? இவள் அழகிற்கு எல்லை உள்ளதோ? மகளிருள் இவளுக்கு ஒப்பானவர் யார் உள்ளார்? என்று எண்ணினான்.


மீண்டும் சந்திப்போம்,

நான் ரசித்த கம்பன் பாகம் 3

 சீதையின் அழகு


திரைப்படத்திலும், சின்னத் திரையிலும் கதாநாயகியை, மகாலக்ஷ்மியைப் போல இருக்கேன்னு விவரிப்பார்கள். அப்படியானால், உண்மையிலே மஹாலக்ஷ்மியான சீதையை எப்படி விவரிப்பார்கள்? வாருங்கள், கம்பன் எப்படி வர்ணிக்கிறான் என்று பார்ப்போம்.

செப்பும்காலை. செங்கமலத்தோன் முதல் யாரும்.

எப் பெண்பாலும் கொண்டு உவமிப்போர் உவமிக்கும்.

அப் பெண் தானே ஆயின போது. இங்கு. அயல் வேறு ஓர்

ஒப்பு எங்கே கொண்டு. எவ் வகை நாடி. உரை செய்வோம்?

(மிதிலைக் காட்சி படலம் 503)

செந்தாமரை மலரில் வாழும் பிரமன் முதலாக, எளிய மாந்தர் வரை, எவரும் உவமையாகச் சொல்லும் அந்தத் திருமகளே இங்கு சீதையாய் வந்துள்ளதால், அத்திருமகளைவிட வேறு ஓர்  உவமைப்  பொருளை எந்த இடத்திலே கண்டு  எவ்வாறு  எடுத்து உரைப்போம்?

சீதைக்கு உவமை கூற இயலாது,, ஏனென்றால் அவள் உவமை கடந்தவள். எவ்வாறெனில்.  எல்லாப் பெண்களுக்கும்  எல்லாராலும் உவமையாக  எடுத்துச் சொல்லப்படுகிறவள்  திருமகள். அவளே இப்போது மிதிலையில் சீதையாகப் பிறந்திருக்கிறாளே! அப்படியிருக்க அவளுக்கு வேறுயாரை உவமையாகக் கூறமுடியும்?   

அடுத்து, ராமனும் சீதையும் கண்ணொடு கண் நோக்கி காதல் வயப்பட்டபிறகு, சுயம்வரம் முடிந்து, திருமணம் நிச்சயிக்கப் படுகிறது. அவள் திருமண மண்டபத்துக்கு வருகிறாள். எப்படி?

சிலையுடைக் கயல், வாள் திங்கள், ஏந்தி, ஓர் செம் பொன் கொம்பர்,

முலை இடை முகிழ்ப்ப, தேரின் முன் திசை முளைத்தது அன்னாள்,

அலை கடல் பிறந்து, பின்னை அவனியில் தோன்றி, மீள

மலையிடை உதிக்கின்றாள் போல், மண்டபம் அதனில் வந்தாள்.

(கடிமணப் படலம் 1238)

சீதையின் வரவு எப்படி இருந்ததென்றால், ஒரு சிவந்த பொன்னின் நிறமுடைய பூக்கொம்பு, வில் போன்ற புருவமும், கயல் போன்ற விழிகளும், பூரண நிலவைப் போன்ற முகமும், முல்லை அரும்பை போன்ற புன்னகையுடன், தேர் மேல் ஏறிக் கிழக்கில் தோன்றியதைப்போல, பிராட்டி, திருப்பாற்கடலில் திருமகளாய்த் தோன்றி, பின்பு மண்ணுலகில் சீதையாய் அவதரித்து, மலையிடை உதிக்கும் ஆதவன் போல் பிரகாசமாக மண்டபத்துள் வந்தாள்.

இவற்றுக்கெல்லாம் மேலே, ராமன் மீது  காமமுற்று சீதையைத் தன் எதிரியாக நினைக்கும் சூர்ப்பனகை சீதையை வர்ணிப்பது வேறே லெவல். அவள் குறிக்கோள் ராவணனைத் தூண்டி, சீதையைக் கவர்வதே. ஆனால் அவள் வர்ணனைகளில் வஞ்சம் இல்லை. அவற்றில் சில பாடல்களை பார்ப்போம்.

காமரம் முரலும் பாடல், கள் எனக் கனிந்த இன் சொல்,

தேம் மலர் நிரந்த கூந்தல், தேவர்க்கும் அணங்கு ஆம் என்னத்

தாமரை இருந்த தையல் சேடி ஆம் தரமும் அல்லள்;

யாம் உரை வழங்கும் என்பது ஏழைமை பாலது அன்றோ.

(சூர்ப்பனகை படலம் 3135)

அவளுடைய, மதுவைப் போல் மயக்கமூட்டும் இனிய மொழிகள் காமரம் என்னும் பண்ணிசை கமழும் பாடலை ஒக்கும்; இனிய மலர்கள் சூடப் பெற்ற கூந்தலை உடைய அவள், தேவமாதரும் போற்றும் அழகுமிக்கவளாம் என்று சொல்லலாம்; தாமரை மலரில் வசிக்கும் திருமகளும் அவளுக்கு தோழியாதற்குக் கூடத் தகுதி அற்றவள்; அவளுடைய அழகைக் குறித்து நான் எடுத்துச் சொல்லக் கருதுவது அறியாமையின் வெளிப்பாடு என்று ஆகும் அன்றோ?

அடுத்து,

மஞ்சு ஒக்கும் அளக ஓதி; மழை ஒக்கும் வடித்த கூந்தல்;

பஞ்சு ஒக்கும் அடிகள், செய்ய பவளத்தை விரல்கள் ஒக்கும்;

அம் சொற்கள் அமுதில் அள்ளிக் கொண்டவள் வதனம், ஐய!

கஞ்சத்தின் அளவிற்றேனும்,கடலினும் பெரிய கண்கள்

(சூர்ப்பனகை படலம் 3136)

அழகிய சொற்களை அமுதத்திலிருந்து முகந்தெடுத்துக் கொண்ட, அம்மங்கையின் கூந்தல் மேகத்தை நிகர்க்கும்; முடிக்காத தாழ்ந்த கூந்தலோ பூமியில் இறங்கும் மழைக்கால கார்மேகம் போன்றிருக்கும்; பாதங்கள் செம்பஞ்சினைப் போன்றிருக்கும்; விரல்கள் சிவந்த பவளத் துண்டுகள் போல அழகானவை; முகமானது (சேற்றில் உதிப்பதுபோன்ற களங்கங்கள் இல்லாத) தாமரைப்பூ போன்றதாயினும்; அம்முகத்துக் கண்களோ கடலைக் காட்டிலும் பெரியவை.

மேலும் சொல்கிறாள்,

வில் ஒக்கும் நுதல் என்றாலும், வேல் ஒக்கும் விழி என்றாலும்,

பல் ஒக்கும் முத்து என்றாலும், பவளத்தை இதழ் என்றாலும்,

சொல் ஒக்கும்; பொருள் ஒவ்வாதால்;

சொல்லல் ஆம் உவமை உண்டோ?

”நெல் ஒக்கும் புல்" என்றாலும், நேர் உரைத்து ஆகவற்றோ!

(சூர்ப்பனகை படலம்3140)

வில்லைப் போல் நெற்றி அமைந்திருக்கிறது என்று சொன்னாலும்; கண்கள் வேல் போல் விளங்குகின்றன என்று சொன்னாலும்; பற்கள் முத்துக்கள் போன்றிருக்கும் என்று சொன்னாலும்; பவளமே இவள் இதழ்கள் என்று சொன்னாலும்; உவமிக்கப்படும் சொல் பொருத்தம் ஆகலாம்; அவ்வாறு பொருள் ஒவ்வாதால் சீதையின் உறுப்பழகை உணர்த்தும் முழுமையான பொருளால் பொருந்தாது; எனவே, சொல்லத்தக்க உவமை வேறு ஏதேனும் உளதாகுமோ?; புல்லைப் போன்றிருக்கும் நெல் என்று கூறினாலும் புல் நெல்லாகுமா?

வருணனைக்கு அப்பாற்பட்ட பொலிவும் அழகும் சீதையிடம் பொருந்தியுள்ளன எனவும், அதனால் நீயே நேரிற் காண்பதே பொருத்தம் எனவும் சூர்ப்பணகை உணர்த்துகின்றாள்.

இவை அனைத்தையும் தூக்கி அடிக்கும் வர்ணனை, சூர்ப்பனகை  ராமனின் பர்ணசாலையில் முதல் முறை சீதையைக் கண்டபோது வர்ணித்தது.

சீதையின் அழகு, அவளை சில கணம் மெய்மறந்து நிலை தடுமாறச் செய்கிறது. அவளையும் அறியாமல், சீதையை வர்ணிக்கிறாள்.

பண்புற நெடிது நோக்கி, ‘படைக்குனர் சிறுமையல்லால்,

எண்பிறங்கு அழகிற்கு எல்லையில்லை ஆம்’ என்று நின்றாள்;

கண் பிற பொருளில் செல்லா; கருத்து எனின் அஃதே;

கண்ட பெண் பிறந்தேனுக்கு என்றால், என்படும் பிறர்க்கு?’ என்றாள்.

(கரண் வதைப் படலம் 2791)

அவள் சொன்னது, “படைப்போர்க்கு குறைவே அல்லாமல் கருத்தில் விளங்கும் அழகிற்கு ஒரு வரையறையே கிடையாது. இவளைப் பார்த்த கண்கள் மற்றொன்றைப் பார்க்காது; இவளை நினைத்த நெஞ்சம் மற்றொன்றை நினைக்காது. பெண்ணாகப் பிறந்த எனக்கே இந்நிலை உண்டானால், இவளைக் கண்ட ஆடவர்க்கு என்னாகுமோ?” என்று வியந்து கூறினாள்.

[கண்ணதாசன் வரிகளில், உன்னழகைக் கண்டு கொண்டால் பெண்களுக்கே ஆசை வரும்;

பெண்களுக்கே ஆசை வந்தால் என் நிலைமை என்ன சொல்வேன்]

அடுத்த பதிவில் மீண்டும் கம்பனை ரசிப்போம்.

நான் ரசித்த கம்பன் பாகம் 2

கண்ணொடு கண் நோக்கின்


விஸ்வாமித்திரரும், ராம லக்ஷ்மணர்களும் அரண்மனையை நெருங்குகிறார்கள். அங்கே கன்னிமாடத்தில் சீதை நிற்கிறாள். அந்தக் காட்சியைக் கம்பர் இப்படி வர்ணிக்கிறார்:

பொன்னின் சோதி, போதின் நாற்றம், பொலிவேபோல்,

தென் உண் தேனின் தீம் சுவை, செம் சொல் கவி இன்பம்,

கன்னி மாடத்து உம்பரின் மாடே களி பேடோடு

அன்னம் ஆடு முன் துறை கண்டு ஆங்கு அயல் நின்றார்.

(பாடல் 502)

தங்கத்தின் பிரகாசம், பூவின் நறுமணம், வண்டுகள் அருந்துகின்ற தேனின் இனிமையான ருசி, சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதிய நல்ல கவிதை தரும் இன்பம்… இவை எல்லாவற்றையும் ஒன்றாகத் திரட்டியதுபோன்ற ஓர் உருவம், கன்னி மாடத்தில் நிற்கிறது. அங்கே அன்னங்கள் சேர்ந்து விளையாட, அவற்றின் நடுவே சீதை தோன்றுகிறாள்.

அப்பேர்ப்பட்ட சீதையை, ராமன் பார்க்கிறான், அவளும் அவனைப் பார்க்கிறாள், புகழ் பெற்ற ‘அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்’ பாடல் இப்படித் தொடங்குகிறது:

எண்ண அரு நலத்தினாள், இனையள் நின்று உழிக்

கண்ணொடு கண்ணினைக் கவ்வி, ஒன்றை ஒன்று

உண்ணவும், நிலை பெறாது உணர்வும் ஒன்றிட,

அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள்.

(பாடல் 514)

நினைக்கவும் அரிதான அழகைக் கொண்ட சீதை கன்னிமாடத்தில் நிற்க, அவளுடைய கண்களும் ராமனின் கண்களும் ஒன்றை ஒன்று கவ்வி உண்கின்றன, இருவரும் நிலை தடுமாறுகிறார்கள், காதல்வயப்படுகிறார்கள்.

[இந்தக் காட்சி வால்மீகியில் இல்லை. அங்கே ராமன் வில்லை உடைத்தபிறகுதான் சீதையைப் பார்க்கிறான். அதிலிருந்து சற்றே மாறுபட்டு, தமிழுக்காகக் கம்பர் வடித்துத் தந்த அற்புதமான பகுதி இந்த ‘மிதிலை காட்சிப் படலம்  பாடல்கள்.]

கண்களின் வழியே சீதைக்குள் நுழைந்த காதல் நோய், அவளுடைய உடல்முழுவதும் பரந்து வருத்தியது. அவள் துடிதுடித்தாள். சீதை பலவிதமாகப் புலம்பத் தொடங்குகிறாள். அவற்றுள் ஓர் அருமையான பாட்டு:

இந்திர நீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்,

சந்திர வதனமும், தாழ்ந்த கைகளும்,

சுந்தர மணி வரைத் தோளுமே அல

முந்தி, என் உயிரை அம் முறுவல் உண்டதே!

(பாடல் எண் 536)

’என்னை வருத்துவது எது? இந்திர நீலம் என்ற உயர்ந்த கல்லைப்போல இருண்ட அவனுடைய தலைமுடியா? நிலவைப் போன்ற முகமா? நீண்ட கைகளா? அழகான ரத்தின மலை போன்ற தோள்களா?’

‘இவை எதுவுமே இல்லை, எல்லாவற்றுக்கும் முன்பாக, அவனுடைய உதட்டில் பரவிய அந்தப் புன்சிரிப்பு, அதுதான் என்னுடைய உயிரை உண்டுவிட்டது!’

சீதையைப் பார்த்துவிட்டு விசுவாமித்திரருடன் சென்ற ராமனும் அப்படிப்பட்ட ஒரு தவிப்பில்தான் சிக்கிக் கிடந்தான்.

விண்ணின் நீங்கிய மின் உரு. இம் முறை.

பெண்ணின் நல் நலம் பெற்றது உண்டேகொலோ?

எண்ணின். ஈது அலது என்று அறியேன்; இரு

கண்ணினுள்ளும் கருத்துளும் காண்பெனால்.

(பாடல் எண் 619)

அதாவது, மின்னல் தோன்றித் தோன்றி மறைவதுபோல், சீதையின் உருவம் அடுத்தடுத்துத் தோன்றியும் மறைந்தும் நிகழ்வதை புறக்கண்ணாலும்    அகக்கண்ணாலும் காண்கிறானாம்.

திடீரென்று ராமனுக்கு ஒரு சந்தேகம். ‘ஒருவேளை, அந்தப் பெண் ஏற்கெனவே திருமணமானவளாக இருந்துவிட்டால்? என்னுடைய காதல் பிழையாகிவிடுமே!’ மறுகணம், அவனே தன்னைச் சமாதானப்படுத்திக்கொள்கிறான . இன்றைக்கு நான் இந்தப் பெண்ணைப் பார்த்துக் காதல்வயப்படுகிறேன் என்றால், அவள் எனக்கெனப் பிறந்தவளாகதான் இருக்கவேண்டும்.

பொழுது விடிகிறது. விசுவாமித்திரர் அவனை ஜனகரிடம் அழைத்துச்சென்று அறிமுகப்படுத்துகிறார். சிவ தனுசு கொண்டுவரப்படுகிறது. யாராலும் தூக்கக்கூடமுடியாத அந்த வில்லை ராமன் எடுத்துப் பூட்டி முறித்துவிடுகிறான்.

ராமனை எண்ணி மயக்கத்தில் இருக்கும் சீதைக்கு ராமன் வில்லை முறித்த செய்தியைக் தெரிவிக்க. ‘நீலமாலை’ என்ற தோழி சீதை இருக்கும் இடத்தை நோக்கி மூச்சு வாங்க ஓடுகிறாள். உற்சாகத்துடன் சீதையிடம் சொல்கிறாள்.

இராமன்’ என்பது பெயர்;  இளைய கோவொடும்.

பராவ அரு முனியொடும். பதி வந்து எய்தினான்;

(724)

மாத்திரை அளவில் தாள் மடுத்து. முன் பயில்

"சூத்திரம் இது” எனதோளின் வாங்கினான்;

ஏத்தினர் இமையவர்; இழிந்த. பூ மழை;

வேத்தவை நடுக்குற முறிந்து வீழ்ந்ததே!

(பாடல் 726)

"இளவரசியே, யாரோ ஒருவன், ராமன் என்று பெயராம் தம்பியோடும் முனிவரோடும் வந்தான், பெரிய சிவ தனுசைக் கண்ணிமைக்கும் நேரத்துக்குள் கையில் பிடித்துத் தூக்கினான், ஒரு பக்கத்து முனையைக் காலால் மிதித்தான், ஏற்கெனவே பலமுறை பழகிய ஒரு வில்லைக் கையாள்வதுபோல் சுலபமாக வளைத்தான், அதைப் பார்த்து வியந்த தேவர்கள் பூமாலை தூவிப் பாராட்டினார்கள், மறுகணம், அந்த வில் முறிந்து விழுந்தது, நம் அவையில் உள்ள எல்லாரும் நடுக்கத்துடன் அவனைப் பார்த்தார்கள்!"  என்றாள்.

சீதைக்கு மகிழ்ச்சி. காரணம், 'யாரோ ஒருவன், தம்பியோடும் முனிவரோடும் வந்தான்’ என்கிற வர்ணனை, அவள் மனத்தில் உள்ள அந்த ஆணுக்குப் பொருந்திப்போகிறது. வில்லை முறித்தவன் அவன்தானா என்பது நிச்சயமாகத் தெரியவில்லை. ஆனாலும், அவனாகத்தான் இருக்கவேண்டும் என்று அவளுடைய உள்ளுணர்வுக்குத் தோன்றுகிறது.

மகிழ்ச்சி அடைந்த சீதை "நான் அவனை மனத்தில் நினைத்திருக்கிறேன், உடனே ஒருவன் தோன்றி என்னுடைய சுயம்வர வில்லை முறிக்கிறான், அப்படியானால் இருவரும் ஒருவராகதான் இருக்கவேண்டும்" என்று திருப்தி அடைகிறாள்.

ராமனுக்கும் அதே போன்ற ஒரு குழப்பம்தான். "வில்லை முறித்துவிட்டேன், அதற்காக ஓர் இளவரசியை எனக்குத் திருமணம் செய்து தரப்போகிறார்கள். ஆனால், இந்த இளவரசியும், நான் அன்றைக்குக் கன்னிமாடத்தில் பார்த்த அந்தப் பெண்ணும் ஒருவர்தானா? அதை எப்படி உறுதிசெய்துகொள்வது?"

இதற்கான வாய்ப்பு ராமனுக்கோ சீதைக்கோ உடனே கிடைக்கவில்லை. நெடுநேரம் கழித்து, (கோலம் காண் படலத்தில்) சீதையைத் தசரதன்முன்னால் அழைத்துவந்து அறிமுகப்படுத்தும்போதுதான், அவளும் ராமனும் மறுபடி சந்திக்கிறார்கள்.

ராமன் சீதையை நிமிர்ந்து பார்க்கிறான். குழப்பம் தீர்ந்து மகிழ்ச்சியடைகிறான். அந்தக் காட்சியை ஒரு மிக அழகான பாடலில் அளிக்கிறார் கம்பர்:

அன்னவளை அல்லள் என, ஆம் என அயிர்ப்பான்,

கன்னி அமிழ்தத்தை எதிர் கண்ட கடல் வண்ணன்,

உன்னு உயிர் நிலைப்பது ஓர் அருத்தியொடு உழைத்து ஆண்டு,

இன் அமிழ்து எழக் களிகொள் இந்திரனை ஒத்தான்.

(பாடல் 1146)

சீதையை அங்கே பார்ப்பதற்கு முன்புவரை, ராமனின் மனத்தில் ஒரே தடுமாற்றம், "நான் அன்றைக்குப் பார்த்த பெண்ணும், இப்போது என் மனைவியாகப்போகிற இந்தப் பெண்ணும் ஒருவர்தானா? இல்லையா?" என்று தவிக்கிறான்.

இப்போது, அவளை நேரில் பார்த்தாகிவிட்டது. ‘அவள்தான் இவள்’ என்று ஆனந்தம் அடைகிறான். இங்கே ராமனை இந்திரனுக்கு ஒப்பிடுகிறார் கம்பர்.

இந்திரனுக்கும் ராமனுக்கும் என்ன சம்பந்தம்? பாற்கடலில் அமுதத்தைத் தேடிப் பல காலம் கடைந்தார்கள். அதிலிருந்து அமுதம் எழுந்து வந்தது. அதைக் கண்ட இந்திரன் மகிழ்ந்தான்.

அதுபோல, இன்றைக்குச் சீதை சபையில் எழுந்து நிற்கிறாள். அவளைக் கண்ட ராமனுக்குக் குழப்பம் தீர்ந்தது ஒருபக்கம், இன்னொருபக்கம், அவளைப் பார்த்து உறுதி செய்துகொண்டுவிட்ட காரணத்தால், போன உயிர் திரும்பக் கிடைக்கிறது, அதனால்தான் சீதையைக் ‘கன்னி அமிழ்தம்’ என்கிறார் கம்பர்.

ராமனின் சந்தேகம் தீர்ந்தது, சரி, ஆனால். சீதையின் நிலைமை என்ன?

எய்ய வில் வளைத்ததும், இறுத்ததும் உரைத்தும்,

மெய் விளைவு இடத்து முதல் ஐயம் விடல் உற்றாள்,

ஐயனை அகத்து வடிவே அல, புறத்தும்,

கை வளை திருத்துபு கடைக்கணின உணர்ந்தாள்.

(பாடல் எண் 1153)

"ஒருவன் வில்லை வளைத்தான், உடைத்தான்" என்கிற செய்தி கேட்டதுமே சீதையின் சந்தேகம் பெருமளவு தீர்ந்துவிட்டது. என்றாலும், தன் மனத்தில் உள்ள அவன்தான் இங்கே நிஜத்திலும் இருக்கிறான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள அவள் விரும்பினாள். கையில் இருக்கும் வளையல்களைச் சரி செய்வதுபோல், ஓரக்கண்ணால் ராமனைப் பார்த்தாள், ’அவனே இவன்’ என்று மகிழ்ந்தாள்.

அப்புறமென்ன? காதல் நோயால் வாடிக் கிடந்த சீதையின் உடல் மீண்டும் பழையபடி ஆகிறது. 'ஆரமிழ்து அனைத்தும் ஒருங்குடன் அருந்தினரை ஒத்து உடல் தடித்தாள்’ என்கிறார் கம்பர். ‘அரிய அமுதம்' முழுவதையும் தனி ஆளாகக் குடித்துவிட்டவளைப்போலப் பூரித்துப்போனாள்.

இப்படியாக, அன்றைக்குக் கன்னிமாடத்தில் தொடங்கிய பார்வை நாடகம், இங்கே ஓர் ஓரப்பார்வையில் வந்து இனிதே முடிகிறது!

அடுத்த பதிவில் மீண்டும் கம்பனை ரசிப்போம்.

நான் ரசித்த கம்பன் பாகம் 1

சாளரம்தோறும் சந்திர உதயம்


கம்பனைப்போல் பெண்(களின்) முகத்தை நிலவோடு ஒப்பிட்டு வர்ணிப்பது கம்பனுக்கே உரித்தானது.


காட்சி: பால காண்டம்  

(மிதிலை காட்சிப் படலம்.)

சீதையின் சுயம்வரத்துக்காக விஸ்வாமித்திரர், ராமன் இலக்குவனுடன் மிதிலை நகருக்குள் நுழைகிறார். சுயம்வரத்துக்கு வரும் மன்னர்களையும், வீரர்களையும் காணும் ஆர்வத்துடன், அரண்மனைக்குச் செல்லும் சாலைகளின் இருபுறமும் மக்கள் கூட்டம்.  இருபுறமும் மாளிகைகளின் உப்பரிக்கைகளின் சாளரங்கள் வழியே பார்க்கும் அழகிய பெண்களின் ஒளிபொருந்திய முகங்களை வர்ணிக்கிறான் கம்பன். 

வாளரம் பொருத வேலும்,

மன்மதன் சிலையும், வண்டின்

கேளொடு கிடந்த நீலச்

சுருளும், செங் கிடையும். கொண்டு,

நீளிருங் களங்கம் நீக்கி,

நிரை மணி மாட நெற்றிச்

சாளரம்தோறும் தோன்றும்

சந்திர உதயம் கண்டார்.

 அரத்தால் (file) தீட்டப்பட்ட வேல் போன்ற கூர்மையான விழிகளும், மன்மதனின் வேல் போல வளைந்த புருவங்களும், வண்டுகளின் நிறத்தைப் போன்ற கருநீல மணிச்சுருளும், செந்நிற மணிகளால் ஆன நெற்றிச்சுட்டியும் அணிந்த முகங்கள், முத்து-மணிகளினாலும், ரத்தினங்களினாலும் அலங்கரிக்கப்பட்ட மணி மாடங்களின் நெற்றிப் பகுதியான உப்பரிக்கைகளின் ஒவ்வொரு சாளரத்திலிருந்து பார்க்கும் ஒவ்வொரு பெண்ணின் முகமும் ஒவ்வொரு சந்திரன் உதயமாவது போலவே தோன்றுகிறதாம்.

அதுவும் எப்படிப்பட்ட சந்திரன்? நீளிருங்களங்கம் நீக்கிய, அதாவது, வானத்து நிலவுக்கும் கருமையானதொரு களங்கம் உண்டு. அதுகூட இல்லாமல் ஒளிரும் முகம்.

என்ன ஒரு கற்பனை! எத்தனை அழகிய வர்ணனை!! 

ஒரு கவியரங்கத்தில்நான் முதலில் கேட்ட இந்த ஒரு பாடலே என்னைக் கம்பனிடம் ஈர்த்தது.

அடுத்த பதிவில் மீண்டும் கம்பனை ரசிப்போம்.