Popular Posts

Wednesday, 29 January 2025

திருப்பாவை 26

 *திருப்பாவை பாசுரம் 26*

(மாலே மணிவண்ணா)


இறை அடியார்கள் நாடி வந்தது என்னவென்று கண்ணனிடம் சொல்லி, நித்ய கைங்கர்யம் என்பதான வீடுபேற்றை அருளும்படி வேண்டிக் கொள்ளும் வகையில் அமைந்துள்ள, இறுதி ஐந்தின் தொடக்கப் பாசுரம்.


கோபியர் கிருஷ்ணனிடம் நோன்புக்கு வேண்டி, ஆறு பொருள்களை யாசிக்கின்றனர். அதாவது, சென்ற பாசுரத்தில் (ஒருத்தி மகனாய் பிறந்து) கண்ணனது அவதாரச் சிறப்பை போற்றிப் பாடிய பின், தாங்கள் வேண்டுவதை அருளுமாறு கோபியர் இப்போது பட்டியலிட்டு, நேரடியாகக் கேட்கின்றனர்!


மாலே! மணிவண்ணா! மார்கழி நீராடுவான்,

மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்,

ஞாலத்தை எல்லாம் நடுங்க முரல்வன,

பால் அன்ன வண்ணத்து உன் பாஞ்ச சன்னியமே!

போல்வன சங்கங்கள் போய்ப் பாடுடையனவே,

சாலப் பெரும் பறையே! பல்லாண்டு இசைப்பாரே!

கோல விளக்கே! கொடியே! விதானமே!

ஆலின் இலையாய்! அருளேலோர் எம்பாவாய்!


பாசுர விளக்கம்:

அடியார்களை உன் மீது மயக்கங்கொள்ளச் செய்த மாலனே! நீலமணி வண்ணக் கண்ணனே! எங்கள் குலப்பெரியோர் நீண்ட காலமாக கடைபிடித்து வந்த காரணத்தாலே, நாங்களும் இந்த மார்கழி நீராடலைத் தொடர்கிறோம்! நாங்கள் மேற்கொள்ளவிருக்கும் நோன்புக்குத் தேவையான, பால் போன்ற நிறமுடைய, உலகங்கள் எல்லாம் அதிரும் வகையில் ஒலியை ஏற்படுத்த வல்ல (உன் இடக்கையில் உள்ள) பாஞ்ச சன்னியத்தை ஒத்த வெண்சங்குகளையும், அகலமான பறை வாத்தியங்களையும், பல்லாண்டு பாடுபவர்களையும், அழகிய விளக்குகளையும், கொடியையும், விதானத் துணியையும ஆலின் இலையில் துயில்பவனான நீ, கருணை கூர்ந்து எங்களுக்கு அளிப்பாயாக!]


இடைச்சியர் ஆறுவகைப் பொருட்களை கண்ணனிடமிருந்து யாசிக்கின்றனர் .

1. நோன்புக்குப் பகைமையாக இருப்பவரை நடுங்கி விலகி ஓடச் செய்யும் திருச்சங்கம்  வேண்டும்,

2. நோன்புக்கான புறப்பாடு அறிவிக்க பறை வேண்டும்,

3. புறப்படும்போது எதிரே நின்று காப்பிடுவதற்காகப் பல்லாண்டு பாடுபவர்கள்* அவசியம்,

4. அதிகாலை வேளையாதலால், ஒருவர் முகம் ஒருவருக்குத் தெரிய மங்கள தீபங்கள் தேவை,

5. தொலைவில் இருப்பவர்களுக்குத் தெரிவதற்காக, உயரத் தூக்கிப் பிடிக்கும். கொடியும்,  

6. தலையில் பனி விழாமல் தடுக்க விதானத் துணியும் வேண்டும். (Shamiyana)

இப்படி, அவர்கள் வேண்டியதெல்லாம் சின்னச்சின்ன பொருட்கள் தான். அதுவும், கண்ணனுடன் சேர அவர்கள் மேற்கொண்ட நோன்பிற்காகவே ஆகும்.


இது 26 ஆவது பாசுரம். தத்துவங்களின் வரிசையில், எண் 26 பரமாத்மாவைக் குறிக்கும் தத்துவம். (26 தத்துவ விளக்கத்தை இணைப்பதிவில் காணலாம்)


பாசுர விசேஷம்:

இறைவனடியின் கீழ் என்றுமிருந்து பணி செய்வதான வீடுபேற்றினை அடைய மேற்கொள்ளும் சரணாகதி வழியாகிய, ப்ரபத்தி மார்க்கத்தின் ஆறு அங்கங்கள்:

1) அநுகூல்ய ஸங்கல்பம்:

(இறைவனுக்கு உகந்த செயல்களை மட்டுமே செய்வது என்கிற உறுதி)

2) ப்ரதிகூல்ய வர்ஜன ஸங்கல்பம்:

(இறைவனுக்கு உகந்ததல்லாதவற்றை ஒரு போதும் செய்யாதிருத்தல் என்கிற உறுதி )

3) பலத் த்யாகம்:  

(தான் எனது என்று சுயநலத்தோடு இல்லாமல், யாம் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என்று எவ்வித பலனும் கருதாமல், இறைத்தொண்டில் ஈடுபடுதல்)

4) மஹா விஸ்வாஸம்: 

(இறைவன் காப்பான் என்று உறுதியாக நம்புதல்)

5) கார்பண்யம்:

(அவனன்றி ஓரணுவும் அசையாது என்றுணர்ந்து, எல்லாம் அவன் செயல் என்று அறிதல்.)

6) கோப்த்ருவம்:

(ஆண்டவனிடம் தன்னைக் காப்பாற்றுமாறு கோரிக்கை செய்தல், தொழுதல்) கூடிய ஆத்ம நிக்ஷேபம்- (நம் மனச்சுமைகளை ஆண்டவன் மீது இறக்கி வைத்தல்)


இது இஜ்யா கால பஞ்சகத்தின் கீழ் வரும் பாசுரம் - புறத்தாலே செய்யும் திருவாராதனை (பாஹ்ய ஆராதனம்) என்கிற இறை பூசனைகள் பற்றி குறிப்பிடப்படுகின்றது.

மந்த்ர, திருமஞ்சன, அலங்கார, நைவேத்ய, த்வஜ, பர்யங்காஸன என்கின்ற ஆறு நிலை ஆராதனம் ஆகும்.


நயமான இந்தப் பாசுரத்தைக் கேட்டு கண்ணன் பாஞ்சசன்னியத்தை அனுப்பி வைத்தான், நோன்புக்கு வேண்டி பறையைக் கொடுத்தனுப்பினான். பல்லாண்டு படிக்க பெரியாழ்வாரையும் நம்மாழ்வாரையும் அனுப்பினான். மங்கள தீபமாக நப்பின்னைப் பிராட்டியை உடன் அனுப்பினான். கொடியாக கருடன் வந்தான். விதானமாக ஆதிசேஷன் வந்தான். எல்லாவற்றோடும் பரமனோடு சேரும் தருணம் நெருங்கியது இடைச்சியருக்கு!


இந்த 26வது பாசுரம். உபநிடதங்கள் கூறுவதுபோல் சர்வேஸ்வரனை 26வது தத்துவமாகக் கூறுகின்றன. முதல் 24 தத்துவங்கள் சரீரம் சம்பந்தப்பட்டவை. 25வது தத்துவம் ஜீவாத்மா. அந்த ஜீவாத்மாவானது, மோக்ஷ சித்திக்கு தடையாக இருக்கின்ற 24 சரீர தத்துவங்களை வென்று, அதாவது அந்த 24 படிகளைக் கடந்து, பரமாத்மாவை அடைய வேண்டியிருப்பதை உட்கருத்தாகக் கொண்டுள்ளதாகப் பெரியோர் கூறுவர். [காஞ்சிபுரம் அத்திகிரி பேரருளாளனைச் சேவிக்க 24 படிகளைக் கடந்து தாண்டும் 25வது தத்வமாக ஜீவாத்மா உள்ளது.]


மார்கழி நீராடுவான், மேலையார் செய்வனகள்: என்று கண்ணனிடம் கோபியர் கூறும்போது, தாங்கள் மார்கழி நோன்பிருப்பதற்குக் காரணம், தாங்கள் கற்றறிந்தது வாயிலாக அல்ல என்றும், தங்கள் முன்னோர்களின் பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதை கடமையாகவும், பெருமையாகவும் கருதுவதால் மட்டுமே, என்றும் குறிப்பில் உணர்த்துகின்றனர். நம் அன்னை கோதை ஆண்டாள் பாரம்பரியப் பெருமைகளைக் கட்டிக் காப்பதுவும், சான்றோரின் பழக்க வழக்கங்களை கடைபிடிப்பதுவும் அவசியம், என்று இப்பாசுரத்தில் வலியுறுத்துகிறாள்.


ஆலின் இலையாய் அருளே:

ஆண்டாள் மற்றும் அவளது தோழியர்கள் உன் "ஸ்ரீபாஞ்சஜன்யம்" போல் பல சங்குகள் வேண்டும் என்று கூறுகிறாளல்லவா? "மற்றதெல்லாம் தரலாம் ஆனால் பாஞ்சஜன்யம் ஒன்று தானே உள்ளது, அதைப் போல் வேறில்லையே அதற்கு நான் என்ன செய்வேன்?" என்று கண்ணன் பதிலளிக்கவும், "நீ பெரிய மாயக்காரன், மாயகண்ணனே! அண்டங்களையெல்லாம் வயிற்றில் அடக்கியதோடல்லாமல், ஒன்றுமறியாத பாலகனாய் ஒரு சிறு ஆலிலையில் (வடபத்ரசாயீ) துஞ்சியவன் தானே நீ ! இவ்வளவு செய்கிறாய் இதைச் செய்ய மாட்டாயா? உலகில் இல்லாத ஒன்றைக் கூட உன்னால் உண்டாக்கிக் தர இயலும், அப்படியிருக்க உன் ஸ்ரீபாஞ்சஜன்யம் போல் சங்குகளும் இன்னும் நாங்கள் விழையும் நோன்புக்கருவிகளையும் உன்னால் தர இயலாதா?" என கண்ணனிடம் சரண்புகுகின்றனர்.


மேலையார் செய்வனகள் வேண்டுவன கேட்டியேல்:

ஸ்ருதி (வேதம்) வாக்கியங்களை அறிந்து கொள்வது கடினம். எனவே நிறைய மஹரிஷிகள், ஸ்ம்ருதி இயற்றியுள்ளார். யாக்ஞயவல்க்யர், பராசரர், மனு மற்றும் பலர். ஆனால் அதுவும் நடை முறையில் கடினம். உன் வம்சத்தில் முன்னோர்கள் செய்ததை நீயும் செய் என்கிறாள்.


ஆலினிலையாய்:  தர்க்கப்படி ஆராய்ந்தால் இளம் தளிர் கண்ணனைத் தாங்குகிறதா? கண்ணன் இளந்தளிரைத் தாங்குகிறானா? இளம் தளிருக்கே ஆதாரம் பகவான்தான்.

ஒரு சமயம் மார்க்கண்டேய மகரிஷி கடலில் ஆலிலையில் சயனிக்கும் எம்பெருமானைப் பார்த்தார். அக்குழந்தையைத் தொட அருகில் வந்தார். அப்போது அக்குழந்தை தன் மூச்சை இழுத்து அவரைத் தன வயிற்றுக்குள் செல்ல வைத்தது. அந்த வயிற்றினுள் சகல ப்ரஹ்மாண்டங்களையும் கண்டார். ஆச்சரியம் அடைந்து ஆனந்தப் பட்டபோது எம்பெருமானின் மூச்சுக் காற்றால் வெளியே தள்ளப் பட்டார். பின் ஆஸ்ரமத்தில் பழையபடி அமர்ந்திருந்தார்.

சமுத்திரம், ஆலிலை, குழந்தை எல்லாம் மறைந்து விட்டது.


மேற்கூறியவற்றுள், பாலன்ன வண்ணத்துள் என்பது பிராதிகூல்ய வர்ஜனத்தையும், சாலப்பெரும்பறை என்பது ஆனுகூல்ய ஸங்கல்பத்தையும் குறிப்பதாக, வேறு சிறப்பான விளக்கங்களையும் உரைப்பதுண்டு. பறை என்பது நோன்பைக் குறிக்கும். முன்னோர் காட்டிய வழியைக் கடைபிடித்து, எம்பெருமானுக்கு அனுகூலராக இருத்தல்;

 சாலப்பெரும்பறை - மிகப்பெரிய நோன்பு. மேலும் போய்ப்பாடுடையனவ   என்பது எல்லா விஷயங்களிலும் பிராதிகூல்யத்தை (பகவானுக்கு உகப்பில்லாததை) விட்டு விட பரந்து, விரிவாக அனுஷ்டிக்கப்பட வேண்டும் என்பது இப்பாசுரத்தின் ஆழ்ந்த உட்கருத்தாகும்.


நாளை, இவர்கள் நோன்பு முடித்து, அதன் பலனாக கண்ணனையே பறையாகக் கேட்கும் 27வது பாசுரத்தை, (முழுவதும் மூட நெய் பெய்த அக்கார அடிசிலுடன்!!) அனுபவிப்போம்.


ஆண்டாள் திருவடிகளே சரணம்,

ஸர்வம் ஸ்ரீ கிருஷ்ணார்ப்பணம்.


அடியேன்,

No comments:

Post a Comment