திருப்பாவை பாசுரம் 28
(கறவைகள் பின் சென்று)
சென்ற பாசுரத்தில் (கூடாரை வெல்லும் சீர் கோவிந்தா!) கோபியர், ஆபரணங்கள் ஆடைகள், பால் சோறு போன்றவற்றைக் கண்ணனிடம் கேட்டதால், அம்மாயவன், "நீங்கள் அழியக்கூடிய சிற்றின்பங்களை என்னிடம் வேண்டுவது போல் தோன்றுகிறதே" என்று புன்னகைக்க, கோபியர் அதற்கு பதிலாக, தங்களது உள்ளார்ந்த விருப்பம், கண்ணனுக்கு கைங்கர்யம் செய்து எப்போதும் அவன் உடன் இருப்பதே என்று கூறுவதாக இப்பாசுரம் அமைந்துள்ளது சிறப்பு ஆகும். சரணாகதித்துவத்தின் பெருமையை இப்பாசுரம் சொல்வதை விட அருமையாக விளக்க முடியாது.
கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்,
அறிவொன்றுமில்லாத ஆய்க்குலத்து உந்தன்னைப்
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்,
குறைவொன்று மில்லாத கோவிந்தா! உன் தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது,
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன் தன்னைச்
சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே,
இறைவா! நீ தாராய் பறையேலோ ரெம்பாவாய்.
பாசுர விளக்கம்:
"பசுக்களை மேய்த்து, காடு சென்று, அங்கு ஒன்று கூடி உண்டு உடல் வளர்ப்பவர்களும், ஞானமிலாத சொற்ப அறிவு படைத்தவர்களும் ஆன நாங்கள், எங்கள் பழந்தமிழ் தொல்குடியான ஆயர் குலத்தவனாக உன்னைப் பெற்றடைய பெரும் புண்ணியத்தைச் செய்துள்ளோம். யாதொரு குறையும் இல்லாத 'கோவிந்தன்' என்னும் பெயரினைக் கொண்ட கண்ணபிரானே!"
"உன்னுடன் நாங்கள் கொண்டுள்ள உறவை யாராலும் எக்காலத்திலும் பிரிக்க முடியாது. அற்ப அறிவுடைய, சூதுவாது தெரியாத சிறுமியரான நாங்கள், உன்னிடம் கொண்டுள்ள மிகுந்த அன்பினால் உன்னை (நாராயணன், மாயன், மாதவன் போன்ற பெயர்களிட்டு) ஒருமையில் அழைத்தமைக்கு கோபித்துக் கொள்ளாமல், நாங்கள் வேண்டி வந்த பொருட்களை நீ தந்தருள்வாயாக!" என்கிறாள்.
கண்ணனுக்குத் தர தங்களிடம் ஏதும் இல்லை என்ற தங்கள் "கை முதல் இல்லா" தன்மையை இடைச்சியர் "கறவைகள் பின் சென்று கானம் சேர்ந்துண்போம்" என்று முதலடியிலேயே சொல்லி விடுகின்றனர்! ஒரு விதத்தில் ஶ்ரீஆண்டாள் நாச்சியாரின் ஆற்றாமை இப்பாசுரத்தில் இழையோடுகிறது.
அவர்கள் கேட்பது, “உந்தன் கருணைக்கு குறைவுண்டோ? எங்கள் குற்றம் குறைகளை மன்னித்து, நாங்கள் விரும்புவதை அருளி, எங்களை உன்னுடன் சேர்த்துக் கொள்" என்று சரணாகதியின் உன்னதத்தை கோபியர் வெளிப்படுத்துவதாக கோதை நாச்சியார் இயற்றியுள்ள இப்பாசுரம், வைணவப் பெருந்தகைகளால், மிகவும் சிலாகிக்கப்பட்ட ஒன்றாகும்!
இப்பாசுரத்தில் கோபியர் மூன்று முறை, பேரன்பில் கண்ணனை ஒருமையில் விளிக்கின்றனர். அதாவது,
1) உன்றன்னைப் பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்.
2) உன்றன்னோடு உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது.
3) அன்பினால் உன் தன்னைச் சிறு பேரழைத்தனவும் சீறி யருளாதே.
துயிலெழுந்து கோபிகைகளை அரவணைத்துக் கொண்ட கண்ணன், "நான் உங்களுக்கு நீங்கள் கேட்டதையெல்லாம் அளிக்கிறேன், பதிலுக்கு நீங்கள் என்ன கொண்டு வந்திருக்கிறீர்கள்” என்று கேட்க அதற்கு பதிலளிக்கும் விதத்தில் ஆண்டாள் இயற்றிய இந்தப் பாசுரம் மிக உயர்ந்த பொருட்செறிவு கொண்டது.
இந்தப் பாசுரமும், அடுத்து வரவிருக்கும இருபத்தொன்பதாம் பாசுரமும் ஶ்ரீவைஷ்ணவ நெறியின் மந்திர இரத்தினம் என்று கொண்டாடப்படும் "த்வய மந்திரத்தின்" விளக்கப் பாசுரங்கள். முதல் பாசுரத்தில் "நாராயணனே நமக்கே பறை தருவான்" என்று சொன்னதற்கான ஆழமான விளக்கமாக இந்த இரண்டு பாசுரங்களும் அமைகின்றன.
அதாவது, இறைவனே அடையத் தக்கவன், - ப்ராப்யம், உபேயம். அவனை அடைகின்ற வழியும் அவனே, ப்ராபகம் உபாயம். ஸம்ஸாரமென்னும் கடலைக் கடப்பதற்கு ஜீவாத்மாக்களுக்குப் படகாக இருப்பவனும் ஆண்டவனே, அந்தக் கடலைக் கடந்து, ஜீவர்கள் அடையக்கூடிய பரமாத்ம நிலையும் ஆண்டவனே! வழியாகவும், வழி சென்று சேர்க்கும் இடமாகவும் ஒரு பயணம் உண்டென்றால் அது ஜீவாத்மா பரமாத்மாவை அடையும் பயணமே!
இப்பாசுரத்தில் தான் ஆண்டாள் முதன்முதலாக 'இறைவன்' என்ற சொல்லைப் பயன்படுத்துகிறாள் . "நாங்கள் பறையும், பரிசுகளும் வேண்டி உன்னைத் தொழுது வந்ததெல்லாம் உனக்குக் குற்றேவல் செய்யவே அன்றி வேறொன்றும் இல்லை" என்று கண்ணனிடம் உளப்பூர்வமாகத் தெரிவிக்கிறாள். "அறிவற்ற எங்களின் பிழைகளைப் பொறுத்து எங்களுக்கு அருள் செய்" என்று மன்றாடுகிறாள். "எங்களிடம் பல குறைகளிருப்பினும், உன் கருணைக்கு ஒரு குறைவுமில்லை ஆதலால் எங்களைக் காத்தருள் கோவிந்தா" என்று கோவிந்த நாமத்தைக் கொண்டாடும் பாசுரம்.
ஆகிஞ்சன்யம் (கையறு நிலை), நைச்சியம் (தங்கள் சிறுமையை உணரும் அறிவு), பரமனின் ஸௌலப்யம் (அனைத்து அடியவராலும் சுலபமாக அடையத் தக்கவன் இறைவன் எனும் தெளிவு), பரத்துவம் (நாராயணனே இறையென அறிதல்), ஜீவாத்மா-பரமாத்மாவுக்கு உள்ள சம்பந்தம், அபராத க்ஷமணம்: (நம் தவறுகளை இறைவன் மன்னிப்பான் என்ற தெளிவு), சித்தோபாயம் -பரமனை அடைவதற்கு ஆகிய பரமனே வழி என்று தெளிதல் என்றிவையான இறைவனை சரணாகதி செய்வதற்கான அறிவுத்தெளிவுகள், போன்ற ஏழு நிலைகளை இப்பாசுரம் விளக்குகிறது.
த்வயத்தின் முதல் வரியின் விளக்கத்தை, அடியவர் இறைவனை அடையத் தாமாக செய்ய வேண்டியது என்ன என்பதற்கான விடையை இப்பாசுரம் கொண்டுள்ளது. இறைவனை அடைவதற்குத் தாங்கள் செய்யக்கூடியது சரணாகதி மட்டுமே என்று அறிவிக்கும் பாசுரம். வைணவ நெறியின் இரஹஸ்யத் த்ரயத்தின் மிக முக்கியமான மந்த்ரமான த்வய மந்திரத்தின் முதல் வரியின் விளக்கமே இப்பாசுரத்தின் உட்பொருள். (இரண்டாவது வரி அடுத்த பாசுரம்). த்வயத்தின் முதல் வரி (ஸ்ரீமன் நாராயண ஶரணெள சரணம் ப்ரபத்யே)
கறவைகள் பின்சென்று கானம்சேர்ந்து உண்போம்: "இறைஞானமெல்லாம் அறியக்கூடிய வாய்ப்பினை நல்கும் அறிஞர்களின் நட்பெதுவும் எங்களுக்கு இல்லை. வாய்பேசாத ஆநிரைகள் மேய்த்துண்ணும், மாலையானதும் மேய்ச்சல் முடித்து வீடு திரும்பி அடையும் சாதாரணர்கள்.
ஆகையினாலே அறிவு பெறுவதற்கு நாங்கள் விரும்பினாலும் அதற்கான வழியே இல்லாதவர்கள் நாங்கள்!" என்று தங்களைப் பற்றி அறிவித்துக் கொள்கிறாள் ஆண்டாள்.
அறிவு ஒன்றும் இல்லாத ஆய்க்குலத்து:
"உங்களுக்குத் தான் அறிவில்லை, உங்கள் குலத்திலாவது யாருக்காவது அறிவுண்டா?" எனக் கண்ணன் கேட்க அப்படியும் இல்லையென்று கூறுகிறார்கள். சரி தவறுகள் என்னவென்றெல்லாம் தெரியாதவர்கள், சூது வாதற்றவர்கள், இறைஞானம் பெறாதவர்கள் எங்கள் குலத்தினர் என்கிறீர்கள். "நீங்களே பிறவியில் அறிவு பெறாவிட்டாலும், பெரியோர் கூறியிருக்கும் கருத்துகளைப் படித்தாகிலும் இருக்கிறீர்களா?" என்றால் இல்லையென்றே கூறுகிறார்கள். "எங்களைப் பற்றிய அறிவே எங்களுக்கு இல்லை, இதில் இறையறிவு எங்கிருந்து வருவது?" என்று கூறுகிறார்கள்.
உந்தன்னைப் பிறவி பெறுந்தனைப் புண்ணியம் யாம் உடையோம்: என்னதான் பெருமையென்று பார்த்தால், ஆயர்குலத்தில் கண்ணன் தோன்றியதே பெருமை. "எங்களுக்கு அறிவெதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் எங்கள் மத்தியில் நீ வந்து தோன்றி பெருமை செய்கின்ற அளவுக்குப் புண்ணிய பலன் எங்களுக்கு இருக்கிறது. அது தான் கண்ணா எங்களுக்கு இருக்கும் ஒரே ஏற்றம் !" என்கிறார்கள். இறைவனே நமக்கு இரங்கி (ஸௌஸீல்யம்) நம்மிடையே வருகின்ற எளிமைத்தன்மையும் (ஸௌலப்யம்) சுலபமாய் அவனை அண்டிப் பணிய நமக்கிருக்கும் வாய்ப்பையும் குறிக்கிறது.
குறையொன்றுமில்லாத கோவிந்தா:
எங்களிடம் மேற்கண்ட குறைகளிருந்தாலும், எமக்கருளும் உன்னிடம் ஒரு குறைவும் இல்லை, இறைவா! கண்ணனைக் காண வந்த ஆய்ச்சிகளுக்கு அவன் என்ன இப்படிக் கேள்வி கேட்டு ஆராய்கிறானே என்று தோன்ற, ஆண்டாளும் "கண்ணா, எங்களிடம் நீ நிறை குறை என்று பார்த்தால் பற்பல குறைகள் இருக்கிறது. எங்களை, எங்கள் தகுதியைப் பார்த்து ஏற்றுக் கொள்ளவும், தள்ளி விடவும் எண்ணாதே ! எங்களிடையே வந்து நீ தோன்றியிருந்தாலும், எங்களைப் போன்ற குறைகள் உன்னிடம் இல்லையே இறைவா! குறைவாயிருப்பவர்களுக்கு, குறையொன்றுமில்லாமல் நிறைய இருப்பவர்கள் தருவது தானே முறை?" என்கிறாள்.
எங்கள் எல்லோரையும் காப்பவன் என்பதால் கோவிந்த நாமத்தைப் பெற்றவன் ஆயிற்றே?" அவனே அடையும் இடமாகவும் (ப்ராப்ய), பயணிக்கும் வழியாகவும் (ப்ராபக) இருக்கும் ஒருமித்தத் தன்மையினை (ஸங்க்ரஹம்) இச்சொல்லாடல் உணர்த்துகிறது. அவன் அருளாலே அவன் தாள் வணங்கி என்பது போலே.
உறவேல் நமக்கு இங்கு ஒழிக்க ஒழியாது: "நாங்கள் எல்லோரும் உன்னைச் சேர்ந்தவர்கள். அப்படியே நாங்கள் குற்றங்குறை செய்திருந்தாலும், எங்கள் மீது சினங்கொண்டு நீ தண்டிக்க முற்பட்டால், அது உன்னில் ஒரு பகுதியையே கடிந்து கொள்வதாகாதா? இதை உன்னாலும் கூட மறுக்கவோ, மாற்றவோ முடியாதே! "இற்றைக்கும் ஈரேழ் பிறவிக்கும் இறைவன் ஒருவனே நம் உறவு, அது என்றும் மாறாது. கண்ணனே இறைவனென்று உணர்ந்து கொண்டார்களல்லவா?
அறியாத பிள்ளைகளோம்:
ஆணவத்தினால் அல்லாமல் ஆண்டவன் மீதில் அவர்களுக்கு இருக்கும் அன்பினால் ஏற்பட்ட உரிமையினால் அவ்வாறு செய்வதும், அப்படியானவர்களின் கர்ம ஞான பக்தி யோகங்கள் எதுவும் தெரியாத, உலக வழக்கங்கள் அறியாத நிலையும் குறிக்கப்படுகின்றது.
அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனவும்: பெரியனவாம் மறைகளுக்கும், பெரியவனான உன்னை எளிமையாக நீயாரென்று தெரியாமல், உன்மேல் கொண்ட அன்பு மிகுதியால் இறைவனான உன்னை நாராயணனென்றும், கண்ணனென்றும்,மாயன், மாதவன், தாமோதரனென்றும், பெயரிட்டு ஒருமையில் அழைத்தோம். இது அறியாமையாலும், சிறுவயதின் காரணமாகவும், அன்பினால் ஏற்பட்ட பிழைகள், இவற்றைக் கண்டு கோபம் கொள்ளாமல் மன்னித்துவிடு என்று கேட்கிறார்கள்.
கோவர்தன மலையைக் குடையாய்த் தாங்கி கோகுலத்தைக் காத்த பின்னே, கண்ணனுக்கு மிகவும் உயர்ந்ததான கோவிந்த நாமத்தைச் சூட்டி, இந்திரனே "ஶ்ரீகோவிந்தராஜ பட்டாபிஷேகம்" செய்த பின்னே வேறு பெயர்களைச் சொல்லி அழைப்பது தவறல்லவா?
அறியாத பிள்ளைகளோம்:
(அன்பினால் உந்தன்னை சிறுபேர் அழைத்தனவும்) என்ற கோதையின் கீதையின் இந்த வரி, ஶ்ரீகண்ணனின் கீதையில் அர்ச்சுனன் ஶ்ரீகண்ணனிடம் கோரும் மன்னிப்பின் சாயலே என்பர் நம் பூர்வர்கள்.
ஸகே2தி1 மத்1வா ப்1ரஸப4ம் யது3க்1த1ம் ஹே க்1ருஷ்ண ஹே யாத3வ ஹே ஸகே2தி1 |
அஜானதா1 மஹிமானம் த1வேத3ம் மயா ப்1ரமாதா3த்1ப்1ரணயேன வாபி1 ||
_ (பகவத் கீதை 11:41)
[இப்படிப்பட்ட நின் பெருமையை அறியாமல், நின்னைத் தோழனென்று கருதித் துடிப்புற்று, ‘ஏ கண்ணா, ஏ இடையா, ஏ தோழா’ என்று தவறுதலாலேனும் அன்பாலேனும் நான் சொல்லியிருப்பதையும்,]
யச்சாவஹாஸார்தமஸத்க்ருதோऽஸி
விஹாரஸ²ய்யாஸநபோ⁴ஜநேஷு।
ஏகோऽத²வாப்யச்யுத தத்ஸமக்ஷம்
தத்க்ஷாமயே த்வாமஹமப்ரமேயம்।। (பகவத் கீதை 11:42)
[விளையாட்டிலும், படுக்கையிலும், இருப்பிலும், உணவிலும், தனியிடத்தேனும், அன்றி (மற்றவர் முன்னேயெனினும்) நான் உனக்கு வேடிக்கையாகச் செய்திருக்கும் அவமதிப்புகளையும் அவற்றையெல்லாம் பொறுக்கும்படி வேண்டுகிறேன் அளவற்றோய்!]
சீறி அருளாதே: அறிவற்று நாங்கள் செய்த அச்செயலால் எங்களைக் கோபிக்காதே. இறைவா நீ தாராய் பறை, சீறுவது இறைத்தன்மையல்லவே! பொறுத்து அருள்வது தானே இறையியல்பு? நீயே எங்களைக் காக்கும் இறைவனாகையால், எம்மை மன்னித்துக் கருணையுடன் அருள் செய். நைச்சியமாகப் பேசி, "நீ பெரியவன் கண்ணா, நாங்கள் அறிவிலிகள். நீயே எம்மை மன்னித்துப் பறையென்னும் கருவியைத் தருவாய்!" என்று கேட்கிறார்கள்.
பரமாத்மாவுக்கும் ஜீவாத்மாவுக்கும் அழியாது இருப்பதான நவ (ஒன்பது) வித சம்பந்தம் பற்றிக் கூறப்படுகிறது.
பரமாத்மா-ஜீவாத்மா இடையேயான நவவித சம்பந்தமாவன:
1) பிதா - புத்ர, (தந்தை-மகவு),
2).பர்தா - பார்யா (கணவன்- மனைவி)
3) இரக்ஷக - இரக்ஷ்யக (காப்பவன்- காக்கப்படுபவர்)
4) சேஷி - சேஷ (ஆண்டான்- அடிமை)
5) ஞேயம் - ஞேயர் (அறியப்படுபவர் -.அறிபவர்)
6) ஸ்வாமி - ஸ்வ (உரிமையுள்ளவர் - உரிமைப்பொருள்)
7) ஆதாரம் - ஆதேயம் (தாங்குபவர் - தாங்கப்படுபவர்)
8) சரீரி - சரீரம் (ஆத்மா - உடல்)
9) போக்தா - போக்யா (அனுபவிப்பவர்-அனுபவிக்கப்படுபவர்)
கடந்த “எல்லே இளங்கிளியே” என்னும் 15ம் பாசுரத்தில், பாகவத தாஸ்யம் (அடியவர்க்கு அடியவர்) பற்றி பார்த்தோம். நாளை 29ம் (சிற்றஞ் சிறுகாலே) பாசுரத்தில் பகவத் தாஸ்யம் பற்றிப் பார்ப்போம். இந்த இரண்டு (15, 17) பசுரங்களும் திருப்பாவையின் இரண்டு கண்களாகப், பெரியோர்களால் போற்றப்படுகிறன.
ஆண்டாள் திருவடிகளே சரணம்,
ஸர்வம் ஸ்ரீ க்ருஷ்ணார்ப்பணம்,
அடியேன்,
No comments:
Post a Comment